Sunday, November 27, 2011

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு !

சுய சிந்தனையே இல்லாமல் மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்புபவர்களுக்கும் , மூட நம்பிக்கைகளை நம்புபவர்களுக்கும், " ஆறறிவில் ஓரறிவு அவுட்டு ! " என்று சொல்கிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . 1965 ஆம் ஆண்டு வெளிவந்த " மகனே கேள் " என்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடலை எழுதினார் .

அந்தப் பாடல் :    



பாடல் வரிகள் :

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு  (ஆறறி…)


அடக்கமில்லாப் பெண்கள் சிலர்
நடக்கும் எடக்கு நடையிலும்
ஆதிகாலப் பண்பைக் காறறல
பறக்க விடும் உடையிலும் (ஆறறி…)

தன்ரேகை தெரியாத
பொய்ரேகைக் காரரிடம்
கைரேகை பார்க்கவரும் முறையிலும் _ அவன்
கண்டதுபோல் சொல்லுவதை
நம்பிவிடும் வகையிலும் (ஆறறி…)

ஏமாறும் மனத்திலும் ஆமாஞ்சாமிக் கருத்திலும்
எந்த நாளும் திருந்தாத மூடத்தனத்திலும்
சோம்பேறி சுகத்திலும் துடைநடுங்கும் குணத்திலும்
சொந்த நிலையை மறந்துதிரியும் ஈனப் பேச்சிலும்
சிந்திக்காத இடங்களிலும்
தெண்டச்சோத்து மடங்களிலும் (ஆறறி…)


 " தன்ரேகை தெரியாத பொய்ரேகைக் காரரிடம் " ," ஏமாறும் மனத்திலும் ஆமாஞ்சாமிக் கருத்திலும் எந்த நாளும் திருந்தாத மூடத்தனத்திலும் "," சோம்பேறி சுகத்திலும் துடைநடுங்கும் குணத்திலும் " , எவ்வளவு வலிமையான வரிகள் .

நமக்கு ஆறு அறிவா ? ஐந்து அறிவா ?

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

திண்ணைப் பேச்சு வீரரிடம் ! 

......................................................................................................................

Friday, November 25, 2011

நாமெல்லாம் குற்றவாளிகளே !

நாம் வாழும் இந்தப்  பூமி, கோடிக்கணக்கான உயிரினங்களுக்குச் சொந்தமானது . ஆனால் , விலங்கினங்களில் ஒன்றான மனிதன் ,தனக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதுகிறான் . இந்த ஒரு விலங்குக்கூட்டம்
( மனிதர்கள் ) வாழ்வதற்கு மற்ற அனைத்து  உயிரினங்களையும்  பாதிக்கிறது .பாதிப்பு எதுவும் வந்தாலும் ,தான் மட்டுமே பாதிக்கப்படுவதாக கருதுகிறான் ,மற்ற உயிரினங்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை .பூமியில்  வாழும் சகமனிதர்கள் பற்றியும் கவலையில்லை .இதுல , தான் மட்டுமே ஆறறிவு உள்ள மிருகம் என்ற பெருமை வேறு .

 மற்ற உயிரினங்களைச் சாராமல் எந்த உயிராலும் பூமியில் வாழ முடியாது .மனிதன் ,மற்ற உயிரினங்களை விட உயர்ந்தவன் அல்ல .அவன் இயற்கையின் ஒரு பகுதி மட்டுமே .மற்ற உயிரினங்கள் இருக்கும் வரை தான் மனிதனாலும் வாழ முடியும் . செடி ,கொடிகள் ,மரங்கள் சூரிய சக்தியிலிருந்து உணவு தயாரிக்கிறது . இந்தத் தாவரங்களைச் சார்ந்து சிறிய பூச்சிகள் முதல் விலங்கினங்கள் வரை வாழ்கின்றன . தாவரங்களோ ,விலங்குகளோ இறந்து விட்டால் ,இவற்றை மண்ணோடு மண்ணாக மட்கச் செய்யும் பணியில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் (மட்க்குண்ணிகள்)  ஈடு பட்டுள்ளன . மட்கிப் போனவை , தாவரங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகின்றன . இயற்கையில் கழிவு என்பதே இல்லை .

மனிதனுக்கு வியாதி வந்தால் ,மருத்துவரிடம் போகிறான் . மரம் ,செடி ,கொடிகள்,பூச்சிகள் ,விலங்குகள் ,நுண்ணுயிரிகள் , இவற்றுக்கு வியாதி வந்தால் யாரிடம் போகும் . உடலில் குறைபாடுள்ள மனிதர்களுக்காக நாம் கவலைப்படுகிறோம் . ஆனால் ,மற்ற உயிரினங்களில் உள்ள குறைப்பாடுகளைக்  கவனிக்க யார் இருக்கிறார்கள் .இயற்கை மட்டுமே இருக்கிறது .மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையை முழுமையாக நம்புகின்றன . தங்களின் குறைப்பாடுகள் பற்றியோ ,இழப்புகள் பற்றியோ அவற்றுக்கு எப்போதுமே கவலைகள் இல்லை .தங்களை இயற்கையின் ஒரு பகுதியாகவே உணர்கின்றன .மனிதன் மட்டும் இயற்கையை நம்புவதில்லை .

எந்த உயிரினமும் ,தங்கள் தேவைக்கு மீறிய எதையும்  இயற்கையிடம் இருந்து பெறுவதில்லை . தாவரங்கள், தங்கள் தேவைக்கு மேல் உணவு தயாரிப்பதில்லை .அவை ,என்றோ பிறக்கப்போகும் தனது சந்ததிக்கு இப்போதே  எதையும் சேமிப்பதில்லை . விலங்குகள் (ஊனுண்ணிகள் ), தங்களின் பசிக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன . நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயந்து பயந்து பொருளைச் சேர்க்கும் பழக்கம் அவற்றுக்கு இல்லை . இன்றைய உணவைக் கொடுத்த இயற்கை ,நாளைய உணவையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது .

மனிதன் எப்போதும் இயற்கைக்கு விரோதமாக செயல்படுவதில் ஆர்வம் கொண்டவனாகவே இருக்கிறான் . இத்தகைய போக்கினால் அவன் சந்திக்கும் துன்பங்கள் ஏராளாம் . ஆனாலும் அவனது குணம் மாறவே இல்லை .ஆறாம் அறிவு என்னும் தலைக்கனம் அவனை ஆட்டி வைக்கிறது . இயற்கையின் உதவியில்லாமல் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று நம்புகிறான் .இது எப்போதும் சாத்தியமில்லை . மனிதனால் இயற்கையை மீறி எதையும் செய்ய முடியாது .வெற்றி பெறுவது போல காட்டிக்கொண்டு தினமும் இயற்கையிடம் தோற்றுக் கொண்டே தான் இருக்கிறான் .

பூச்சிக்கொல்லிகள் ,உரம் ,பிளாஸ்டிக் ,மின் கழிவுகள் ,தொழிற்ச்சாலைக்   கழிவுகள்... இவையெல்லாம் சேர்ந்து நிலம் ,நீர்,காற்று என்று அனைத்தையும் பாதிக்கின்றன . நிலம் ,நீர் ,காற்று என்று எது மாசுபட்டாலும் தனக்கு ஏற்ப்படக்கூடிய பாதிப்புகள் பற்றி மட்டுமே சிந்திக்கிறான் . மாசுப்பாடுகளால் பாதிக்கப்படும் நுண்ணுயிரிகள், பூச்சிகள் ,மரம் ,செடி ,கொடிகள்,பறவைகள் , விலங்குகள் பற்றி எந்தக் கவலையும் இல்லை .மனிதனும் ஒரு சாதாரண உயிரினம் தான் .இதை உணர்ந்தாலே நம்முடைய பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் . இயற்கைக்கு  எதிராக செயல்படும் வரை ,இயற்கையை நம்பாத வரை நாமெல்லாம்  குற்றவாளிகளே !

மற்ற உயிரினங்கள் ,எதை வேண்டுமானாலும் இழப்பதற்கும் ,பெறுவதற்கும்
தயாராகவே இருக்கின்றன . இது இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை . மூன்று வேளையும் சாப்பிட வேண்டிய கட்டாயமும் இல்லை . பசிக்கும் போது மட்டுமே உணவு தேடும் . விலங்குகள் ,குறிப்பிட்ட வயது வரை மட்டுமே தங்கள் குட்டிகளுக்கு ஆதரவு தருகின்றன .அதற்குமேல் அவற்றுக்கு ஆதரவும் தருவதில்லை ,அவற்றிடம் எதையும்   எதிர்பார்ப்பதுமில்லை . எல்லாவற்றையும் இயற்கைக்கு கொடுத்து விட்டு ,தனக்குத் தேவையானதை மட்டுமே இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன .

மனிதனால் வளர்க்கப்படும் விலங்குகள் ,மனிதனை விட உயர்ந்ததாகவே மதிக்கப்படுகின்றன . சில இடங்களில் பசுவின் சிறுநீர் புனிதமானதாக கருதப்படுகிறது .பசுவின் சாணம் எருவாகவும் ,எருவாட்டியாகவும் பயன்படுகிறது . மனிதக் கழிவு ???  பூமியில் இதுவரை எத்தனையோ உயிரினங்கள் தோன்றி , வாழ்ந்து அழிந்துவிட்டன .எதிர்காலத்தில் இதில் மனிதனும் இடம் பிடிக்கலாம் .

மனிதர்களே இல்லாத பூமி கம்பீரமாக சுழலக் கூடும் !



மேலும் படிக்க :

நீரின்றி அமையாது உலகு ! 

வேடந்தாங்கலில் ஒரு நாள் !  
............................................................ 

Monday, November 21, 2011

திண்ணைப் பேச்சு வீரரிடம் !

திண்ணை ,இதை நாம்  மறந்து ரொம்ப நாளாகிவிட்டது .இந்தப்பாடல் திண்ணையைப் பற்றிச் சொல்லவில்லை . வெட்டிக்கதைகள் பேசி நம் நேரத்தை வீணடிக்கும் ,வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர்களாக இருக்கும் வீணர்கள் பற்றி இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .பதிபக்தி என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றது .

திண்ணை ,இன்று இல்லை . ஆனால் , அதிக எண்ணிக்கையில் ,பல்வேறு விதமான இடங்களில் திண்ணைப் பேச்சு வீரர்கள் இன்றும் இருக்கிறார்கள் . இன்றைய சூழ்நிலையில்  தொ(ல்)லைக்காட்சியில் தான் திண்ணைப் பேச்சு வீரர்கள் அதிகம் தோன்றுகிறார்கள் . ராசிபலன் சொல்பவர்,அதிர்ஷ்டகல் விற்பவர், யந்திரம் விற்பவர் ,ரியல் எஸ்டேட் விளம்பரங்களில்  பேசுபவர்கள் (சின்னத்திரை நடிகர்கள், நாடகத்தில் நடிகிறார்களோ இல்லையோ தவறாமல் ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் நடிக்கிறார்கள் ), டெலி பிராண்ட் விளம்பரங்களில் பேசுபவர்கள் ,ஏழு நாட்களில் வெள்ளையாகி விடலாம் என்று விளம்பரம் போடுபவர்கள் என்று தொ(ல்)லைக்காட்சியில் தோன்றும்  திண்ணைப் பேச்சு வீரர்களின் எண்ணிக்கை அதிகம் .

மேடையில்  அரசியல்வாதிகள் பேசும் போலியான பேச்சு , ஆன்மீகவாதிகள்  பேசும் பேச்சு ,தற்போதைய பிரதமர் பேசும் பேச்சு இவையெல்லாம் எதற்கும் உதவாத திண்ணைப் பேச்சில் அடக்கம் .இவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் பட்டுக்கோட்டையார்  அன்றே பாட்டு எழுதியிருக்கிறார் .

அந்தப்பாடல் : 


பாடல் வரிகள் : 


தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்
சரித்திரத்தைச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார்
மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்


இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் _ இந்தத் (திண்ணை…)

பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் _ அந்தப்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் _ இந்தத் (திண்ணை…)

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருதவேண்டியதை மறந்தாச்சு _ பழங்
கதைகளைப் பேசி காலம் வீணாச்சு;
கையாலே முன்னேற்றம் கண்டாகணும் _ இந்தத் (திண்ணை…)

நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
இன்னும் _ பொம்பளைங்க ஆம்பளைங்க
அத்தனை பேரையும்வச்சு மாடாஇழுக்கிறோம் வேகமா;
நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் _ இந்தத் (திண்ணை…)

 எவ்வளவு அருமையான வரிகள் !"பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்", "புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் "," கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்  சபைக்கு உதவாத வெறும் பேச்சு ".

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :

நாமெல்லாம் யார் ?

............................................................................

Saturday, November 19, 2011

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்குது !

1956 ஆம் ஆண்டு வெளிவந்த " பாசவலை " எனும் திரைப்படம் அதன் பாடல்களுக்காகவே அதிக நாள் ஓடியது .பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்தப்படத்தில் 5 பாடல்கள் எழுதியிருந்தார் .அதில் ஒன்று தான் இந்தப்பாடல் .  சி .எஸ் .ஜெயராமன் அவர்களால் பாடப்பட்டது .படத்திற்கு இசை , விஸ்வநாதன் ராமமூர்த்தி .இந்தப் பாடலில் ஆட்டைக் குறிப்பிடுவது போல நாட்டைக் குறிப்பிடுகிறார் ,பட்டுக்கோட்டை .

பாடல் வரிகளுக்கு  ஏற்ற வகையில் கிருபாகரன்  அவர்கள் ,காணொளியில் காட்சிகளை இணைத்துள்ளார் .

அந்தப் பாடல் இதோ :


பாடல் வரிகள் : 

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் _ பெருங்
கூட்டிருக்குது கோனாரே! _ இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒருமுடிவுங் காணாரே!
தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
எல்லாம் இப்படிப் போகுது
நல்லாருக்குள் பொல்லாரைப்போல்
நரிகள் கூட்டம் வாழுது (இநத…)

கணக்கு மீறித் தின்றதாலே
கனத்த ஆடு சாயுது _ அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம்
அதுக்கு மேலே மேயுது
பணக்கிறுக்குத் தலையிலேறிப்
பகுத்தறிவுந் தேயுது _ இந்தப்
பாழாய்ப்போற மனிதக்கூட்டம்
தானாய் விழுந்து மாயுது (இநத…)

ஆசை என்ற பம்பரத்தை உருவாய்க் கொண்டு
பாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங்கண்டு
நேரம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு
நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு _ இதைப்
படித்திருந்தும் மனக்குரங்கு
பழைய கிளையைப் பிடிக்குது
பாசவலையில் மாட்டிக்கிட்டு
வௌவால்போலத் துடிக்குது
நடக்கும்பாதை புரிந்திடாமல்
குறுக்கே புகுந்து தவிக்குது;
அடுக்குப்பானை போன்ற வாழ்வைத்
துடுக்குப்பூனை ஓடைக்குது! (இநத…)

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :

கையில வாங்கினேன் பையில போடல ...! 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!  
..................................................................................................
                

கையில வாங்கினேன் பையில போடல ...!

தான் வாழ்ந்த 29 ஆண்டுகளுக்குள் 17 தொழில்களில் ஈடுபட்டவர் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ( http://www.pattukkottaiyar.com/site/?p=632) . அதனால் தான் எத்தனையோ கவிஞர்களுக்கு மத்தியில் ஒரே மக்கள் கவிஞராக திகழ்ந்தார் . திரையிசையில் பாட்டாளி மக்களின் குரலை ஒலிக்கச் செய்தார் . தனது பாடல் வரிகளையே சமூகத்தை விளாசும் சாட்டையாக பயன்படுத்தினார் .அவரது பாடலின்  வரிகள் நமக்கு மட்டுமல்ல , உலகத்துகே இன்றைக்கும் பொருந்தும் . ஈடு இணையில்லாத அந்த உன்னத கவிஞரைக் கொண்டாடுவோம் - (http://www.pattukkottaiyar.com/site/ ) .

சமீபத்தில் youtube தளத்தில் தேடலில் இருந்தபோது கிருபாகரன் என்பவர் இணைத்துள்ள காணொளிகளைப் ( வீடியோக்களைப் ) பார்க்க நேர்ந்தது .  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளுக்கு பொருத்தமான படங்களைத் தேர்வு செய்து பாடலுடன் இணைத்து  காணொளிகளை உருவாக்கியுள்ளார் . அவ்வளவு பொருத்தமாக இருக்கிறது .கிருபாகரன் அவர்களுக்கு நன்றி . அதில் ஒரு பாடல் "கையில வாங்கினேன் பையில போடல..."

1960 ஆண்டு வெளிவந்த " இரும்புத்திரை " என்னும் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றது .இந்தப்படத்தைத்  தயாரித்து இயக்கியவர், திரு .எஸ் .எஸ் .வாசன் அவர்கள் .சிவாஜி கணேசன் ,வைஜெயந்தி மாலா ,தங்கவேலு ,சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர் .இந்தப்பாடல் பட்டுக்கோட்டையால் எழுதப்பட்டு ,திருச்சி லோகநாதனால் பாடப்பட்டு ,வெங்கட்ராமன் என்பவரால் இசையமைக்கப்பட்டு ,தங்கவேலு  அவர்களால் வாயசைக்கப்பட்டது .தங்கவேலு சிறப்பாக நடித்திருப்பார் .(அவர் நடிப்பைத் திரைப்படத்தில் தான் பார்க்க முடியும் " )


கையில வாங்கினேன் பையில போடல ...!




பாடல் வரிகள் :
கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே _ என்
காதலிப் பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்வதென்றும் புரியலே
ஏழைக்கும் காலம் சரியில்லே

மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்கிறான் _ வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் (கையிலே…)

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக்கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே _ அது
குட்டியும் போடுது வட்டியிலே (கையிலே…)

விதவிதமாய்த் துணிக இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு -அண்ணே        -எதை
எண்ணமிருக்கு வழியில்லே _ இதை
எண்ணாமிலிருக்கவும் முடியல்லே (கையிலே…)

கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு _ அண்ணே
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்? (கையிலே…)

இந்தப்பாடல் இன்றைய சூழலுக்கும் அப்படியே  பொருந்துகிறது .

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :

Tuesday, November 15, 2011

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி !

நாடகக்கலையின் தொடர்ச்சி தான் சினிமா .எல்லாவிதமான  நாடகங்களிலும் நகைச்சுவை நடிகர்கள் தேவைப்பட்டார்கள் .சினிமாவிலும் அப்படியே .பிரச்சனைகளுக்கு நடுவே வாழும் நம்மைச் சிரிக்க வைப்பது கடினம் . நகைச்சுவை நடிகர்கள் இதைச் சாத்தியப்படுத்தினார்கள் .தமிழ்த் திரையுலகில் பவனி வந்த நகைச்சுவை நடிகர்கள் ஏராளம் . T.S.பாலையா ,M.R.ராதா ,N.S.கிருஷ்ணன் ,K.A.தங்கவேலு ,காளி .N.ரத்னம் ,சந்திரபாபு ,V.K.ராமசாமி , நடிகர் கருணாநிதி,நாகேஷ் ,சுருளிராஜன் ,சோ ,என்னத்த கண்ணையா , தேங்காய் சீனிவாசன் ,கவுண்டமணி ,செந்தில் ,கல்லாபெட்டி சிங்காரம் ,S .S.சந்திரன் ,ஜனகராஜ் ,உசிலைமணி ,ஓமக்குச்சி நரசிம்மன் ,லூசு மோகன் , வெண்ணிறாடை மூர்த்தி , குமரிமுத்து , குண்டு கல்யாணம் , மௌலி ,விசு  என்று பெரிய பட்டியல் உள்ளது .

T.S.பாலையாவும்  , M.R.ராதாவும்  அசாத்தியமான நடிகர்கள் .T.S.பாலையா,எந்தவிதமான கதாப்பாத்திரமாக இருந்தாலும் அலட்டிக்காமல் நடிக்கக்கூடியவர் . M.R.ராதா , தனது கலகக் குரல் மூலம் கதாநாயகன் , நகைச்சுவை ,வில்லத்தனம் என்று பகுத்தறிவு கருத்துக்கள் பரப்பியவர் .
காளி .N.ரத்னம் , M.G.R.ருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் . " சபாபதி " என்ற படத்தைப் பாருங்கள் அவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார் .

N.S.கிருஷ்ணன் , சிரிப்புடன் சிந்தனைகளைக் கலந்தவர் . சிந்தனைகளை வழங்குவதிலும் ,செல்வத்தை வழங்குவதிலும் கடைசி வரை வள்ளலாக வாழ்ந்தவர் . சந்திரபாபு , சிறந்த பாடும் முறையாலும் ,நடனத்தாலும் வசீகரித்தவர் . அவர் பாடிய பாடல்கள் இன்று வரை பெருமளவில் ரசிக்கப்படுகின்றன . K.A.தங்கவேலு , தான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் சிரிப்பாக மாற்றும் கலை இவருக்கு  மட்டுமே வாய்த்தது .  நடிகர் கருணாநிதி , வித்தியாசமான குரலாலும் ,உடல் மொழியாலும் சிரிக்க வைத்தவர் .

நாகேஷ் ,சிறந்த நடிகர் ,வித்தியாசமான உடல் மொழியால் நகைச்சுவையைத் தாண்டியும் நடித்தவர் .V.K.ராமசாமி , குணச்சித்திர நடிகரும் சிரிக்க வைக்கலாம் என்பதை உணர்த்தியவர் . தனது சிரிப்பால் நம்மைச் சிரிக்கவைத்தவர் .இவரை நினைக்கும் போதெல்லாம் இவரது சிரிப்பொலி ( க்கா கா கா க ) கேட்கிறது . அதுவும் V.K.ராமசாமியும் நாகேஷும் சேர்ந்துவிட்டால் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது .சுருளிராஜன் , சுருட்டைமுடியுடன்  வேறுபட்ட குரலாலும் ,உடல் மொழியாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் .

சோ , அறிவுப்பூர்வ அரசியல் வசனங்களாலும் , அலட்டிக்காத நடிப்பாலும் சிரிப்பை வரவைத்தார் .என்னத்த கண்ணையா , சிறு சிறு நகைச்சுவை   வேடங்களில் பல காலமாக நடித்து வருபவர் ( வரு...ம் ஆனா வரா...து ) .தேங்காய் சீனிவாசன் , இழுத்து இழுத்து பேசியே நகைச்சுவையைத்  தெளித்தவர் . கல்லாபெட்டி சிங்காரம் , எளிய தோற்றத்தாலும் ,குரலாலும் ,உடல் அசைவுகளாலும் சிரிப்பைக் கொடுத்தவர் ( டார்லிங் டார்லிங் டார்லிங் ).

கவுண்டமணி , செந்திலுடன் இணைந்து நீண்ட காலம் நகைச்சுவை உலகை ஆட்சி செய்தார் . நையாண்டி வசனங்களால் கூட நடிக்கும் ஏறக்குறைய அனைத்து நடிகர்களையும் கிண்டல் செய்தவர் . குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பதித்தவர் . விளம்பர வெளிச்சம் இல்லாமல் இன்றுவரை வாழ்பவர் .
செந்தில் , மிக எளிமையான ,கோமாளித்தனமான தோற்றத்தாலும் ,வித்தியாசமான கேள்விகளாலும் (அண்ணே அண்ணே )சிரிக்க வைப்பவர் . கவுண்டமணியுடன் இணைந்தும் தனித்தும் கலக்கியவர் .

ஜனகராஜ் , சிரிப்பின் மூலம் சிரிப்பை வரவழைத்தவர் . லூசு மோகன் , பேச்சின் நடுவே  பிரேக் போட்டுக்கொண்டே  சென்னைத் தமிழை நகைச்சுவையாக்கியவர் .  வெண்ணிறாடை மூர்த்தி ,வாயால் வண்டி ஓட்டிக்கொண்டே ,இரட்டை அர்த்த வசனங்களால் புகழ் பெற்றவர் .  மௌலி மற்றும் விசு ,வசனங்களால் பெயர் பெற்றார்கள் .  S .S.சந்திரன் , அவ்வப்போது அரசியல் வசனங்கள் பேசியவர் . உசிலைமணி( " நரசூஸ் காபி பேஷ் பேஷ் நன்னா இருக்கு "  இன்னும் காதில் கேட்கிறது  ),ஓமக்குச்சி நரசிம்மன் , குமரிமுத்து மற்றும்  குண்டு கல்யாணம் , தங்களது வேறுபட்ட உடல் அமைப்பால் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்கள் .

ஒட்டுமொத்தத்தில் நல்ல குரல் வளம் உடையவர்களும் , தங்கள் உடல் மொழியைச்  சிறப்பாகப்  பயன்படுத்தியவர்களால்  தான் நம்மைச் சிரிக்கவைக்க முடிந்தது .வசனத்தை உச்சரிக்கும் விதத்திலும் ,வேறுபட்ட உடல் மொழியாலும்  சிரிப்பைக் கொண்டுவருவதுதான் நகைச்சுவையாளர்களின் சாமர்த்தியம் .   

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி சொல்வோம் !

மேலும் படிக்க :

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !

...................................................................................

Saturday, October 22, 2011

ஈட்டி எட்டுறமுட்டும் பாயும் , பணம் பாதாளமுட்டும் பாயும் !

" ஈட்டி எட்டுறமுட்டும் பாயும்   , பணம் பாதாளமுட்டும் பாயும்  " தேர்தல் முடிவின் போது காதில் விழுந்த பழமொழி . பதவிக்காக ஏராளாமான பணம் செலவளிக்கப்பட்டுள்ளது . மெம்பருக்காக நின்றாலும் , தலைவருக்காக நின்றாலும் வாக்காளருக்கு பணம் கொடுத்தே ஆக வேண்டிய  கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல . வாக்காளருக்கு பணம் கொடுத்தவர்கள் மட்டுமே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் . 

பதவிக்காக மனிதன் என்னவெல்லாம் செய்வான் என்பதை மக்கள் நேரடியாக பார்த்த தேர்தலாக , இந்தத் தேர்தல் அமைந்துவிட்டது .ஓட்டுக்காக எதையும் இழக்கத் தயாராக இருந்தனர் . ஒரு வகையில் உள்ளூர் கறுப்புப் பணத்தை வெளிவர வைத்த தேர்தலாகவும் அமைந்து விட்டது . அதே சமயம் தேர்தலில் போட்டியிட்டதால் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் . 

இந்தத்தேர்தலில் தமிழ்நாடு முழுக்கத் தோற்றவர்கள் மக்கள் மட்டுமே . தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டனர் . ஓட்டுக்காக பணம் வாங்குவதும் லஞ்சம் தான் . லஞ்சம் வாங்கிகொண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை அடமானம் வைத்துவிட்டனர் . 

இந்தத் தேர்தலில் "எங்கள் ஊருக்கு இதைச் செய்ய வேண்டும் "
 என்ற சத்தம் கேட்கவில்லை " எனக்கு எவ்வளவு தருவீங்க " என்ற சத்தம் தான் கேட்டது . "யார் பதவிக்கு வந்தாலும் எதுவும் செய்யப்போவதில்லை ", அதனால் கிடைத்தவரை லாபம் என்று நினைத்துத்தான் பணம் வாங்குகிறோம் என்றும் , " பணம் வாங்காவிட்டால் வேட்பாளர் தப்பாக நினைப்பார் " என்பதற்க்காகத்தான் பணம் வாங்குகிறோம் என்றும் சொல்கிறார்கள் மக்களில் சிலர் .

காரணம் எதுவாக இருந்தாலும் ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவது தப்பு  தான் . உழைத்துச் சேர்க்கும் பணமே நிலைக்காத இந்தக்காலத்தில் , ஓட்டுக்காக பெற்ற  பணம் எந்த மூலைக்கு ?  உழைக்காமல் வரும் எந்தப்பணமும் நம் பணமல்ல . நம் நாட்டில் பலர்,  வாங்கும் ஊதியத்திற்கு  ஏற்ப உழைப்பதில்லை . கடுமையாக உழைப்பவர்களுக்கு போதிய ஊதியம் கிடைப்பதில்லை .

எது எப்படியோ இந்தத் தேர்தலில் பணத்துக்காக விலை போய்விட்டது ஜனநாயகம் !

பின்குறிப்பு :

திருச்சி இடைத் தேர்தலில் தி.மு.க . வாங்கிய ஓட்டுக்களை அ .தி.மு.க . வும் உள்ளாட்சித் தேர்தலில் அ .தி.மு.க .பெற்ற வெற்றியை மற்ற கட்சிகளும்  கவனத்தில் கொள்ள வேண்டும் .

மேலும் படிக்க :


.........................................

Tuesday, September 27, 2011

எங்கேயும் எப்போதும் !


திரைப்படங்களை  தங்கள்  வாழ்கையின்  ஒரு  பகுதியாக  கருதும்  சமூகத்தில்  தான்  நாம்  வாழ்ந்து   வருகிறோம் . திரைப்படங்களை  அவ்வளவு  எளிதில்  நம்மிடமிருந்து  பிரிக்க  முடியாது . கடந்த  இரண்டு  வருடங்களாக  நிறைய  நல்ல  தமிழ்ப்படங்களைப்  பார்க்கும்  வாய்ப்பைப்  பெற்று  வருகிறோம்  . அந்த  வகையில்  " எங்கேயும்  எப்போதும் " திரைப்படம்  நம்  திரையுலகை  ஒரு  புதிய  உயரத்தை  நோக்கி   நகர்த்துகிறது  .  

"எங்கேயும்  எப்போதும் " - மிகப்பெரிய  உழைப்பின்  வடிவம்  . படம்  தொடங்குவது  முதல்  படம்  முடியும்  வரை  ஒவ்வொரு நொடியிலும்  உழைப்பு  தெரிகிறது  . மிகச்சிறப்பான  திரைக்கதை  அமைப்பு  ,நல்ல  நடிப்பு , நல்ல  நல்ல  வசனங்கள்  , நல்ல  பாடல்கள்  ,நல்ல  ஒளிப்பதிவு  ,நல்ல படத்தொகுப்பு  என்று  படத்தில்  நிறைய  ' நல்ல  ' இருக்கிறது  . படத்தின்  சூழல் , சமூகத்தின்  சூழலோடு   மிகவும்  நெருங்கி  இருக்கிறது  . சென்னை நகரம்  அவ்வளவு  அழகாக  காட்டப்பட்டுள்ளது  . சென்னையைப்  பிடிக்காமல்  சென்னையில்  வாழ்ந்து  வருபவர்களுக்கு  , இனி  சென்னையைப்  பிடிக்கும் என நம்பலாம் .

அனன்யாவும்  , அஞ்சலியும்  (கொஞ்சம்  முதிர்ச்சி  தெரிந்தாலும்  ) அவ்வளவு  அழகு  (நடிப்பிலும் ) . நாடோடிகள்  படமும்  , இந்தப்படமும்  அனன்யாவின் சிறந்த  நடிப்புக்கு  உதாரணம்  . கற்றது  தமிழ்  , அங்காடித்தெரு  வரிசையில்  அஞ்சலியின்  மற்றுமொரு  சிறந்த  படம்  இந்த   " எங்கேயும்  எப்போதும்  " . தொடர்ந்து  இந்த  மாதிரியே  நடிக்கலாமே  அஞ்சலி ! இந்தப்படத்தில்  அஞ்சலி  பேசும்  வசனங்களை  இன்றைய  காதலர்கள்  கவனித்தால்  நல்லது  .

சர்வா ( " காதல்னா  சும்மா  இல்ல  " படத்துல  நடித்தவர்  தானே  ?) மற்றும்  ஜெய் 'யும்  சிறப்பாக  நடித்துள்ளனர் . ஜெய் , இந்த  மாதிரியான  படங்களை  தேர்ந்தெடுத்து  நடிக்கலாம் . சின்ன  சின்ன  கதாப்பாத்திரங்களில்  நடித்தவர்களும்  சிறப்பாக  நடித்துள்ளனர்  . படத்தின்  மிகப்பெரிய பலம்  ஒளிப்பதிவு  மற்றும்  படத்தொகுப்பு . சென்னையைக்  காட்டும்  பொது  நாமும்  சென்னையில்  இருப்பது  போலவும்  , திருச்சியைக்  காட்டும்  பொது  நாமும்  திருச்சியில்  இருப்பது  போலவும்  , பேருந்தைக்  காட்டும்  பொது  நாமும்  பேருந்தில்  இருப்பது  போலவும்  நம்மை  உணர  வைக்கிறது  ஒளிப்பதிவும்  , ஒலிப்பதிவும் . உயிரோட்டமான  சூழ்நிலைகளுக்கு   பின்னணி  ஒலி சேர்க்க  இசையமைப்பாளர்  மிகவும்  உழைத்திருக்கிறார்  .அற்புதமான படத்தொகுப்பு  , படத்திற்கு  வேகம்  கொடுக்கிறது .   

உதவி  இயக்குனர்களின்  உழைப்பும்  இந்தப்படத்தில்  தனியாக  தெரிகிறது  . இயக்குனரை  மீறி  அவர்கள்  தெரிவது  அதிசயம்  .கொஞ்சம்  தவறினாலும்  சோகமாக  மாறிவிடக்கூடிய  கதையை  அவ்வளவு   அழகாக , அதேசமயம்  அழுத்தமாக  படம்பிடித்துள்ளனர்  . நல்ல  கதைக்கரு  ,தொய்வே  இல்லாத  திரைக்கதை  , தற்போதைய  சூழலுக்குப்  பொருந்தும்  எளிமை  + இனிமை  வசனங்கள்  , சிறந்த  இயக்கம்  என்று  முதல்  படத்திலேயே  முத்திரை  பதித்து  விட்டார்  , இயக்குனர்  சரவணன்  , உங்களை  வருக  ! வருக  ! என  வரவேற்கிறோம்  .

எங்கேயும்  எப்போதும்  , எதையாவது  கற்றுக்கொள்ள  நமக்கு  வாய்ப்பு  இருக்கிறது  . இந்த   "எங்கேயும்  எப்போதும் " -விழும்   நாம்  (முக்கியமாக  ஓட்டுநர்கள் ) கற்றுக்கொள்ள  நிறைய   இருக்கிறது  . வாகனத்தை  ஓட்டும்போது   அதிக  வேகமும்  , செல்போனும்  கண்டிப்பாக  தவிர்க்கப்பட  வேண்டும்  . செல்போனைக்  கூட   தவிர்த்து  விடலாம் ? ஆனால்  வேகத்தைத்  தவிர்க்க  முடியுமா  ? தெரியவில்லை  . இன்றைய  அவசர  வாழ்க்கையில்  வேகத்தை  கவனத்தில்  கொண்டுதான்  நாம்  பேருந்திலேயே  ஏறுகிறோம்  . வேகத்தை  மட்டுமே  தேர்ந்தெடுத்தால்  வேகமாக  போய்ச்  சேர  வேண்டியது  தான்  , பாலிசி  எடுக்க  மறந்து  விடாதீர்கள் ! ?   

இயல்  , இசை  , நாடகம்  மூன்றும்  சேர்ந்தது  தான்  நமது  தமிழ்  மொழி . நாடகத்தின்  மறுவடிவமான  சினிமாவிற்கு  கொடுக்கும்  முக்கியத்துவம்  இயல்  மற்றும்  இசைக்கு  கொடுக்கப்படுவதில்லை . வாரயிதழ்களின்  அட்டைப்படங்களை  சினிமாக்காரர்களும்  , அரசியல்வாதிகளும்  மட்டுமே  அலங்கரிக்கிறார்கள் . இலக்கியத்துறையில்  ஒருவர்  எவ்வளவு  பெரிய  விருது  வாங்கினாலும்  , பெரிய  சாதனைகள்  செய்தாலும்  கவனிக்கப்படுவதேயில்லை  . இசை  என்றால்  திரையிசை  மட்டும்  தான்  என்ற  அளவில்  சுருங்கி  விட்டது  . எவ்வளவோ  திரைப்படங்கள்  எடுக்கப்படுவது  போல்  , எவ்வளவோ  புத்தகங்கள்  எழுதப்படுவது  போல்  இசையிலும்  எவ்வளவோ  செய்யலாம்  . இயல் , இசை  ,நாடகம்  மூன்றையும்   இதன்  வரிசைப்படியே  கொண்டாடலாம் . இந்த  மூன்றின்  வளர்ச்சியில்  தான்  அடங்கியுள்ளது  நம்  மொழியின்  வளர்ச்சி .

வாழ்க  வளமுடன் ! 

மேலும் படிக்க :


....................................................................... 

Monday, September 5, 2011

ஜப்பானும் தனிமனித ஒழுக்கமும் !

"திருடனாய்ப்  பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .." , " தனியொரு மனிதன் திருந்திவிட்டால் சிறைச்சாலைகள் தேவையில்லை ..." இரண்டும் புகழ்பெற்ற பாடல் வரிகள் . நாம் எவ்வளவுதான் சட்டங்கள் போட்டாலும் இன்னும் நம்மால் நிறைய விசயங்களை மாற்றமுடியவில்லை . செயல்படுத்துபவர்களும் , பின்பற்றுபவர்களும் சரியாக இல்லாதவரை சட்டங்களால் என்ன செய்ய முடியும் ?

அண்ணா  ஹசாரே , சமீபத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் . பாதிப்பேர் அவரை ஆதரிக்கிறார்கள் மீதிப்பேர் அவரையும் ,ஜன் லோக்பாலையும் எதிர்க்கிறார்கள் . அண்ணாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான் விசயம் "அகிம்சை " . அவரது போராட்டத்தின் போது யாருக்கும் எந்த இடையூறும் ,முக்கியமாக பொதுச்சொத்துக்கு எந்தவிதமான சேதமும் ஏற்ப்படவில்லை. மற்றவர்கள் நடத்திய , நடத்தும் போராட்டங்களில் இவை சாத்தியமில்லை .அகிம்சையின் சக்தியை தற்போது எல்லோராலும் உணர முடிந்திருக்கிறது . இவரை காந்தியுடன் ஒப்பிடவேண்டிய அவசியம் இல்லை .

 யாரும் எதுவும் செய்யமாட்டேன் என்கிறார்கள் , யாரவது எதாவது செய்யும் போது அவரை எதிர்க்க மட்டும் அணி திரண்டு விடுகிறார்கள் . இது ஒரு வகையான  நோய் . கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி வெற்றிப்பெறும்  போது அந்த அணி தோற்கவேண்டும் என்று எல்லோரும் வேண்டுகிறோம் . இது நம்மால் முடியாததை இன்னொருவன் செய்யும்போது ஏற்படும் ஆற்றாமையின் வெளிப்பாடு . நாமளும் எதுவும் செய்யக்கூடாது , அடுத்தவனும் எதுவும் செய்யக்கூடாது என்ற மனநிலையையே இதற்குக் காரணம் .

நாட்டில் ஊழலைவிடப் பெரிய பிரச்னைகள் இருக்கின்றன . அதில் கவனம் செலுத்தாத மக்கள் , "ஜன் லோக்பால்" மீது கவனம் செலுத்துவது நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை . உண்மையைச் சொல்லப்போனால் ஜன் லோக்பால் மூலமாக மற்ற பிரச்னைகளான இரோம் சர்மிளா , ஒரிசா போஸ்கோ , பழங்குடியினர் பிரச்னைகள் அதிக மக்களைச் சென்றடைந்திருக்கின்றன . மற்ற பிரச்னைகளை மக்கள் கவனிக்கவில்லை என்று சொல்பவர்கள் அதை அண்ணா ஹசாரே உண்ணாவிரத மேடையில் சொல்லியிருந்தால் அது எல்லோருக்கும் சென்று சேர்ந்திருக்குமே , அதைச் செய்யாமல் எல்லோரும் ஒவ்வொரு மூலையிலிருந்து எதிர்ப்புக் குரல் மட்டுமே கொடுத்தார்கள் .எப்போதும் போல்  எதையும் செயல் படுத்தாமல் பேசிக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு விட்டார்களோ என்னவோ !


 நம் சமூகத்தின் அடிப்படைப் பிரச்னை "தனிமனித ஒழுக்கம்" தான் ,சட்டங்கள் அல்ல . தனிமனித ஒழுக்கம் இல்லாதவரையில் எந்தச் சட்டங்களாலும் எந்தப்பயனும் இல்லை .தனிமனித ஒழுக்கத்திற்கு சமீபத்திய மிகச் சிறந்த உதாரணம் , ஜப்பான் மக்கள் . ஜப்பான் மக்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது . அவ்வளவு பெரிய பேரழிவு நிகழ்ந்தபோதும் அமைதியாக நேர்மையான வழியில் நடந்து கொண்டனர் . திறந்து கிடந்த கடையில் யாரும் திருடவில்லை , அமைதியாக வரிசையில் நின்று பொருட்கள் வாங்கினர் . சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களில்  கிடந்த பணத்தை எடுத்து தொடர்ந்து அரசுக்கு செலுத்தி வருகின்றனர் . இதுவரை 800 கோடிக்கும் அதிகமான பணம் அரசிடம் சேர்க்கப்பட்டிருக்கிறது . இவை எப்போதும் இந்தியாவில்  சாத்தியமில்லை . காரணம் ?

நாம் இன்று செய்ய வேண்டியது தனிமனித ஒழுக்கத்தை இந்தியச் சமூகத்தில் பரவச் செய்வது மட்டுமே . போராட்டத்தில் கலந்து கொள்ளும் எல்லோரும் எதோ ஒரு வகையில் லஞ்சத்திற்கும் , ஊழலுக்கும் துணை போனவர்கள் தான் .தனி மனிதனாக நாம் நிறைய விசயங்களிடம் தொடர்ந்து தோற்றுக்கொண்டே தான் இருக்கிறோம். பிளாஸ்டிக்கிடம் தோற்கிறோம் , காலத்திடம் தோற்கிறோம், இயற்கையை ரசிக்க மறக்கிறோம் , உடலிடம் தோற்கிறோம் , உணவிடம் தோற்கிறோம் . இவ்வளவு விசயங்களில் தோற்றாலும் மீண்டும் அவற்றை வெற்றிக்கொள்ள தொடர்ந்து போராட வேண்டியிள்ளது .

இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களின் மிகப் பெரிய எதிரி " உலகமயமாக்கல் " மட்டுமே . உலகமயமாக்கல் , நம்மை நாமாக பார்க்க அனுமதிக்காமல் மற்றவர்களுடன் பொருத்திப் (Comparison) பார்க்கவே செய்கிறது .மற்றவர்கள் போல் இருக்க நாம் தினமும் தூண்டப்படுகிறோம் . நம் சுயத்தை இழக்கிறோம் . நம்மை நினைத்து நாம் பெருமைப் படுவதற்குப் பதிலாக , மற்றவர்களைச் கவனிக்கச் செய்து நம்மை கவலைப்பட வைப்பது தான் உலகமயமாக்கலின் தந்திரம் . முக அழகு கிரீம் , முடி வளர , முடி கொட்டாமல் இருக்க,ஒல்லியாக ,குண்டாக  என்று விதவிதமான குப்பைகளை  நம் தலையில் கட்டுகிறார்கள் . நாம் உணவுக்குச்  செலவு செய்வதை விட நம் ஆடம்பரத்துக்கு அதிகம் செலவழிக்கிறோம் . கடன் வாங்கியாவது நம் ஆடம்பரத்தை நிலை நாட்டுகிறோம் .

பழங்குடியினர் பிரச்னை, ஒரிசா போஸ்கோ பிரச்னை என்று பல பிரச்னைகளுக்கு உலகமயமாக்கல் தான் காரணம் . உலகமயமாக்கலால் மற்ற நாடுகள்  சூடு பட்ட நிலையிலும் தற்போதைய காங்கிரஸ் அரசு , உலகமயமாக்கலின் உதவியுடன் இந்தியாவை மற்றவர்களின் அடிமை தேசமாக மாற்றவே தொடர்ந்து முயல்கிறது . 

 தொடர்ந்து பெரிய முதலாளிகளை வளர்ப்பது ,சிறிய முதலாளிகளைப் அழிப்பது , இயற்கை வளங்களை அழிப்பது , விவசாயத்தைக் கெடுப்பது , பூமியின் சுற்றுச்சூழலைப் பெருமளவு பாதிப்பது , பணத்தை ஒரே இடத்தில் சேர்ப்பது , பணக்காரனுக்கும் ஏழைக்கும் உள்ள வித்தியாசத்தை தாறுமாறாக உயர்த்துவது , ஒட்டுமொத்தப்  பொருளாதாரமே ஒருசிலரை நம்பி இருப்பது ,கலாச்சார அடையாளங்களை அழிப்பது ,எல்லோரையும் நோயாளிகளாக்குவது ,   இவை தான் உலகமயமாக்களின் சாதனைகள் .

தனிமனித ஒழுக்கமும், உலகமயமாக்கலும் தான் நமது பெரிய பிரச்னைகள் !

நமக்கு நடக்காத வரை எல்லாமும் வேடிக்கை தான் !

மேலும் படிக்க :


.......................................................................................


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms