Monday, September 2, 2024

குரங்கு பெடல் ❤️


ஏறக்குறைய அனைத்து குழந்தைகளின் கைகளிலும் மொபைல் போன்கள் வந்துவிட்டாலும் சைக்கிள் மீதான பிரியம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. முன்பைப் போல இடவசதி இல்லாவிட்டாலும் கூட அடம் பிடித்தாவது சைக்கிள் வாங்கி விடுகிறார்கள், குழந்தைகள். இப்படியான சூழலில் எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் 'குரங்கு பெடல் '.


குழந்தைகளையும் சைக்கிளையும் பிரிக்க முடியாது. சைக்கிளுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள பிணைப்பை 80 களின் காலப் பின்னணியில் அழகியலுடன் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம். குரங்கு பெடல் என்பதையும், வாடகை சைக்கிள் என்ற நடைமுறையும் இப்போதைய தலைமுறைக்குத் தெரியாது. இத்திரைப்படத்தைக் காணும் போது அவர்களும் தெரிந்து கொள்வார்கள். 


இத்திரைப்படத்தில் சைக்கிளுடன் அப்பாவிற்கு நேர்ந்த அனுபவமும், மகனிற்கு கிடைத்த அனுபவமும் வெவ்வேறானவை. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் காண வேண்டிய திரைப்படம். அப்படி குழந்தைகளுடன் சேர்ந்து காணும் போது சைக்கிளுடனான தங்களது கடந்த கால நினைவுகளை அசை போட முடியும். 


கதைக்குத் தேவையே இல்லாத , குழந்தைகளும் பார்ப்பார்கள் என்ற குறைந்தபட்ச பொறுப்புணர்வு கூட இல்லாமல் அதீத வன்முறைக் காட்சிகள் இன்றைய திரைப்படங்களில் திணிக்கப்படும் சூழலில், அமைதியான சூழலை அழகாக படம்பிடித்து அனைவரும் ரசித்து பார்க்கும்படி செய்திருக்கிறது இந்த 'குரங்கு பெடல்'.


சைக்கிள் மீதான காதல் நமக்குத் தீர்வதேயில்லை. நாம் வெவ்வேறு வாகனங்களில் பயணித்தாலும் இப்போதும் சைக்கள் வாங்க வேண்டும், சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கும். எங்கு இருந்தாலும், என்ன பணி செய்தாலும் தினமும் சைக்கிள் ஓட்டுவதை தவற விடாதவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். சைக்கிள் ஓட்டுவது உடலுக்கும் இயற்கைக்கும் நல்லது. 


இந்தத் திரைப்படத்தைக் காணும் போது இன்னும் நிறைய விசயங்களைச் சேர்த்திருக்கலாமோ என்று கூட தோன்றும். சிறுகதையை திரையனுபவமாக மாற்றியிருப்பதால் அதற்குள்ளாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார்கள். இலக்கிய படைப்புகள் திரைப்படங்களாவதும், இரண்டு மூன்று பேர் சேர்ந்து திரைக்கதை எழுதுவதும் மிகவும் ஆரோக்கியமான விசயம். 


இன்றைய திரைப்படங்களில் குழந்தைகள் குழந்தைகளாக காட்டப்படுவதில்லை அல்லது குழந்தைகளே இல்லை. இந்தச் சூழலில் குழந்தைகளுக்காக, குழந்தைகளுக்கான திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கமலக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள். கமலக்கண்ணன் இயக்கிய 'மதுபானக்கடை' திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் இப்போதாதவது பார்த்து விடுங்கள்.உங்களுக்கு நல்லதொரு திரையனுபவம் கிடைப்பது உறுதி. இவரது 'வட்டம்' திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. அடுத்து அதையும் காண வேண்டும். 


நல்ல சிறுகதை, நல்ல ஒளிப்பதிவு, நல்ல இசை, நல்ல இயக்கம் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


மேலும் படிக்க  :


அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !


சேத்துமான் ❤️

Amar Singh CHAMKILA ❤️❤️❤️


இரட்டை அர்த்தப் பாடல்களை எழுதி, இசையமைத்து,பாடி அதன் மூலம் பெரும் புகழ் பெற்றவர், பஞ்சாப் பாடகர், அமர்சிங் சம்கிலா. அதற்காகவே தனது 27வது வயதில்(1988) அடையாளம் தெரியாத நபர்களால் மனைவியுடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அற்புதமான திரைப்படம் தான், 'அமர்சிங் சம்கிலா'.  


புனிதம் என்று எதுவும் பூமியில் இல்லை. மதக்கோட்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கும் அடிப்படைவாதிகள்தான் புனிதம், புனிதம் என்று தொடர்ந்து கூவிக் கொண்டேயிருக்கிறார்கள். மாற்றம் என்பதே நிலையானது. இதை அடிப்படைவாதிகள் ஏற்பதில்லை. அடிப்படைவாதிகளை வளர்த்து பாதுகாக்கும் வேலையை அனைத்து மதங்களும் தொடர்ந்து செய்து வருகின்றன. அதிலும் ஆயுதம் ஏந்திய அடிப்படைவாதிகள் எப்போதும் ஆபத்தானவர்களே. இதனால் தான் கார்ல் மார்க்ஸ் " மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான முதல் தேவை, மதங்களை அழிப்பது " என்று சொல்லியிருக்கிறார். மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையில் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் தேவையில்லை.


சம்கிலா, தான் பிறந்து வளர்ந்த சூழலலாலேயே இப்படியான பாடல்களை எழுதவும், பாடவும் செய்கிறார். இந்தப் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து இரட்டை அர்த்தப் பாடல்களையே பாடியே புகழ் பெறுகிறார். நன்றாக பாடும் திறமையுள்ளவர் என்பதாலேயே தனது முதல் திருமணத்தை மறைத்து 

அமர்ஜ்யோத் எனும் பாடகியை திருமணம் செய்து கொள்கிறார். அந்த காலத்தில் இங்கே என்.எஸ்.கிருஷ்ணனும் தனது முதல் திருமணத்தை மறைத்துவிட்டு டி.ஏ. மதுரத்தை திருமணம் செய்து கொண்டது நினைவிற்கு வருகிறது.


எல்லா நாட்டு கலை வடிவங்களிலும் பாலியல் சார்ந்த குறியீடுகளும், குறிப்பாக பாடல்களில் இரட்டை அர்த்தங்களும் தொடர்ந்து இருந்து வருகின்றன. வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லோருமே இம்மாதிரியான பாடல்களை ரசிக்கிறார்கள்; கதைகளை தேடித்தேடி வாசிக்கிறார்கள். கலை மக்களுக்கானது . இதில் புனிதம் என்றோ தீட்டு என்றோ எதுவுமில்லை. 


தமிழ் திரையிசைப் பாடல்களில் இரட்டை அர்த்தங்கள் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை அர்த்தம் புரிந்தோ புரியாமலோ கொண்டாடப்பட்டவை. ரசிக்கும் வகையிலான பாடல்களின் எண்ணிக்கையே அதிகம். அந்த அளவிற்கு தமிழ் மொழி இனிமையானது. வெகு சில பாடல்கள் மட்டுமே கொச்சையான மொழியில் எழுதப்பட்டு பாடப்பட்டிருக்கின்றன. கதைகளிலும் கி.ராஜநாரயாணன் தேடித்தேடி சேகரித்த நாட்டார் பாலியல் கதைகள் எல்லாம் பொக்கிஷம். வயதிற்கு வந்த எவரும் இரட்டை அர்த்தப் பாடல்களைக் கேட்கலாம், கதைகளை வாசிக்கலாம், ரசிக்கலாம், வாழலாம். 


மக்கள் தொடர்ந்து விரும்பியதாலேயே எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து இரட்டை அர்த்தப் பாடல்களை பாடுகிறார், சம்கிலா. எதிர்ப்புகள் அதிகரிக்கும் வாழ்வின் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் கடந்தவராகவும், இனி என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற நிலையை எப்படி வந்தடைகிறார் என்பதை இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு கலைஞனாக மாறிய தருணமது. அதனாலேயே இன்று வரை சம்கிலா பஞ்சாபில் கொண்டாடப்படுகிறார். தொடர்ந்து அவரைப் பற்றிய திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சம்கிலா மக்களின் கலைஞன்.


சம்கிலாவாக திலிஜித் தோஸாஞ்ச் அற்புதமாக பொருந்தியிருக்கிறார். இயல்பிலேயே அவர் ஒரு பாடகர் என்பதால் இன்னும் நெருக்கமாக உணர முடிகிறது. சம்கிலாவின் இணையர்,அமர்ஜ்யோத்தாக பரினீதி சோப்ரா நடித்திருக்கிறார். இந்தக் கதாப்பாத்திரத்தில் நாம் பரினீதி சோப்ராவைக் காண முடியாது, அமர்ஜ்யோத்தை மட்டுமே காண முடியும். அந்த அளவிற்கு அந்தக் கதாப்பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். 


ஒரு திரைப்படத்தைப் பார்த்து முடித்தவுடனயே அத்திரைப்படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றுவது அபூர்வம். இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்கும் போது அப்படி தோன்றியது. உடனேயே மீண்டும் ஒரு முறை பார்த்தேன். இப்படி பார்க்கும் முதல் திரைப்படமிது. மற்ற சில படங்கள் பார்க்கும் போது இப்படி தோன்றினாலும் உடனே பார்க்க வாய்ப்பு அமையவில்லை. இந்தத் திரைப்படத்திற்கு அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. அப்படி பார்க்க ஒரே காரணம், இசை - ஏ.ஆர்.ரஹ்மான் என்பது தான். 


தமிழ் ரசிகர்கள் இது ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றே உணர முடியாத அளவிற்கு மாயம் செய்திருக்கிறார். கொஞ்சம் கூட மேற்கத்திய சாயல் இல்லை. தமிழில் பொன்னியின் செல்வன், மாமன்னன் எல்லாம் மேற்கத்திய பாணி இசையால் இயல்பு மாறிய திரைப்படங்கள். தமிழில் அசலான நம் மண் வாசனை வீசும் ஒரே ஒரு திரைப்படம் கூட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இல்லை. இயக்குநர்கள் காரணமா என்றும் தெரியவில்லை. ரஹ்மான் இசைக்காக மட்டுமே கூட நாம் இத்திரைப்படத்தைக் காணலாம்.


சம்கிலா திரைப்படத்தில் பாடகர் சம்கிலாவின் பாடல்களை மறு உருவாக்கம் செய்ததாலோ என்னவோ மொழி புரியாவிட்டாலும் பாடல்களை ரசிக்க முடிகிறது. தனியாகவும் 3 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி இருக்கிறார். அதிலும் கடைசி பாட்டெல்லாம் (மைனே விதா கரோ... ) அற்புதம். 


அமர்சிங் சம்கிலா இவ்வாறு நடத்தப்பட்டதற்கும், கொல்லப்படத்தற்கும் அவர் ஒரு தலித் என்பதும் ஒரு காரணம். இன்று வரை அவரை யார் கொன்றது என்பது தெரியவில்லை.பல முறை மிரட்டிய ஆயுதம் ஏந்திய அடிப்படைவாதிகளா ? சக பாடக போட்டியார்களா ? அவரின் மனைவி, அமர்ஜ்யோத் உயர் சாதி என்பதால் நடத்தப்பட்ட ஆணவப்படுகொலையா? எதுவும் தெரியவில்லை. ஆனால் இன்று வரை பஞ்சாபில் சம்கிலாவின் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. மொழி புரியாவிட்டாலும் அசலான சம்கிலாவும் , அமர்ஜ்யோத்தும் சேர்ந்து பாடிய பாடல்களை கேட்டுப் பாருங்கள். நல்ல அனுபவம். தனித்துவமான குரல்கள். 'Music is the Universal Language ' என்று சொல்வது முற்றிலும் உண்மை.


இயக்குநர் இம்தியாஸ் அலி அவர்களின் அற்புதமான உருவாக்கம். இவரது திரைப்படத்தைப் பார்ப்பது இதுவே முதல் முறை. இவரின் மற்ற திரைப்படங்களையும் காண வேண்டும். கதையின் ஊடாக அடிப்படைவாதம் குறித்தான விமர்சன பார்வையும் முன்வைக்கப்படுகிறது. தமிழ் திரைப்படங்களில் இது அரிது. திரைக்கதையும், கதை சொல்லும் முறையும் அருமை. அங்கங்கே சின்ன சின்ன கார்ட்டூன் காட்சிகள், இரண்டு திரை காட்சிகள் , அசலான சம்கிலா குறித்தான பதிவுகள் என சுவாரசியம் கூட்டி இருக்கிறார். Excellent tribute to phenomenal artist through Art ❤️ 


இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


மேலும் படிக்க :


ஹர்காரா - மண்ணின் கதை !


DAREDEVIL MUSTHAFA - FANTASTIC MAKING !


சூப்பர் சிங்கர் 10 - விஜயகாந்த் ❤️ !


விஜய் தொலைக்காட்சி ஏற்கனவே விஜயகாந்த்-ஐ முன் வைத்து ஒரு 'நீயா? நானா?' நிகழ்ச்சியை நடத்தி அவருக்கு மரியாதை செய்தது. தற்போது சூப்பர் சிங்கர் 10-லும் ஒரு சுற்றை விஜயகாந்த் சுற்றாக ( என்றென்றும் கேப்டன் விஜயகாந்த்) அறிவித்து மிகவும் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது. வணிக நோக்கம் இருந்தாலும் இதையும் மற்றவர்கள் செய்ய தயாராக இல்லை என்பது தான் உண்மை.


விஜயகாந்த் எப்படி பொது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டாரோ அதே போல அவர் நடித்த பாடல்களும் தொடர்ந்து புறக்கணிப்பை சந்தித்து வந்திருக்கின்றன. விஜயகாந்த் நடித்த பாடல்களில் சிறப்பான பாடல்கள் இருந்தாலும் அவை அவ்வளவாக ஒளிபரப்பப்படவில்லை. கமல் , ரஜினி பாடல்களே தொடர்ந்து முன்நிறுத்தப்பட்டன; முன்நிறுத்தப்படுகின்றன. இப்போதும் பெரிய மாற்றமெல்லாம் இல்லை. இப்படியான சூழலில் விஜயகாந்த் பாடல்களை முன் வைத்து ஒரு நிகழ்ச்சி என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. 


நடிகை ராதா, இயக்குநர்கள் அரவிந்தராஜ் மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்குபெற்று விஜயகாந்த் உடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அவை உணர்ச்சிப்பூர்வமான தருணங்களாக அமைந்தன. தொகுப்பாளர் பிரியங்காவும் விஜயகாந்த் மீதான பிரமிப்பை வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். விஜய் தொலைக்காட்சியும் நிகழ்ச்சியின் ஊடாக அவரைப் பற்றிய காணொளி பதிவு, சூப்பர் சிங்கர் ஜுனியர்களை பாட வைத்தது, விஜயகாந்தின் உருவச் சிலையை சிறப்பு பரிசாக கொடுத்தது என தனது பங்களிப்பைச் செய்தது. 


ஏறக்குறைய பாடிய அனைவருமே சிறப்பாகவே பாடினார்கள். பலருக்கும் நல்ல குரல் வளம். விஜயகாந்த் நடித்த திரைப்படங்களிலிருந்து தனிப்பாடல்கள், ஜோடி பாடல்கள், குழு பாடல்கள் இடம்பெற்றன. நல்ல பாடல்கள் தேர்வு. அதிலும் 'என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச...' பாடலெல்லாம் இன்னமும் காதில் கேட்கிறது. இந்தப் பாடலில் இவ்வளவு ரசனையான வரிகள் இருப்பதும் இப்போதுதான் தெரிந்தது. 

சூப்பர் சிங்கர் ஜுனியர்கள் பாடிய பகுதியும் சிறப்பாக இருந்தது.


இந்நிகழ்ச்சியில் முக்கியமான அம்சம் என்பது பாடல்களுக்கு பின்னணியில் இசைக்கருவிகள் வாசித்தவர்கள்தான். சமீப காலங்களில் கேட்டத்தில் சிறப்பான இசை. பாடல்கள் சிறப்பாக அமைந்ததற்கு இவர்களும் ஒரு காரணம். இவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சியின் மற்ற பகுதிகளை பார்க்கும் ஆவல் உருவாகியிருக்கிறது. 


மொத்தத்தில் இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தியதற்கு விஜய் தொலைக்காட்சிக்கு அன்பும் நன்றியும் !


மாமனிதர் விஜயகாந்த் பற்றிய ஆவணப்படம் எடுக்கப்பட வேண்டும். அவருடன் பணியாற்றியவர்கள் இருக்கும் போதே அவரைப்பற்றிய தகவல்களை சேகரித்து ஒரு முழுமையான ஆவணப்படம் எடுக்கப்பட வேண்டும். எந்த ஒன்றையும் ஆவணப்படுத்துதல் என்பதில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். இனிமேலாவது ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை தமிழ் சமூகம் உணர வேண்டும்.


வாய்ப்புள்ளவர்கள் Disney+ HotStar -ல் இப்போதும் காணலாம். விஜயகாந்த் -ஐ பிடித்தவர்களுக்கு இந்நிகழ்ச்சியும் கண்டிப்பாக பிடிக்கும்.

மேலும் படிக்க :

மாமனிதர் - விஜயகாந்த் ❤️

மாமனிதர் - விஜயகாந்த் ❤️




சிகரெட் பிடித்தல், மதுக்குடித்தல் போன்ற தீய பழக்கங்கள் நமது பால்ய காலங்களிலேயே நமக்குப் பழக்கமானவையாக இருக்கின்றன. ஆனால் எனது பால்ய காலங்களில் என்னை, தீய பழக்கங்களிலிருந்து எனக்குத் தெரியாமலேயே காப்பாற்றிவர், விஜயகாந்த் தான். அதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது தான் உணர முடிகிறது. அப்போது தீவிரமான விஜயகாந்த் ரசிகன். விஜயகாந்த் தனது திரைப்படங்களில் மதுக்குடிப்பதையோ, சிகரெட் பிடிப்பதையோ நியாப்படுத்தியிருக்கமாட்டார். அதனால் தானோ என்னவோ அவரைப் பின்பற்றிய நாங்களும் அப்பழக்கங்களை கடைபிடிக்கவில்லை. விஜயகாந்திற்கு பதிலாக ரஜினி அல்லது கமல் ரசிகராக இருந்திருந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு தீயபழக்கத்தைப் பழகியிருப்போம். 


'காந்தி பிறந்த மண் ' என்ற திரைப்படத்திற்குப் பிறகு விஜயகாந்த் ரசிகராக இருக்கவில்லை. என்ன காரணம் என்றும் நினைவில்லை. அதன் பிறகு யாருடைய ரசிகராகவும் இல்லை. அதே சமயம் விஜயகாந்த் என்ற மனிதரின் மீதான மதிப்பு எப்போதும் குறைந்ததில்லை. அவரது கடைசி கால இஸ்லாமிய தீவிரவாத ஒழிப்பு திரைப்படங்களுக்கு முன்பு வரை அவர் தேர்ந்தெடுத்த நடித்த கதாப்பாத்திரங்கள் கண்ணியம் மிக்கவை. நிறைய திரைப்படங்களில் வெள்ளந்தியான பாத்திரங்களில் நடித்திருக்கிறார். 


விஜயகாந்த் எப்போதும் மக்களின் கலைஞன். ரஜினி, கமல் போன்றவர்கள் கவனமாக தவிர்த்த விளிம்பு நிலை மக்களின் கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடித்தவர். மக்களோடு ஒருவராகவே தன்னை அடையாளப்படுத்தியவர். நிஜ வாழ்விலும் அப்படித்தான் இருந்திருக்கிறார். அவர் பேசிய அரசியல் மேடைகளிலும் ஒலித்தது சாமானிய மக்களின் குரல்தான். இப்போது வேண்டுமானாலும் அவர் பேசியதை கேட்டுப் பாருங்கள் உண்மை புரியும். திரையில் செங்கொடியோடு தோன்றியவர் அவர் மட்டும்தான். மக்களில் ஒருவராக , மக்களின் தலைவனாக திரையில் தோன்றினார்.


எம்.ஜி.ஆர்.-ன் அரசியல் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டவை. ஆனால் அவரது திரைப்படங்களிலும், திரையிசைப் பாடல்களிலும் சமதர்ம , பொதுவுடைமை கருத்துகள் நிறைந்திருக்கும். அதே போல மதுக்குடிக்கும், சிகரெட் பிடிக்கும் காட்சிகளை தவிர்த்திருப்பார். தனது திரைப்படங்களிலும் இதே பாணியை விஜயகாந்த் கடைபிடித்தார். இன்று வரை நடித்த நடிகர்களில் அதிக காட்சிகளில் தமிழர்களின் ஆடையான வேட்டி சட்டையுடன் தோன்றியவர், விஜயகாந்த் மட்டுமே. தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா ! என்ற முழக்கத்தை முன்வைத்தவர்.


ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். ஈழத் தமிழர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்தவர். மற்ற உச்ச நடசத்திரங்கள் என்று சொல்லப்படும் எவரும் வெறும் குரல் கூட கொடுத்ததில்லை. ஈழத் தமிழர்கள் விடுதலை பெறும் வரை தனது பிறந்தநாளை கொண்டாட மாட்டேன் என்ற உறுதியோடு இருந்தார். அரசியல் கட்சி தொடங்கும் வரை அதை கடைபிடித்தார். யார் சமரசம் செய்தார்கள் என்று தெரியவில்லை, அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவரது பிறந்தநாள் ' வறுமை ஒழிப்புத் தினமாக ' கொண்டாடப்பட்டது. 


நாடகங்கள் ஆதிக்கம் செலுத்திய ஆரம்ப காலத்தில் பார்ப்பனர்களுக்கு தனியாகவும்,அவர்கள் சாப்பிட்ட பிறகே மற்றவர்களுக்கு தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. இதை முதன் முதலில் உடைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தனது நாடகங்களில் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக உணவு பரிமாறப்பட்டது. இதை தனது வாழ்நாளின் கடைசி வரை கடைபிடித்தார். அவரது குடும்ப விழாக்களில் கூட பிரபலமாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே உணவு பரிமாறப்பட்டது. அதே போல தன்னை தேடி வந்தவர்கள் அனைவருக்கும் உணவளித்தார். யார் என்றே தெரியாத முகமறியாதவர்களுக்கும் அதிகளவில் உதவிகள் செய்தார். இதை எம்.ஜி.ஆரும் பிறகு விஜயகாந்தும் கடைபிடித்தனர். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் அளவிற்கு உதவிகள் செய்தனரா என்று தெரியவில்லை. தமிழக சூழலில் இன்னமும் அதிகம் கொண்டாடப்பட வேண்டியவர், என்.எஸ்.கிருஷ்ணன்.


உணவு சார்ந்த விசயத்தில் விஜயகாந்த் செய்தவை அனைத்தும் தற்போது கொண்டாப்படுகின்றன. திரைப்பட படப்பிடிப்பில் அனைவருக்கும் சமமான உணவு என்பது மிகப்பெரிய விசயம். இன்றும் எத்தனை பேர் இதைக் கடைபிடிக்கின்றனர் என்று தெரியவில்லை. விஜயகாந்த் கல்யாண மண்டபம் போனால் வேண்டிய உணவு நிச்சயம் கிடைக்கும் என்பது திரைத்துறையில், விளிம்புநிலையில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. பலரின் பசி போக்கிய அப்படியான அன்ன சத்திரத்தை இடித்து தள்ளியது , அரசியல். உணவு விசயத்தில் மட்டுமல்ல திரைப்படத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் ஊதியம் முதற்கொண்டு எல்லாமும் சரியாக கிடைத்திருக்கிறதா என்பதையும் உறுதி செய்திருக்கிறார். இதனாலேயே இவருக்கு ' கேப்டன் ' என்ற பெயர் பொருத்தமாக இருக்கிறது.


தேமுதிக வின் கொள்கை என்பது ' மக்களுக்கு நல்லது செய்யனும்' என்பது மட்டும் தான். சூழ்ச்சிகளும், சுயநலமும், துரோகங்களும், பதவி வெறியும், ஆதிக்கத் திமிரும் நிறைந்திருந்த அரசியல் களத்தில் நீடித்திருக்க அது மட்டும் போதவில்லை. விஜயகாந்தைப் போலவே அவரது தொண்டர்களும் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்து தேர்தலில் களம் கண்டார்கள். விஜயகாந்தைப் போலவே அவரது தொண்டர்களுக்கும் பொருளாதார அளவில் இழப்பு தான். பலர் வேறு கட்சிகளுக்கு தாவி விட்டனர். இப்போது தேமுதிக திக்கற்ற நிலையில் நிற்கிறது. ஆதாயத்திற்காக வெகுமக்களுக்கு எதிரான பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. தேமுதிகவைத் தாங்கியது விஜயகாந்த் என்ற ஒற்றைப் பெயர் தான். தற்போது தேமுதிக, கேப்டன் இல்லாத கப்பல். 


அஞ்சா நெஞ்சனாக , நியாயத்திற்கு குரல் கொடுப்பவராக, மனம் முழுவதும் அன்பு நிறைந்தவராக இருந்தவரின் கடைசி காலங்கள் மிகுந்த துயர் மிகுந்ததாக மாறிப்போனது. மீளாத் துயரிலிருந்து அந்த உடல் விடுதலை பெற்றுவிட்டது. அவரது மனம் இங்கேயேதான் இருக்கும். வெறும் வார்த்தைக்காக இல்லை. விஜயகாந்த் செய்த செயல்கள் நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கும். அவர் செய்த செயல்களில் வெறும் ஒரு சதவீத்தை செய்யக்கூட நாம் தயாராக இல்லை என்பது தான் கள யதார்த்தம். 


திரையில் மக்களுக்காக குரல் கொடுத்த நடிகன் !


நிஜத்தில் மக்களுக்காக குரல் கொடுத்த அரசியல்வாதி !


மக்களுக்காகவே வாழ்ந்த மக்களின் தலைவன் !


Swathi Mutthina male haniye ❤️


கன்னட தேசத்திலிருந்து மற்றுமொரு கவிதை இத்திரைப்படம். கன்னடத் திரைப்படங்களின் தரம் கூடிக்கொண்டே போகிறது. கதை, வசனம், ஒளிப்பதிவு , இசை என அனைத்தும் நமக்கு நல்லதோரு அனுபவத்தைக் கொடுக்கிறது. 


திரைப்படத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருப்பவர் கதாநாயகி Siri Ravikumar தான். மிகையில்லாத நடிப்பு. அடுத்து கதாநாயகனாக நடித்திருக்கும் இயக்குநர் ராஜ்.பி‌.செட்டி கவனத்தை ஈர்க்கிறார். அனைத்து கதாப்பாத்திரங்களும் காரணத்துடன் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒரு காட்சியில் வந்தாலும் அழுத்தமான ஒரு விசயத்தைச் சொல்லிச் செல்கிறார்கள். 


ஆர்ப்பாட்டமில்லாத திரைப்படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.


Feel Good Movie


இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


Veyilmarangal ( Trees under the Sun ) !


விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளை, அவர்கள் சந்திக்கும் அரசியலை அழகியலுடன் முன்வைக்கும் திரைப்படம். கதையின் ஊடாக இயற்கையை அவ்வளவு நெருக்கமாக காட்சிப்படுத்தி இருக்கிறார், இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன். இயற்கையை அவதானிக்கும் எவருக்கும் பிஜுகுமார் அவர்களின் திரைப்படங்கள் நிச்சயம் பிடிக்கும். 


எளிய மக்கள் அரசாங்காத்தாலும் துரத்தப்படுகின்றனர். ஆதார் கார்டு இல்லையென்பதால் நிவாரணமும் கிடைக்காது என்கின்றனர். ( இன்றைய சென்னை வெள்ளத்திலும் இது தான் நிலைமை. ரேசன் கார்டு இல்லையென்றால் நிவாரணம் கிடைக்காதாம் ).சொற்ப கூலி கொடுக்கும் நிலப்பிரபுவால் துரத்தப்படுகின்றனர். அப்போது இந்திரன்ஸ் பேசும் வசனம் " நீங்கள் எங்களைத் துரத்துவதால் ஒன்றும் செத்துப் போகமாட்டோம். எங்களின் உடலில் ஆரோக்கியம் உள்ளவரை இந்தப் பூமியில் வாழ்வோம்❤️ ".


இந்த பூமியில் மனித இனம் தொடர்ந்து இயங்க அதிக உடலுழைப்பைக் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்கள்தான். இந்திய அளவில் அவர்கள் சாதியின் பெயராலும் கொடுமைகளை அனுபவிக்கின்றனர். 


மனித இனம் இந்தப் பூமிக்குச் செய்து வரும் அயோக்கியத்தனங்களால் உருவாகி இருக்கும் காலநிலைமாற்ற விளைவுகளால் தங்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்படுபவர்களாக விளிம்புநிலை மக்களே உள்ளனர். இதையும் இயக்குநர் காட்சிப்படுத்தி இருக்கிறார்.


ஆர்ப்பாட்டமில்லாத , அமைதியான மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பு 👍


மேலும் படிக்க :

ADRISHYA JALAKANGAL !

 JANA GANA MANA - பாசிச எதிர்ப்பு சினிமா !

கூழாங்கல் ❤️


நடையின் ஊடாக வெக்கையான நிலப்பரப்பையும் , அங்கு வாழும் அசலான மனிதர்களையும் , அவர்களின் வாழ்வியலையும் முன்வைக்கும் ஒரு மண் மணக்கும் படைப்பு. திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்பதை உணர்ந்து நிறைய விசயங்களை அழகிய திரைமொழியுடன் குறிப்பால் உணர்த்துவது சிறப்பு. தமிழ்த் திரைப்படங்கள் தொடர்ந்து தவறவிடும் விசயமிது. 


எந்தப் படைப்பாக இருந்தாலும் பார்வையாளர்களும் அதில் பங்கெடுத்து ஒரு உரையாடலை அந்தப் படைப்புடன் நிகழ்த்த வேண்டும்.  இந்தத் திரைப்படத்தில் பார்வையாளர்கள் தாங்களே யூகித்துக் கொள்ளும் வகையில் பல காட்சிகள் அமைந்திருக்கின்றன. காட்சி ஊடகமான திரைப்படத்தில் எல்லாவற்றையும் நீட்டித்து விளாவாரியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்,  குறிப்பாக வன்முறையை நீட்டித்து காட்டுவதே தங்களின் கடமை என இருக்கும் இயக்குநர்கள் இதை உணர வேண்டும்.


ஒளிப்பதிவும், பின்னணி இசையும் திரைப்படத்தை மேலும் நெருக்கமாக உணர வைக்கின்றன. அவை  எந்த இடத்திலும் திரைப்படத்தை இடையூறு செய்யவில்லை. சண்டையின் போது பேசப்படும் கெட்ட வார்த்தைகள் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதுவும் திரைப்படத்திற்கு கூடுதல் யதார்த்த தன்மையைக் கொடுத்திருக்கிறது. 


குழந்தைதன்மையுடன்  குழந்தையை திரையில் பார்ப்பது அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. 

கருப்பு வெள்ளை காலத்திற்கு பிறகு தமிழ்த் திரைப்படங்கள் குழந்தைகளை குழந்தைகளாக காட்டாமல் பெரியவர்கள் போலவே காட்டி வருகின்றன. நிறைய படங்களில் குழந்தைகளைக் காட்டுவதேயில்லை , அப்படியே காட்டினாலும் நகைச்சுவை காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இப்படியான சூழலில் இந்த 'கூழாங்கல்' திரைப்படத்தில் முக்கியப் கதாப்பாத்திரமாக ஒரு சிறுவனை குழந்தைத்தன்மை சிதையாமல் காட்சிப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டிற்குரியது.


மொத்தத்தில் நம்மையும் அந்த வெக்கையான நிலப்பரப்பில் நடக்க வைத்த இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉.


1.15 மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய சிறிய திரைப்படம் தான் . வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாக பாருங்கள். 


மேலும் படிக்க:


ஹர்காரா - மண்ணின் கதை !


அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !






ஹர்காரா - மண்ணின் கதை !


நாட்டார் தெய்வங்கள் குறித்தான குறிப்புடன் தொடங்கும் போதே திரைப்படம் நம்மை ஈர்க்கத் துவங்கி விடுகிறது. நாட்டார் தெய்வங்கள் எப்படி மக்களின் வாழ்வியலிலிருந்து தோன்றியிருக்கின்றன என்பதை இத்திரைப்படம் முன்வைக்கிறது. பெரும்பாலும் நாம் நமது முன்னோர்களையும் இயற்கையின் ஏதோ ஒரு வடிவத்தையுமே குலதெய்வங்களாக வணங்குகிறோம். அவையே நாட்டார் தெய்வங்கள்.


" நாட்டார் தெய்வங்கள் எவையும் 'முன்னே வந்து' வரம் தரும் தெய்வங்கள் அல்ல; 'பின்னே நின்று' பாதுகாப்புத் தரக்கூடியன. அவை அழிக்கும் ஆற்றல் அற்றவை. மாறாக வயல் களத்திலும், அறுவடைக் காலத்திலும், கண்மாய்க் கரையிலும், ஊர் மந்தையிலும், ஊர் எல்லையிலும் தூங்காமல் நின்று காவல் காக்கக்கூடியன. " என்று கூறுகிறார் ,தொ.பரமசிவன் . நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் காவல் தெய்வங்களாக இருப்பதை நாம் உணர முடியும். ஒரு மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாக 'மாதேஸ்வரன்' மாறிய கதை தான் 'ஹர்காரா'.


 நமது நாட்டார் தெய்வங்கள் கற்பனைக் கதைகளான இதிகாசங்களிலிருந்து தோன்றவில்லை. நிறுவனமயப்படுத்தப்பட்ட நடைமுறையோ, வழிபாடோ , பேதங்களோ, படையலோ நாட்டார் தெய்வங்களுக்கு இல்லை. அவை மக்களின் வாழ்வுடன் கலந்தவை. பெரிய பெரிய கோயில்களில் பல கால பூசைகளுடன் பெருந்தெய்வங்கள் இருந்தாலும் அவை எதுவும் நாட்டார் தெய்வங்களுக்கு ஈடாகாது. அவை மக்களின் வாழ்விலிருந்து விலகி நிற்பவை. 


காளி வெங்கட் மலையேறும் காட்சியின் போது வரும் இடைவேளை வரை சரியாக செல்லும் திரைக்கதையில் பின்பு விறுவிறுப்பு குறைந்து விடுகிறது. இறுதிகட்ட காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் கூட்டியிருந்தால் இன்னும் நெருக்கமான படைப்பாக இத்திரைப்படம் அமைந்திருக்கும். மற்றபடி நல்லதொரு அனுபவம். இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉 ❤️.


தமிழில் வன்முறை வெறியாட்டத் திரைப்படங்கள் தொடந்து வெளிவரும் சூழலில் ' ஹர்காரா ' போன்ற மக்களின் வாழ்வியலைப் பேசும் அர்த்தமுள்ள திரைப்படங்களும் வெளிவருவது நம்பிக்கையளிக்கிறது. இவ்வாறு மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும். 


ஆகவே மக்களே ! வன்முறை வெறியாட்டத் திரைப்படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவதில் கொஞ்சத்தையாவது நம் வாழ்வைச் சொல்லும் 'ஹர்காரா' போன்ற திரைப்படங்களுக்குக் கொடுக்க வேண்டும். 


மேலும் படிக்க:


அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !


நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !


ஜெய்பீம் -அறத்தின் குரல் ! 


Sunday, September 1, 2024

பெரியார் ஒருவரே !



பெரியாரின் கொள்கைகளை பெரியாரைத் தவிர வேறு எவராலும் கடைபிடிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். பெரியார், தான் பேர் வாங்க வேண்டும் என்பதற்காக எந்தக் கொள்கையையும் முன்நிறுத்தவில்லை. மக்களுக்கு நல்லதென்றால் எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதரிப்பார், மக்களுக்கு தீங்கு என்றால் எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார், அவ்வளவுதான் பெரியார். எந்த வட்டத்திற்குள்ளும் பெரியாரை அடக்கிவிட முடியாது. 


மக்களின் நலன்களையும் , மக்களுக்கான விடுதைலையையும், சமத்துவத்தையும், அனைவருக்குமான சுதந்திர வாழ்க்கையையும் உறுதி செய்ய தொடர்ந்து குரல் கொடுத்தார். அனைத்துவிதமான ஆதிக்கங்களையும் எதிர்த்தார். மக்களின் நலன்கள் மட்டுமே முன்நிறுத்தப்பட்டதால்தான் பெரியாரின் கொள்கைகள் இன்றும் பேசப்படுகின்றன. 


இவ்வளவு காலம் பெரியாரின் கொள்கைகள் பேசப்படுவதை பெரியாரே விரும்பியிருக்கவில்லை. பெரியாரின் கொள்கைகளின் தொடர்ச்சியாக வேறு புதிய கொள்கைகள் இந்நேரம் உருவாகியிருக்க வேண்டும். அத்தகைய ஆக்கப்பூர்வமான மாற்றம் இங்கே நிகழவில்லை. அந்த அளவிற்கு நாம் பின்தங்கி இருக்கிறோம். தான் கண்ட அனைத்தையும் அறிவியலின் கண் கொண்டு பார்த்தவர்தான், பெரியார். அறிவிற்கு பொருந்தாத எதையும் அவர் நம்பவில்லை; ஏற்கவில்லை. நாயகத்துதிபாடல், நாயகத்துதிபாடல் உருவாக்கும் கும்பல் மனப்பான்மை இவற்றை கடுமையாக வெறுத்தார். ஆனால் இன்று அவரை வைத்து நாயகத்துதிபாடலும், கும்பல் மனப்பான்மையும் செய்யப்படுவது பெரியாருக்கு நாம் செய்யும் துரோகம். 


எதிர்தரப்பையும் தன்பக்கம் ஈர்க்கும் வல்லமை பெரியாருக்கும் இருந்தது, அறிஞர் அண்ணாவிற்கும் இருந்தது. கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் எதிர்தரப்பின் நியாயங்களை ஏற்றுக்கொண்டார்கள். முக்கியமாக தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொண்டார்கள். இந்தப் போக்கு பின்பு மாறிவிட்டது. தமிழகத்தில் நாயகத்துதிபாடல் மனநிலையை வளர்த்துவிட்டதில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. இன்று, தமிழகத்தில் எல்லா கட்சிகளும், எல்லா அமைப்புகளும் நாயகத்துதிபாடலில் சிக்கி லயித்துக் கொண்டிருக்கின்றன. நாயகத்துதிபாடல் முன்நிறுத்தப்படும் எந்த இடத்திலும் ஆக்கப்பூர்வமான மாற்றம் நிகழாது. 


" யார் சொல்லியிருந்தாலும், 

எங்கு படித்திருந்தாலும், 

நானே சொன்னாலும், 

உனது புத்திக்கும், 

பொது அறிவிற்கும்,

பொருந்தாத எதையும் நம்பாதே ! " 

-  பெரியார் ❤


மேலும் படிக்க :

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !


Limelight (1952) !


சாப்ளின் என்ற மாமேதையின் இதுவரை பார்த்திராத திரைபடங்களுள் இதுவும் ஒன்று. நேற்று தான் பார்க்க வாய்ப்பு அமைந்தது. இவரது மற்ற திரைப்படங்களைப் போல இத்திரைப்படத்திலும் மனிதமே மேலோங்கி இருக்கிறது. சாப்ளினின் நடிப்பை மட்டுமல்ல அவரது திரைப்பட உருவாக்கத்தையும் யாராலும் பிரதியெடுக்க முடியாது. 


இவரது திரைப்படங்களை போட்டுக் காட்டி படத்தின் இயக்குநரும் இவர் தான், இசையமைப்பாளரும் இவர் தான், தயாரிப்பாளரும் இவர் தான் என்று சொன்னால் பல பேர் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு திரையில் தன்னை மட்டுப்படுத்தியே சித்தரித்து இருப்பார். இதுவும் ஒருவித யுக்தி தான் என்றாலும் திரையில் அப்படி தங்களைச் சித்தரிக்க விரும்ப மாட்டார்கள். திரையில் நடிகர் சாப்ளினை மட்டுமே நம்மால் காண முடியும், இயக்குநர் சாப்ளினோ, தயாரிப்பாளர் சாப்ளினோ தென்படமாட்டார். 


இயக்குநர் சாப்ளின் ஒரு Perfectionist. ஒவ்வொரு காட்சியும் கண்ணாடி போல அவ்வளவு திருத்தமாக இருக்கும். சாப்ளினால் சிரிக்க வைக்க மட்டுமல்ல அழ வைக்கவும் முடியும். தனது திரைப்படங்களில் பல இடங்களில் தற்கொலைக்கு எதிரான காட்சிகளைச் சேர்த்திருப்பார். தற்கொலையில் ஈடுபட முயற்சிப்பவர்களை தேற்றி இந்த வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்பவராக நடித்திருக்கிறார். 'சிட்டி லைட்ஸ் ' திரைப்படத்தில் தற்கொலைக்கு முயற்சிப்பவரிடம் ' Tomorrow also birds will sing ( நாளையும் பறவைகள் பாடும் ) ' என்று சொல்வார். எதை இழந்த பின்பும் வாழ்க்கை மிச்சம் இருக்கிறது ,எவ்வளவு பெரிய இழப்பையும் கடந்துவிட முடியும் என்ற நம்பிக்கையே உயிர்களைக் காப்பாற்றும். அதே போல Limelight - லிலும் ஒரு கதாப்பாத்திரத்தை தற்கொலையிலிருந்து காப்பாற்றி, நம்பிக்கையளித்து வாழ்க்கையை வாழ வைக்கிறார். தத்துவார்த்த ரீதியான பல வசனங்கள் இடம்பெற்றுள்ளன. எவ்வளவு புகழை அடைந்தாலும் Limelight தொடர்ந்து யார் மீதும் விழாது என்பதே Limelight. 


எக்காலத்திற்குமான கலைஞன் ❤️ !


மேலும் படிக்க :

எக்காலத்திற்குமான கலைஞன் !


K.A.தங்கவேலு - நகைச்சுவைச் சக்கரவர்த்தி !

மார்க் ஆண்டனி 🔥


திரைப்படம் ஆரம்பம் முதல் முடிவு வரை படுவேகமாக போவதால் நிறை குறை பற்றி யோசிக்கக் கூட நமக்கு நேரமில்லை. இடைவேளைக்கு கொஞ்ச நேரம் முன்பு" என்னங்க இன்னும் இடைவேளை விடலை. படம் பெரிய படமா?" என்று இணையர் கேட்டார். "படம் பெரியது அல்ல.‌ அந்த அளவிற்கு வேகமாக காட்சிகள் நகர்வதால் நமக்கு அப்படி தெரிகிறது " என்று பதிலளிக்க வேண்டியிருந்தது. இடைவேளையின் போது எங்களுக்கு முன்வரிசையில் இருந்த இளைஞர் தன் நண்பரிடம் " என்ன மாப்ள இப்பவே முழுப் படம் பார்த்த மாதிரி இருக்குது " என்றார். "எல்லோரும் நம்மைப் போலவேதான் உணர்ந்திருப்பார்கள் போல" என்று நினைத்துக் கொண்டே பாப்கார்ன் வாங்க நடக்க ஆரம்பித்தோம்.


ஒரு சிக்கலான கதையை சிக்கலில்லாமல் சொல்லி இருக்கிறார்கள். தமிழில் எப்படி இது சாத்தியம் என்று தேடும் போது தான் தெரிந்தது, திரைக்கதையை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் சேர்த்து அர்ஜுன் மற்றும் சவரிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து எழுதியிருக்கின்றனர் என்று. எவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும், தேர்ந்த நடிகர்கள் நடித்திருந்தாலும் திரைக்கதை சிறப்பாக அமையாவிட்டால் நல்ல அனுபவம் கிடைக்காது. உலகத் திரைப்படங்களிலும் இந்திய அளவில் கேரளத் திரைப்படங்களிலும் திரைக்கதையை இரண்டு மூன்று பேர் சேர்ந்து எழுதும் போக்கு இருக்கிறது.‌இப்போது தமிழிலும் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழ்த் திரையுலகின் இயக்குநர்களே நீங்கள் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் திரைக்கதையை இரண்டு மூன்று பேர்களோடு சேர்ந்து எழுதுங்கள். அப்போதுதான் நாங்கள் தப்பிக்க முடியும். 


திரைப்படம் முழுக்கவே டைமிங் வசனங்கள் அனல் பறக்கின்றன. நிறைய விசயங்களையும், நிறைய திரைப்படங்களையும் Troll செய்திருக்கிறார்கள். அதனால் திரைப்படம் முழுக்கவே கலகலப்பு நிறைந்திருக்கிறது. அடுத்ததாக நம்மை படத்துடன் ஒன்ற வைப்பது பின்னணி இசை. யாருடா இது ? இவ்வளவு சிறப்பா பின்னணி இசையமைத்திருப்பது என்று தேடிப் பாரத்தால் ஜி.வி.பிரகாஷ்குமார். நடிப்பதை விட இவர் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நாம் வெற்று இரைச்சலிலிருந்து தப்பிக்க முடியும். பின்னணி இசை படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவுகிறது. தேர்ந்தெடுத்த பழைய மூன்று பாடல்களும் ( பஞ்சு மிட்டாய் சேலை கட்டி..., அடியே மனம் நில்லுனா நிக்காதடி..., வருது வருது விலகு விலகு ஒரு வேங்கை வெளியே வருது...) நன்றாக பொருந்துகின்றன. மூன்று பாடல்களிலும் பெண் குரல், எஸ்.ஜானகி❤️. கடந்த ஒரு வாரமாக இந்த மூன்று பாடல்களும் தமிழகமெங்கும் தேடியெடுத்து கேட்கப்படுகின்றன. கடைசியாக தமிழில் சிறந்த பின்னணி இசையாக நினைவில் இருப்பது 'அசுரன்' . அந்தத் திரைப்படத்திற்கும் இசை ஜி.வி.பி.தான்.


ஜெயிலர் திரைப்படம் போல இந்தத் திரைப்படத்திலும் வன்முறை இருக்கிறது. ஆனால் எந்த இடத்திலும் உறுத்தவில்லை. ஜெயிலர் திரைப்படமெல்லாம் குழந்தைகளுடன் பார்க்கத் தகுதியே இல்லாதது. குரூர மனம் படைத்தவர்களால்தான் இவ்வாறு வன்முறையை(ஜெயிலர்) திரையில் காண்பிக்க முடியும். மாவீரன், ஜெயிலர், மார்க் ஆண்டனி என மூன்று படங்களை தொடர்ந்து திரையரங்கில் பார்த்தோம். இதில் ஜெயிலர் தான் குப்பை(வன்முறை அதிகம், திரைக்கதை சொதப்பல்,லாஜிக் மீறல்கள் அதிகம்). வன்முறையை நியாப்படுத்துவதை தமிழ் சினிமா கைவிட வேண்டும். வன்முறையைத் திரையில் காண்பிக்கும் போது பொறுப்புணர்வு வேண்டும். 


'ஆண்டனி'யாக இருந்தாலும் அவரின் உடலிலும் கருப்பணசாமி இறங்கும் அதாம்லே தமிழ்நாடு. நாட்டார் தெய்வங்கள் பேதங்களுக்கு அப்பாற்பட்டவை. பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் காவல் தெய்வங்களாகவே இருக்கின்றன. 80's ,90's kids களை மட்டுமல்ல 2k kids களையும் திராவிட பேரழகியான சில்க் ஸ்மிதா ஈர்த்திருக்கிறார் என்பதை திரையரங்கில் காண முடிந்தது.


ஆண்டனி விஷாலின் தோற்றம் துல்கர் சல்மானையே நினைவுபடுத்தியது. ஒரு காட்சியில் கூட விஷாலாக தோன்றவில்லை. அப்புறம் எஸ்.ஜே.சூரியா ரசிகர்களின் Pulse அறிந்து அட்டகாசப்படுத்தியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் லாஜிக்,கருத்து, கத்திரிக்காய் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. இது ஒரு Fantasy திரைப்படம் அவ்வளவு தான். இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉

மேலும் படிக்க :

கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

ஜெய்பீம் -அறத்தின் குரல் !


போர்களை நிறுத்துங்கள் !


19ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை போரின் வதைகளையும், வாதைகளையும், வலிகளையும் அதிகமாக அனுபவித்த இனம் யூத இனம். இன்று அதே யூத இனம் அடுத்த இனத்தை வதைக்கிறது. ஆதிக்க உணர்வு தான் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறது. யாராக இருந்தாலும் அதிகாரம் கைகளுக்கு வந்தவுடன் ஆதிக்க உணர்வு தோளில் ஏறி அமர்ந்து கொள்கிறது. இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் நிற்க வேண்டுமானால் நாம் பாலஸ்தீன மக்களின் பக்கமே நிற்க வேண்டும். 


எந்தவிதமான ஆதிக்கமாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்களும் , குழந்தைகளும் தான். நாம் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துவிட்டதாக சொல்லிக்கொள்ளும் இன்றைய சூழலிலும் உலகின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போர்கள் நடந்து வருவது மனித இனத்திற்கே அவமானம் . அன்றைய போர்களில் போரிற்கு தொடர்பில்லாத எளிய மக்கள் அவ்வளவாக பாதிக்கப்படவில்லை. ஆனால் இன்றைய போர்களில் எளிய மக்களே அதிகமும் கொல்லப்படுகின்றனர். 


எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் எந்த நேரத்தில் எங்கே குண்டு விழும் என்று தெரியாத அந்தப் போர்ச் சூழலை நினைக்கும் போதே அச்சமாகவும், பதைபதைப்பாகவும் இருக்கிறது. இரு தரப்பிலும் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐநா சபைக்கென்று கொஞ்சமாவது அதிகாரமும் மரியாதையும் இருந்தன. தற்போது எல்லாம் நீர்த்து போய் முதலாளித்துவத்தின் கண்துடைப்பு அமைப்பாக மாறிவிட்டது. அதே போல முன்பு உலகில் எங்கு போர் தொடங்கினாலும் முதல் குரலாக ஒலிப்பது அமைதி உடன்படிக்கைக்கு இரு தரப்பும் முன் வர வேண்டும் என்பது தான்‌. அதற்கு சம்மதிக்க மறுத்து போரைத் தொடரும் நாடுகள் மீது உடனடியாக பொருளாதார தடை விதிக்கப்படும். இப்போதெல்லாம் இப்படியான எந்தக் குரலும் ஒலிப்பதில்லை. அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்தும் யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை.


போர்க் குற்றம் புரியும் நாடுகளை வெளிப்படையாக ஆதரிக்கும் குரல்கள் மட்டுமே தற்போது கேட்கின்றன. மனித உயிர்களுக்கு எந்தவிதமான மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. இது தான் கூட்டுக்களவாணி முதலாளித்துவம். தற்போதைய சூழலில் உலகெங்கிலும் வலதுசாரிகளின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது . இது பூமிக்கும் மனித இனத்திற்கும் நல்லதல்ல. "எல்லோருக்கும் எல்லாம் " என்பதை எப்போதும் வலதுசாரிகள் ஏற்கமாட்டார்கள். வன்முறை யார் மீதும் எப்போது வேண்டுமானாலும் எந்த வடிவத்திலும், எந்தப் பெயரிலும் நிகழ்த்தப்படலாம் என்பதே கள நிலவரமாக உள்ளது. "அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி" என்கிறார் சாமுவேல் ஜான்சன். தேசபக்தி என்ற பெயரில் தான் நாடுகள் மற்ற நாட்டு மக்கள் மீது வன்முறையை ஏவி விடுகின்றன. எதற்கெடுத்தாலும் தேசபக்தியைத் தூக்கிப் பிடிப்பவர்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.எல்லாவற்றையும் விட மனிதமே பெரியது.அனைத்திலும் மனிதமே முன்நிறுத்தப்பட வேண்டும். 


தற்போதைக்கு உடனடியாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரும் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரும் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும். ஆதிக்க உணர்வு தான் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறது. மனிதர்களுக்கு ஆதிக்க உணர்வு மட்டும் இல்லையென்றால் பூமியெங்கும் அமைதி மட்டுமே நிலவும். உலகெங்கும் போர்ச்சூழலிருக்கும் மக்கள் விடுவிக்கப்பட்டு அமைதியாக வாழ வழிவகை செய்யப்பட வேண்டும். பூமியில் மனிதர்கள் சமநிலையை உருவாக்கத் தவறினால் இயற்கை தனது பாணியில் சமநிலையை நிச்சயம் உருவாகும்

மேலும் படிக்க :

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

வடகிழக்கு மாநிலங்களை காப்போம் !


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms