Thursday, December 1, 2011

உண்மையான கொண்டாட்டம் !

குழந்தைகளின் உலகம் மிகவும் அழகானது ,மிகவும் அற்புதமானது ,மிகவும் ஆனந்தமானது ,மிகவும் கொண்டாட்டமானது . இதை உணராத மனநிலையில் நாம் இருக்கிறோம் . குழந்தைகளின் தினசரி வாழ்வில் நிறைய அன்பும் ,நிறைய பிணைப்பும் , கொஞ்சம் சண்டையும் கலந்திருக்கின்றன . குழந்தைகளை குழந்தைகளாக வளர நாம் அனுமதிப்பதே இல்லை . நான்கு வயதிற்குள் , தனக்கு வேண்டியதை தானே செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் .

அறிவியல் என்ன சொல்கிறது என்றால் , குழந்தையின் 14 வயது வரை நம் கைகள் அவர்களைத் தொட்டுக்கொண்டே இருக்க வேண்டும் . அப்போது தான் அந்தக் குழந்தை தனக்காக இவர் இருக்கிறார் என்று உணரும் .இல்லாவிட்டால்  தனக்காக யாரும் இல்லை என்று உணர்த்து அதற்கேற்றவாறு  நடந்து கொள்ளும் . அப்புறம் " எம்புள்ளை என் மேல பாசமாவே இல்லை " னு புலம்புவதால் ஒன்றும் நடக்காது .

" தொடுதல் " - ஒரு அற்புதமான நிகழ்வு . நெருக்கமானவர்கள் சந்திக்கும் போது தொட்டுக்கொண்டே பேசுங்கள் . தொடுதல் ,உங்களில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தும் . குழந்தைகள் நம்மிடமிருந்து அதிக தொடுதலையும் ,அதிக நெருக்கத்தையும் எதிர்பார்க்கிறார்கள் . இதை செய்யாதே ,அதை செய்யாதே என்று நாளும் நம்மிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள் ."பேசாமல் உட்கார்ந்து டிவி பார் " - என்று பணிக்கப்படுகிறார்கள் . அப்படி டிவி பார்க்கும் குழந்தை , ' நல்லபிள்ளை ' என்று பெயர் வாங்குகிறது .என்ன கொடுமை இது ? " எண்ணிலடங்காத விளையாட்டுகளால் நிரம்பியது தான் அவர்களின் உலகம் "  என்று எப்போது உணரப்போகிறோம் . 

"மண்ணுல விளையாடாதே! " என்று தடுத்து மண்ணோடு உருவாகும்  நெருக்கத்தைப்  பறிக்கிறோம் . இன்று , நகரங்களில் மண்ணைப் பார்ப்பதே அரிதிலும் அரிதாகிவிட்டது .எங்கெங்கு காணினும் கான்கிரிட் .வண்ணதாசன் சொன்னது போல " கையிலும் ,காலிலும் மண் படாத வாழ்க்கை ,ஒரு வாழ்க்கையா ? ".  செருப்பைத்  துறந்து ஒரு முறை மண்ணில் நடந்து பாருங்கள் ,ஒரு முறை மண்ணை கைகளால் அள்ளுங்கள் ,ஒரு முறை மண்ணில் உங்கள் கால்களைப் புதைத்து அமருங்கள் .மண் உங்களோடு பேசுவதை உணர முடியும் . நான் குறிப்பிட்டது ,கடல் மணலையோ அல்லது நம் புண்ணியவான்கள் எச்சி துப்பி வைத்திருக்கும் மண்ணையோ அல்ல .

" குழந்தைகள் மண்ணோடு விளையாடும் போது அவர்களின்  நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கிறது "- என்று புதிய ஆய்வு ஒன்று அறிவிக்கிறது . இனி மேலாவது குழந்தைகளை மண்ணோடு விளையாட அனுமதிப்பார்களா ? மண்ணில் விளையாட சொல்வதற்குக்கூட யாரோ ஒருவர் ஆய்வு நடத்த வேண்டியுள்ளது .எனது குழந்தைப் பருவத்தில் மழை பெய்து முடிந்த ஒவ்வொரு அடுத்தநாளும் அவ்வளவு அற்புதமானது . மழைநீர் ஓடிய தடம் அவ்வளவு அழகாக இருக்கும் .விதவிதமான நிறங்களாலான மண் துகள்கள் கலந்த ஈரமண்ணிலேயே கழியும் எங்களது காலையும் ,மாலையும் .  கொட்டாங்குச்சியில் ஈரமண்ணை நிரப்பி இட்லி சுட்டு விளையாடிய நாட்கள் இன்றும் பசுமையாக இருக்கின்றன . இன்றும் மழை பெய்கிறது , மழை நீர் ஓடுகிறது ,கொட்டாங்குச்சியும் இருக்கிறது .ஆனால் , நிறங்களாலான மண் துகள்களையும் ,இட்லி சுடும் குழந்தைகளையும் காணவில்லை .காரணம் , சிமென்ட் சாலை .

" கேள்வி கேட்பது " - மிகவும் அவசியாமான செயல் . குழந்தைகள் மட்டும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுவதில்லை . குழந்தைகள் ,அபத்தமான , வேடிக்கையான , கற்பனையான ,எதார்த்தமான மற்றும் அறிவான கேள்விகளுக்குச்  சொந்தக்காரர்கள் .அவர்களின் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில்கள் கிடைக்கின்றன , பல கேள்விகளுக்கான பதில்கள் , அதன் எளிமையாலும் ,கடினத்தாலும் , நேரமின்மை என்று காட்டிக்கொள்வதாலும்  வீட்டிலும் ,பள்ளியிலும் மறுக்கப்படுகின்றன . தொடர்ந்து கேள்விகள் கேட்கும் குழந்தையே ஆரோக்கியமானது , உலகைப்  புரிந்து கொள்வதின் ஆரம்பமே கேள்விகள் என்று நாம் உணர வேண்டும் .      

பழைய கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் குழந்தைகள் குழந்தைகளாக காட்டப்பட்டார்கள் .அவர்களுக்கென்று அவர்களுடைய பாணியில் தனிப்பாடல்கள் இருந்தன . நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களாக குழந்தைகள் இருந்தனர் . அவர்களைச் சுற்றியே கதை நகர்ந்தது .இன்றைய திரைப்படங்கள் , குழந்தைகளைக் குழந்தைகளாக காட்டுவதில்லை , குழந்தைகளுக்கென்று தனிப்பாடல்கள் இல்லை,
குழந்தைகளை அபத்தமான நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படுத்துகின்றன .

டிவி பார்க்கவும் , கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் கேம்ஸ் விளையாடவும் மட்டுமே அனுமதிக்காமல் மண்ணிலும் மற்ற குழந்தைகளுடனும் விளையாட அனுமதிக்க வேண்டும் . இயற்கையை ரசிக்கவும் , இயற்கையின் மாறுதல்களைப்  புரிந்து கொள்ளவும் கற்றுத்தர வேண்டும் . மூன்று வயதிலேயே  படி! படி! என்று அதட்டாமல் வேண்டிய மட்டும் விளையாட அனுமதிக்க வேண்டும் . விளையாட துணை கிடைக்காத போது நாமே துணையாக மாறி அவர்களுடன் விளையாட வேண்டும் .

சமீபத்தில் ஒரு 5 வயது குழந்தை பாடிய பாடல் :

தக்காளி தக்காளி
எப்ப கல்யாணம்
நேத்து மத்தியானம்
யாரு வந்தாரு
ஐயர் வந்தாரு
என்னா கேட்டாரு
மோர் கேட்டாரு
என்னா மோர்
விச மோர்
என்னா விசம்
பாம்பு விசம்
என்னா பாம்பு
மலைப்பாம்பு
என்னா மலை
அண்ணாமலை !

14 வயது வரை அவர்கள் குழந்தைகள் தான் என்பதை நாம் உணர வேண்டும் . குழந்தைகளைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருங்கள் ,நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய விசயங்கள் கிடைக்கும் .நமது கொண்டாட்டமெல்லாம் கொண்டாட்டமே இல்லை .

ரரின்றா பிரகர்சா ( Rarindra Prakarsa ) , இயற்கையான சூழ்நிலையில் எடுத்த குழந்தைகளின் அற்புதமான படங்களைப் பார்க்க - http://photo.net/photodb/member-photos?user_id=2231437

குழந்தைகளின் கொண்டாட்டமே  உண்மையான கொண்டாட்டம் !

நன்றி - http://photo.net/
  
மேலும் படிக்க :

காங்கிரஸை அழிப்போம் ! 

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 
................................................................................................................................................................

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நச்!... அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

Shama T said...

Very very nice

Anonymous said...

super

aashaa said...

இந்த உலகம் குழந்தைகளுக்கானது தான். குழந்தைகளை பார்த்து தான் நாம் அப்பொழுது சிரிக்கிறோம், நம்ம கவலைகளை மறந்து போகிறோம் நன்றி வாழ்க வளமுடன்.
https://aashaatamil.blogspot.com/

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms