Monday, September 2, 2024

கட்றா தாலிய -கலகலப்பான குறும்படம் ❤️


மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருகிறது. பொருத்தமான நடிகர்கள் தேர்வு, பட்டைய கிளப்பும் டைமிங்கான வசனங்கள், அழகான காட்சியமைப்புகள், கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் இசை மற்றும் ஒளிப்பதிவு என எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது. 


ஒரு பக்கம் ரகளையான அங்கமுத்து - வன்ராஜ்  கூட்டணி. இன்னொரு பக்கம் கலக்கலான சீமத்தண்ணி - கிருத்திகா கூட்டணி.  நீங்கள் ஒதுக்கப் போகும் 30 நிமிடங்கள் வீணாகாது.


இயக்குநர் சேவியர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


YouTube தளத்தில் காணலாம் !





மேலும் படிக்க :


5 ரூபா -குறும்படம் !

மக்காமிஷி ( Makkamisi) ❤️


குழந்தைகள் உலகிலிருந்து தெரிந்து கொண்ட பாடல். கடந்த ஒரு வாரமாக அவங்களுக்கு 'Morning Vibe' இந்தப் பாடல் தான். அவங்களுடன் சேர்ந்து கேட்டு ஓய்வு நேரங்களில் முனுமுனுக்கும் அளவிற்கு பிடித்துப் போய்விட்டது. 


ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஜெயம் ரவி நடித்து வெளியாக இருக்கும் ' Brother ' எனும் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. பால் டப்பா எனும் பெயருடைய தமிழ் ராப் பாடகர் இப்பாடலை எழுதி பாடியிருக்கிறார். கேட்கும் போது மிகவும் எனர்ஜியாக இருக்கிறது. இந்தக் கால தத்துவபாடல் என்றும் சொல்லலாம். பால் டப்பா, ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


பால் டப்பா யார் என்று தேடும் போது தான் தெரிந்தது குழந்தைகளின் போன வார ' Morning Vibe' பாடலான 'காத்து மேல ' பாடலை எழுதி பாடியவர் என்று. இந்த இரண்டு பாடல்களிலேயே குழந்தைகளை கவர்ந்துவிட்டார் பால் டப்பா ❤️. 


" மக்காமிஷி.. 

பிரச்னையை லேப்ட் ஹண்ட்ல ஹாண்டில் பண்ற மைக்கேல்ஹஸி......"


மேலும் படிக்க :

காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️

அடி ராக்கம்மா கையத்தட்டு...!

பாலியல் சுரண்டல்கள் ஒழியட்டும் !


கேரள திரையுலகில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத் திரையுலகிலும் ஏன் உலகத்தில் உள்ள எல்லா திரையுலகிலும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலும் , பாலியல் சுரண்டலும் இருக்கிறது. இதை உலகில் உள்ள எந்தத் திரையுலகும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்தம். 


மூடி மறைக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு முதலில் திரையுலகில் இருப்பவர்களே இதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் மேலும் குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் மனநிலை ஒழியாமல் எந்த மாற்றமும் நிகழாது.


இந்தியாவைப் பொறுத்தவரை பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் காவலர்களாக இருந்தாலும், வழக்கறிஞர்களாக இருந்தாலும் கூட பாலியல் ரீதியான அத்துமீறல்களும், வன்கொடுமைகளும் பணியிடங்களில் நிகழ்கின்றன. 

இவை எல்லாவற்றுக்கும் ஆணாதிக்க மனநிலை தான் காரணமாக இருக்கிறது. ஆணாதிக்க மனநிலை ஒழியாமல் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது எங்கும் கிடைக்காது. 


இயல்பாகவே ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் மாற்று பாலினத்தவராக இருந்தாலும் இன்னொரு மனிதர் மீது ஈர்ப்பு வருவது இயல்பு. இதில் எந்தத் தவறும் இல்லை.பெண்ணோ, ஆணோ 'Mutual Consent ' இல்லாமல் நடக்கும் எதுவும் தவறு தான்; குற்றம் தான். 


வாழ்க்கைச் சூழல் காரணமாக வெவ்வேறு விதமான பணிகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவர்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். 


ஆணாதிக்க மனநிலையை வளர்ப்பதில் தமிழ்த் திரைப்படங்களும், சின்னத்திரையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாயக்துதிபாடலை வளர்ப்பதுடன் , அதீத வன்முறையையும், பெண்களை கவர்ச்சி பொருளாகவும் முன்வைக்கின்றன. பள்ளி மாணவர்களின் மோதல்கள் கூட மரணம் வரை செல்வதற்கு யார் காரணம்? 


இயற்கையைப் போலத்தான் பெண்களும் எத்தனை விதமான தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து இயங்குவதை யாராலும் தடுக்க முடியாது. 


ஆணாதிக்க மனநிலை ஒழியட்டும் !


எல்லோருக்கும் நல்வாழ்வு அமையட்டும் !


மேலும் படிக்க:

பெண் எனும் உருமாறும் சக்தி !


காதல் வானிலே... காதல் வானிலே...-பிரித்தி உத்தம்சிங் ❤️


ராசய்யா(1995) திரைப்படத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவான இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் சாதாரணமாக கடந்து போக முடிந்ததில்லை. சமீப காலங்களில் சன் லைப் தொலைக்காட்சியில் தான் இப்பாடலை அதிகம் பார்த்திருக்கிறேன். 


இளையராஜாவின் இசை, வாலியின் டச் நிறைந்த பாடல் வரிகள், பிரபுதேவாவின் நடனம், ரோஜாவின் வசீகரம் இவற்றையெல்லாம் கடந்து அதிகம் ஈர்த்தது அந்த பெண் குரல். தேடிய போது தான் தெரிந்தது, அந்தக் குரலிற்குச் சொந்தக்காரர் பிரித்தி உத்தம்சிங் என்று. இவர், இளையராஜாவின் உதவியாளராக இருந்து பின்னாளில் இசையமைப்பாளராக மாறிய உத்தம் சிங்ஙின் மகள். 


குறிப்பாக இந்த வரிகள் காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. 


"அன்னையாம் ஒரு

தந்தையாம் அது காதல்தான்

காதல்தான் ஓ..."


"அப்பர் சுந்தரர்

அய்யன் காதலில் ஆண்டாள்

கொண்டதும் காதல்தான்..."


"ஓம் சாந்தி ஓம்

சாந்தி ஓம் சாந்தி ஓம்

சாந்தி ஓம்"


அதே ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற "அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்...(சந்திரலேகா)" பாடலும் இந்த பிரித்தி உத்தம்சிங் பாடியது தான். இரண்டு பாடல்களிலும் ஆண் குரல்களைத் தாண்டி ஒலிப்பது பிரித்தியின் குரல் தான். வேறு தமிழ் பாடல்கள் பாடியிருக்கிறாரா என்று தெரியவில்லை. 


உயிரை மீட்டும் குரல் பிரித்தி உத்தம் சிங்ஙுடையது . இவரது மற்ற மொழி பாடல்களையும் கேட்க வேண்டும்.


மேலும் படிக்க  :


அடி ராக்கம்மா கையத்தட்டு...!


பட்டுவண்ண ரோசாவாம் ...!



Maharaj - வடக்கிலிருந்து ஒரு வெளிச்சம் 👍


தமிழ்நாட்டில் இப்படியான பகுத்தறிவு கருத்துகளை முன்வைத்து திரைப்படங்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் எடுக்கமாட்டார்கள். கடந்த ஓராண்டாக பார்ப்பன ஆதிக்கத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் வடக்கிலிருக்கும் அரசியல்வாதிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இந்தச் சூழலில் இப்படியானதொரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது. 


19ம் நூற்றாண்டில் பம்பாய் நகரத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்த 'மகராஜ்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த கருத்துகளை யார் சொன்னாலும் நாம் வரவேற்க வேண்டும். குஜராத்தில் பிறந்த கர்சன்தாஸ் எனும் பிராமணர், பகுத்தறிவு கருத்துகளை அங்கே அந்த காலகட்டத்தில் முன் வைத்திருக்கிறார். அதனால் இன்னல்களையும் சந்தித்திருக்கிறார். எல்லோரையும் சமமாக நடத்தும் எவரும் ( பிராமணராக இருந்தாலும் ) பார்ப்பனர் அல்ல. பிறப்பால், தான் மற்றவர்களை விட உயர்ந்தவர் என நினைக்கும் ஒவ்வொருவரும் ( பிராமணராக இல்லாவிட்டாலும் )பார்ப்பனர் தான். பிறப்பால் அனைவரும் சமமே.


பக்தியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் இன்றும் குறைந்தபாடில்லை. அப்படி பக்தியை துணையாக வைத்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கி குளிர்காய்ந்த மகராஜ் எனும் ஒரு மடத்தைச் சேர்ந்த சாமியாரின் அயோக்கியத்தனத்தை தோலுரித்து காட்டும் திரைப்படம் தான் இது. கடவுளுக்கும் பக்தருக்கும் இடையில் சாமியாரோ ,வேறு யாருமோ தேவையில்லை. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை மட்டுமே வழிபட வேண்டும். கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றும் கூட்டத்துடன் எப்போதும் சேரக்கூடாது. 


தற்போதைய காலம் என்பது ஜக்கி, நித்தியானந்தா, ரவிசங்கர், பாபா ராம்தேவ், பால் தினகரன் போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் காலமாக இருக்கிறது. இவர்கள் எவரையும் நம்பக்கூடாது. இவர்கள் இல்லாமல் இந்தியா முழுவதும் விதவிதமான ஆதீனங்கள், அமைப்புகள் இருக்கின்றன. இவர்களும் ஏமாற்றுக்காரர்கள் தான். எந்த மதமாக இருந்தாலும் எந்தக் கடவுளாக இருந்தாலும் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் யாரும் தேவையில்லை. கடவுளே தேவையில்லை என்பது தனியாக விவாதிக்க வேண்டியது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை மட்டுமே நம்புங்கள்.


ஒரே நேர்கோட்டில் கதையை சொல்லி முடித்திருக்கிறார்கள். " ஆளும் வர்க்கத்தின் பலம் அரசு இயந்திரங்களான நிர்வாகம், சட்டம், அதிகாரம் முதலிய அரசு இயந்திரங்களை இயக்குவதில் மட்டும் அல்ல பண்பாட்டுத் தளத்திலும் பத்திரமாக இருக்கிறது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் போராட வேண்டியிருக்கிறது" - என்ற கிராம்சியின் கூற்றுக்கிணங்க இந்திய மக்களின் பண்பாட்டுத் தளத்திலும் இறங்கி போராடினால் மட்டுமே இந்த பாசிச, மக்கள் விரோத,மதவாத பாஜக அரசை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிய முடியும். இந்து என்பது வேறு இந்துத்துவம் என்பது வேறு என்பதை இந்திய மக்கள் உணரும் போது பாஜக அதிகாரத்தில் இருக்காது.


விதவிதமான வடிவங்களில் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் அதிகளவில் பிற்போக்குத் தனங்கள் பரப்பப்படும் பாலிவுட் சினிமாவிலிருந்து இப்படியானதொரு திரைப்படம் வந்திருப்பது ஆச்சரியம் தான். இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். பிற்போக்குத் தனங்கள் ஒழிந்து போகட்டும். எல்லா மதங்களிலும் சாமியார்களின் ஆதிக்கம் அழியட்டும். சமத்துவம் பரவட்டும்.


மேலும் படிக்க  :


FANDRY - மனதிற்கு நெருக்கமான படைப்பு !


DAREDEVIL MUSTHAFA - FANTASTIC MAKING !

குரங்கு பெடல் ❤️


ஏறக்குறைய அனைத்து குழந்தைகளின் கைகளிலும் மொபைல் போன்கள் வந்துவிட்டாலும் சைக்கிள் மீதான பிரியம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. முன்பைப் போல இடவசதி இல்லாவிட்டாலும் கூட அடம் பிடித்தாவது சைக்கிள் வாங்கி விடுகிறார்கள், குழந்தைகள். இப்படியான சூழலில் எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் 'குரங்கு பெடல் '.


குழந்தைகளையும் சைக்கிளையும் பிரிக்க முடியாது. சைக்கிளுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள பிணைப்பை 80 களின் காலப் பின்னணியில் அழகியலுடன் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம். குரங்கு பெடல் என்பதையும், வாடகை சைக்கிள் என்ற நடைமுறையும் இப்போதைய தலைமுறைக்குத் தெரியாது. இத்திரைப்படத்தைக் காணும் போது அவர்களும் தெரிந்து கொள்வார்கள். 


இத்திரைப்படத்தில் சைக்கிளுடன் அப்பாவிற்கு நேர்ந்த அனுபவமும், மகனிற்கு கிடைத்த அனுபவமும் வெவ்வேறானவை. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் காண வேண்டிய திரைப்படம். அப்படி குழந்தைகளுடன் சேர்ந்து காணும் போது சைக்கிளுடனான தங்களது கடந்த கால நினைவுகளை அசை போட முடியும். 


கதைக்குத் தேவையே இல்லாத , குழந்தைகளும் பார்ப்பார்கள் என்ற குறைந்தபட்ச பொறுப்புணர்வு கூட இல்லாமல் அதீத வன்முறைக் காட்சிகள் இன்றைய திரைப்படங்களில் திணிக்கப்படும் சூழலில், அமைதியான சூழலை அழகாக படம்பிடித்து அனைவரும் ரசித்து பார்க்கும்படி செய்திருக்கிறது இந்த 'குரங்கு பெடல்'.


சைக்கிள் மீதான காதல் நமக்குத் தீர்வதேயில்லை. நாம் வெவ்வேறு வாகனங்களில் பயணித்தாலும் இப்போதும் சைக்கள் வாங்க வேண்டும், சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கும். எங்கு இருந்தாலும், என்ன பணி செய்தாலும் தினமும் சைக்கிள் ஓட்டுவதை தவற விடாதவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். சைக்கிள் ஓட்டுவது உடலுக்கும் இயற்கைக்கும் நல்லது. 


இந்தத் திரைப்படத்தைக் காணும் போது இன்னும் நிறைய விசயங்களைச் சேர்த்திருக்கலாமோ என்று கூட தோன்றும். சிறுகதையை திரையனுபவமாக மாற்றியிருப்பதால் அதற்குள்ளாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார்கள். இலக்கிய படைப்புகள் திரைப்படங்களாவதும், இரண்டு மூன்று பேர் சேர்ந்து திரைக்கதை எழுதுவதும் மிகவும் ஆரோக்கியமான விசயம். 


இன்றைய திரைப்படங்களில் குழந்தைகள் குழந்தைகளாக காட்டப்படுவதில்லை அல்லது குழந்தைகளே இல்லை. இந்தச் சூழலில் குழந்தைகளுக்காக, குழந்தைகளுக்கான திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கமலக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள். கமலக்கண்ணன் இயக்கிய 'மதுபானக்கடை' திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் இப்போதாதவது பார்த்து விடுங்கள்.உங்களுக்கு நல்லதொரு திரையனுபவம் கிடைப்பது உறுதி. இவரது 'வட்டம்' திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. அடுத்து அதையும் காண வேண்டும். 


நல்ல சிறுகதை, நல்ல ஒளிப்பதிவு, நல்ல இசை, நல்ல இயக்கம் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


மேலும் படிக்க  :


அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !


சேத்துமான் ❤️

Amar Singh CHAMKILA ❤️❤️❤️


இரட்டை அர்த்தப் பாடல்களை எழுதி, இசையமைத்து,பாடி அதன் மூலம் பெரும் புகழ் பெற்றவர், பஞ்சாப் பாடகர், அமர்சிங் சம்கிலா. அதற்காகவே தனது 27வது வயதில்(1988) அடையாளம் தெரியாத நபர்களால் மனைவியுடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அற்புதமான திரைப்படம் தான், 'அமர்சிங் சம்கிலா'.  


புனிதம் என்று எதுவும் பூமியில் இல்லை. மதக்கோட்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கும் அடிப்படைவாதிகள்தான் புனிதம், புனிதம் என்று தொடர்ந்து கூவிக் கொண்டேயிருக்கிறார்கள். மாற்றம் என்பதே நிலையானது. இதை அடிப்படைவாதிகள் ஏற்பதில்லை. அடிப்படைவாதிகளை வளர்த்து பாதுகாக்கும் வேலையை அனைத்து மதங்களும் தொடர்ந்து செய்து வருகின்றன. அதிலும் ஆயுதம் ஏந்திய அடிப்படைவாதிகள் எப்போதும் ஆபத்தானவர்களே. இதனால் தான் கார்ல் மார்க்ஸ் " மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான முதல் தேவை, மதங்களை அழிப்பது " என்று சொல்லியிருக்கிறார். மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையில் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் தேவையில்லை.


சம்கிலா, தான் பிறந்து வளர்ந்த சூழலலாலேயே இப்படியான பாடல்களை எழுதவும், பாடவும் செய்கிறார். இந்தப் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து இரட்டை அர்த்தப் பாடல்களையே பாடியே புகழ் பெறுகிறார். நன்றாக பாடும் திறமையுள்ளவர் என்பதாலேயே தனது முதல் திருமணத்தை மறைத்து 

அமர்ஜ்யோத் எனும் பாடகியை திருமணம் செய்து கொள்கிறார். அந்த காலத்தில் இங்கே என்.எஸ்.கிருஷ்ணனும் தனது முதல் திருமணத்தை மறைத்துவிட்டு டி.ஏ. மதுரத்தை திருமணம் செய்து கொண்டது நினைவிற்கு வருகிறது.


எல்லா நாட்டு கலை வடிவங்களிலும் பாலியல் சார்ந்த குறியீடுகளும், குறிப்பாக பாடல்களில் இரட்டை அர்த்தங்களும் தொடர்ந்து இருந்து வருகின்றன. வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லோருமே இம்மாதிரியான பாடல்களை ரசிக்கிறார்கள்; கதைகளை தேடித்தேடி வாசிக்கிறார்கள். கலை மக்களுக்கானது . இதில் புனிதம் என்றோ தீட்டு என்றோ எதுவுமில்லை. 


தமிழ் திரையிசைப் பாடல்களில் இரட்டை அர்த்தங்கள் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை அர்த்தம் புரிந்தோ புரியாமலோ கொண்டாடப்பட்டவை. ரசிக்கும் வகையிலான பாடல்களின் எண்ணிக்கையே அதிகம். அந்த அளவிற்கு தமிழ் மொழி இனிமையானது. வெகு சில பாடல்கள் மட்டுமே கொச்சையான மொழியில் எழுதப்பட்டு பாடப்பட்டிருக்கின்றன. கதைகளிலும் கி.ராஜநாரயாணன் தேடித்தேடி சேகரித்த நாட்டார் பாலியல் கதைகள் எல்லாம் பொக்கிஷம். வயதிற்கு வந்த எவரும் இரட்டை அர்த்தப் பாடல்களைக் கேட்கலாம், கதைகளை வாசிக்கலாம், ரசிக்கலாம், வாழலாம். 


மக்கள் தொடர்ந்து விரும்பியதாலேயே எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து இரட்டை அர்த்தப் பாடல்களை பாடுகிறார், சம்கிலா. எதிர்ப்புகள் அதிகரிக்கும் வாழ்வின் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் கடந்தவராகவும், இனி என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற நிலையை எப்படி வந்தடைகிறார் என்பதை இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு கலைஞனாக மாறிய தருணமது. அதனாலேயே இன்று வரை சம்கிலா பஞ்சாபில் கொண்டாடப்படுகிறார். தொடர்ந்து அவரைப் பற்றிய திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சம்கிலா மக்களின் கலைஞன்.


சம்கிலாவாக திலிஜித் தோஸாஞ்ச் அற்புதமாக பொருந்தியிருக்கிறார். இயல்பிலேயே அவர் ஒரு பாடகர் என்பதால் இன்னும் நெருக்கமாக உணர முடிகிறது. சம்கிலாவின் இணையர்,அமர்ஜ்யோத்தாக பரினீதி சோப்ரா நடித்திருக்கிறார். இந்தக் கதாப்பாத்திரத்தில் நாம் பரினீதி சோப்ராவைக் காண முடியாது, அமர்ஜ்யோத்தை மட்டுமே காண முடியும். அந்த அளவிற்கு அந்தக் கதாப்பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். 


ஒரு திரைப்படத்தைப் பார்த்து முடித்தவுடனயே அத்திரைப்படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றுவது அபூர்வம். இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்கும் போது அப்படி தோன்றியது. உடனேயே மீண்டும் ஒரு முறை பார்த்தேன். இப்படி பார்க்கும் முதல் திரைப்படமிது. மற்ற சில படங்கள் பார்க்கும் போது இப்படி தோன்றினாலும் உடனே பார்க்க வாய்ப்பு அமையவில்லை. இந்தத் திரைப்படத்திற்கு அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. அப்படி பார்க்க ஒரே காரணம், இசை - ஏ.ஆர்.ரஹ்மான் என்பது தான். 


தமிழ் ரசிகர்கள் இது ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றே உணர முடியாத அளவிற்கு மாயம் செய்திருக்கிறார். கொஞ்சம் கூட மேற்கத்திய சாயல் இல்லை. தமிழில் பொன்னியின் செல்வன், மாமன்னன் எல்லாம் மேற்கத்திய பாணி இசையால் இயல்பு மாறிய திரைப்படங்கள். தமிழில் அசலான நம் மண் வாசனை வீசும் ஒரே ஒரு திரைப்படம் கூட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இல்லை. இயக்குநர்கள் காரணமா என்றும் தெரியவில்லை. ரஹ்மான் இசைக்காக மட்டுமே கூட நாம் இத்திரைப்படத்தைக் காணலாம்.


சம்கிலா திரைப்படத்தில் பாடகர் சம்கிலாவின் பாடல்களை மறு உருவாக்கம் செய்ததாலோ என்னவோ மொழி புரியாவிட்டாலும் பாடல்களை ரசிக்க முடிகிறது. தனியாகவும் 3 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி இருக்கிறார். அதிலும் கடைசி பாட்டெல்லாம் (மைனே விதா கரோ... ) அற்புதம். 


அமர்சிங் சம்கிலா இவ்வாறு நடத்தப்பட்டதற்கும், கொல்லப்படத்தற்கும் அவர் ஒரு தலித் என்பதும் ஒரு காரணம். இன்று வரை அவரை யார் கொன்றது என்பது தெரியவில்லை.பல முறை மிரட்டிய ஆயுதம் ஏந்திய அடிப்படைவாதிகளா ? சக பாடக போட்டியார்களா ? அவரின் மனைவி, அமர்ஜ்யோத் உயர் சாதி என்பதால் நடத்தப்பட்ட ஆணவப்படுகொலையா? எதுவும் தெரியவில்லை. ஆனால் இன்று வரை பஞ்சாபில் சம்கிலாவின் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. மொழி புரியாவிட்டாலும் அசலான சம்கிலாவும் , அமர்ஜ்யோத்தும் சேர்ந்து பாடிய பாடல்களை கேட்டுப் பாருங்கள். நல்ல அனுபவம். தனித்துவமான குரல்கள். 'Music is the Universal Language ' என்று சொல்வது முற்றிலும் உண்மை.


இயக்குநர் இம்தியாஸ் அலி அவர்களின் அற்புதமான உருவாக்கம். இவரது திரைப்படத்தைப் பார்ப்பது இதுவே முதல் முறை. இவரின் மற்ற திரைப்படங்களையும் காண வேண்டும். கதையின் ஊடாக அடிப்படைவாதம் குறித்தான விமர்சன பார்வையும் முன்வைக்கப்படுகிறது. தமிழ் திரைப்படங்களில் இது அரிது. திரைக்கதையும், கதை சொல்லும் முறையும் அருமை. அங்கங்கே சின்ன சின்ன கார்ட்டூன் காட்சிகள், இரண்டு திரை காட்சிகள் , அசலான சம்கிலா குறித்தான பதிவுகள் என சுவாரசியம் கூட்டி இருக்கிறார். Excellent tribute to phenomenal artist through Art ❤️ 


இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


மேலும் படிக்க :


ஹர்காரா - மண்ணின் கதை !


DAREDEVIL MUSTHAFA - FANTASTIC MAKING !


சூப்பர் சிங்கர் 10 - விஜயகாந்த் ❤️ !


விஜய் தொலைக்காட்சி ஏற்கனவே விஜயகாந்த்-ஐ முன் வைத்து ஒரு 'நீயா? நானா?' நிகழ்ச்சியை நடத்தி அவருக்கு மரியாதை செய்தது. தற்போது சூப்பர் சிங்கர் 10-லும் ஒரு சுற்றை விஜயகாந்த் சுற்றாக ( என்றென்றும் கேப்டன் விஜயகாந்த்) அறிவித்து மிகவும் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது. வணிக நோக்கம் இருந்தாலும் இதையும் மற்றவர்கள் செய்ய தயாராக இல்லை என்பது தான் உண்மை.


விஜயகாந்த் எப்படி பொது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டாரோ அதே போல அவர் நடித்த பாடல்களும் தொடர்ந்து புறக்கணிப்பை சந்தித்து வந்திருக்கின்றன. விஜயகாந்த் நடித்த பாடல்களில் சிறப்பான பாடல்கள் இருந்தாலும் அவை அவ்வளவாக ஒளிபரப்பப்படவில்லை. கமல் , ரஜினி பாடல்களே தொடர்ந்து முன்நிறுத்தப்பட்டன; முன்நிறுத்தப்படுகின்றன. இப்போதும் பெரிய மாற்றமெல்லாம் இல்லை. இப்படியான சூழலில் விஜயகாந்த் பாடல்களை முன் வைத்து ஒரு நிகழ்ச்சி என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. 


நடிகை ராதா, இயக்குநர்கள் அரவிந்தராஜ் மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்குபெற்று விஜயகாந்த் உடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அவை உணர்ச்சிப்பூர்வமான தருணங்களாக அமைந்தன. தொகுப்பாளர் பிரியங்காவும் விஜயகாந்த் மீதான பிரமிப்பை வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். விஜய் தொலைக்காட்சியும் நிகழ்ச்சியின் ஊடாக அவரைப் பற்றிய காணொளி பதிவு, சூப்பர் சிங்கர் ஜுனியர்களை பாட வைத்தது, விஜயகாந்தின் உருவச் சிலையை சிறப்பு பரிசாக கொடுத்தது என தனது பங்களிப்பைச் செய்தது. 


ஏறக்குறைய பாடிய அனைவருமே சிறப்பாகவே பாடினார்கள். பலருக்கும் நல்ல குரல் வளம். விஜயகாந்த் நடித்த திரைப்படங்களிலிருந்து தனிப்பாடல்கள், ஜோடி பாடல்கள், குழு பாடல்கள் இடம்பெற்றன. நல்ல பாடல்கள் தேர்வு. அதிலும் 'என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச...' பாடலெல்லாம் இன்னமும் காதில் கேட்கிறது. இந்தப் பாடலில் இவ்வளவு ரசனையான வரிகள் இருப்பதும் இப்போதுதான் தெரிந்தது. 

சூப்பர் சிங்கர் ஜுனியர்கள் பாடிய பகுதியும் சிறப்பாக இருந்தது.


இந்நிகழ்ச்சியில் முக்கியமான அம்சம் என்பது பாடல்களுக்கு பின்னணியில் இசைக்கருவிகள் வாசித்தவர்கள்தான். சமீப காலங்களில் கேட்டத்தில் சிறப்பான இசை. பாடல்கள் சிறப்பாக அமைந்ததற்கு இவர்களும் ஒரு காரணம். இவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சியின் மற்ற பகுதிகளை பார்க்கும் ஆவல் உருவாகியிருக்கிறது. 


மொத்தத்தில் இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தியதற்கு விஜய் தொலைக்காட்சிக்கு அன்பும் நன்றியும் !


மாமனிதர் விஜயகாந்த் பற்றிய ஆவணப்படம் எடுக்கப்பட வேண்டும். அவருடன் பணியாற்றியவர்கள் இருக்கும் போதே அவரைப்பற்றிய தகவல்களை சேகரித்து ஒரு முழுமையான ஆவணப்படம் எடுக்கப்பட வேண்டும். எந்த ஒன்றையும் ஆவணப்படுத்துதல் என்பதில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். இனிமேலாவது ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை தமிழ் சமூகம் உணர வேண்டும்.


வாய்ப்புள்ளவர்கள் Disney+ HotStar -ல் இப்போதும் காணலாம். விஜயகாந்த் -ஐ பிடித்தவர்களுக்கு இந்நிகழ்ச்சியும் கண்டிப்பாக பிடிக்கும்.

மேலும் படிக்க :

மாமனிதர் - விஜயகாந்த் ❤️

மாமனிதர் - விஜயகாந்த் ❤️


சிகரெட் பிடித்தல், மதுக்குடித்தல் போன்ற தீய பழக்கங்கள் நமது பால்ய காலங்களிலேயே நமக்குப் பழக்கமானவையாக இருக்கின்றன. ஆனால் எனது பால்ய காலங்களில் என்னை, தீய பழக்கங்களிலிருந்து எனக்குத் தெரியாமலேயே காப்பாற்றிவர், விஜயகாந்த் தான். அதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது தான் உணர முடிகிறது. அப்போது தீவிரமான விஜயகாந்த் ரசிகன். விஜயகாந்த் தனது திரைப்படங்களில் மதுக்குடிப்பதையோ, சிகரெட் பிடிப்பதையோ நியாப்படுத்தியிருக்கமாட்டார். அதனால் தானோ என்னவோ அவரைப் பின்பற்றிய நாங்களும் அப்பழக்கங்களை கடைபிடிக்கவில்லை. விஜயகாந்திற்கு பதிலாக ரஜினி அல்லது கமல் ரசிகராக இருந்திருந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு தீயபழக்கத்தைப் பழகியிருப்போம். 


'காந்தி பிறந்த மண் ' என்ற திரைப்படத்திற்குப் பிறகு விஜயகாந்த் ரசிகராக இருக்கவில்லை. என்ன காரணம் என்றும் நினைவில்லை. அதன் பிறகு யாருடைய ரசிகராகவும் இல்லை. அதே சமயம் விஜயகாந்த் என்ற மனிதரின் மீதான மதிப்பு எப்போதும் குறைந்ததில்லை. அவரது கடைசி கால இஸ்லாமிய தீவிரவாத ஒழிப்பு திரைப்படங்களுக்கு முன்பு வரை அவர் தேர்ந்தெடுத்த நடித்த கதாப்பாத்திரங்கள் கண்ணியம் மிக்கவை. நிறைய திரைப்படங்களில் வெள்ளந்தியான பாத்திரங்களில் நடித்திருக்கிறார். 


விஜயகாந்த் எப்போதும் மக்களின் கலைஞன். ரஜினி, கமல் போன்றவர்கள் கவனமாக தவிர்த்த விளிம்பு நிலை மக்களின் கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடித்தவர். மக்களோடு ஒருவராகவே தன்னை அடையாளப்படுத்தியவர். நிஜ வாழ்விலும் அப்படித்தான் இருந்திருக்கிறார். அவர் பேசிய அரசியல் மேடைகளிலும் ஒலித்தது சாமானிய மக்களின் குரல்தான். இப்போது வேண்டுமானாலும் அவர் பேசியதை கேட்டுப் பாருங்கள் உண்மை புரியும். திரையில் செங்கொடியோடு தோன்றியவர் அவர் மட்டும்தான். மக்களில் ஒருவராக , மக்களின் தலைவனாக திரையில் தோன்றினார்.


எம்.ஜி.ஆர்.-ன் அரசியல் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டவை. ஆனால் அவரது திரைப்படங்களிலும், திரையிசைப் பாடல்களிலும் சமதர்ம , பொதுவுடைமை கருத்துகள் நிறைந்திருக்கும். அதே போல மதுக்குடிக்கும், சிகரெட் பிடிக்கும் காட்சிகளை தவிர்த்திருப்பார். தனது திரைப்படங்களிலும் இதே பாணியை விஜயகாந்த் கடைபிடித்தார். இன்று வரை நடித்த நடிகர்களில் அதிக காட்சிகளில் தமிழர்களின் ஆடையான வேட்டி சட்டையுடன் தோன்றியவர், விஜயகாந்த் மட்டுமே. தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா ! என்ற முழக்கத்தை முன்வைத்தவர்.


ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். ஈழத் தமிழர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்தவர். மற்ற உச்ச நடசத்திரங்கள் என்று சொல்லப்படும் எவரும் வெறும் குரல் கூட கொடுத்ததில்லை. ஈழத் தமிழர்கள் விடுதலை பெறும் வரை தனது பிறந்தநாளை கொண்டாட மாட்டேன் என்ற உறுதியோடு இருந்தார். அரசியல் கட்சி தொடங்கும் வரை அதை கடைபிடித்தார். யார் சமரசம் செய்தார்கள் என்று தெரியவில்லை, அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவரது பிறந்தநாள் ' வறுமை ஒழிப்புத் தினமாக ' கொண்டாடப்பட்டது. 


நாடகங்கள் ஆதிக்கம் செலுத்திய ஆரம்ப காலத்தில் பார்ப்பனர்களுக்கு தனியாகவும்,அவர்கள் சாப்பிட்ட பிறகே மற்றவர்களுக்கு தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. இதை முதன் முதலில் உடைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தனது நாடகங்களில் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக உணவு பரிமாறப்பட்டது. இதை தனது வாழ்நாளின் கடைசி வரை கடைபிடித்தார். அவரது குடும்ப விழாக்களில் கூட பிரபலமாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே உணவு பரிமாறப்பட்டது. அதே போல தன்னை தேடி வந்தவர்கள் அனைவருக்கும் உணவளித்தார். யார் என்றே தெரியாத முகமறியாதவர்களுக்கும் அதிகளவில் உதவிகள் செய்தார். இதை எம்.ஜி.ஆரும் பிறகு விஜயகாந்தும் கடைபிடித்தனர். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் அளவிற்கு உதவிகள் செய்தனரா என்று தெரியவில்லை. தமிழக சூழலில் இன்னமும் அதிகம் கொண்டாடப்பட வேண்டியவர், என்.எஸ்.கிருஷ்ணன்.


உணவு சார்ந்த விசயத்தில் விஜயகாந்த் செய்தவை அனைத்தும் தற்போது கொண்டாப்படுகின்றன. திரைப்பட படப்பிடிப்பில் அனைவருக்கும் சமமான உணவு என்பது மிகப்பெரிய விசயம். இன்றும் எத்தனை பேர் இதைக் கடைபிடிக்கின்றனர் என்று தெரியவில்லை. விஜயகாந்த் கல்யாண மண்டபம் போனால் வேண்டிய உணவு நிச்சயம் கிடைக்கும் என்பது திரைத்துறையில், விளிம்புநிலையில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. பலரின் பசி போக்கிய அப்படியான அன்ன சத்திரத்தை இடித்து தள்ளியது , அரசியல். உணவு விசயத்தில் மட்டுமல்ல திரைப்படத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் ஊதியம் முதற்கொண்டு எல்லாமும் சரியாக கிடைத்திருக்கிறதா என்பதையும் உறுதி செய்திருக்கிறார். இதனாலேயே இவருக்கு ' கேப்டன் ' என்ற பெயர் பொருத்தமாக இருக்கிறது.


தேமுதிக வின் கொள்கை என்பது ' மக்களுக்கு நல்லது செய்யனும்' என்பது மட்டும் தான். சூழ்ச்சிகளும், சுயநலமும், துரோகங்களும், பதவி வெறியும், ஆதிக்கத் திமிரும் நிறைந்திருந்த அரசியல் களத்தில் நீடித்திருக்க அது மட்டும் போதவில்லை. விஜயகாந்தைப் போலவே அவரது தொண்டர்களும் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்து தேர்தலில் களம் கண்டார்கள். விஜயகாந்தைப் போலவே அவரது தொண்டர்களுக்கும் பொருளாதார அளவில் இழப்பு தான். பலர் வேறு கட்சிகளுக்கு தாவி விட்டனர். இப்போது தேமுதிக திக்கற்ற நிலையில் நிற்கிறது. ஆதாயத்திற்காக வெகுமக்களுக்கு எதிரான பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. தேமுதிகவைத் தாங்கியது விஜயகாந்த் என்ற ஒற்றைப் பெயர் தான். தற்போது தேமுதிக, கேப்டன் இல்லாத கப்பல். 


அஞ்சா நெஞ்சனாக , நியாயத்திற்கு குரல் கொடுப்பவராக, மனம் முழுவதும் அன்பு நிறைந்தவராக இருந்தவரின் கடைசி காலங்கள் மிகுந்த துயர் மிகுந்ததாக மாறிப்போனது. மீளாத் துயரிலிருந்து அந்த உடல் விடுதலை பெற்றுவிட்டது. அவரது மனம் இங்கேயேதான் இருக்கும். வெறும் வார்த்தைக்காக இல்லை. விஜயகாந்த் செய்த செயல்கள் நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கும். அவர் செய்த செயல்களில் வெறும் ஒரு சதவீத்தை செய்யக்கூட நாம் தயாராக இல்லை என்பது தான் கள யதார்த்தம். 


திரையில் மக்களுக்காக குரல் கொடுத்த நடிகன் !


நிஜத்தில் மக்களுக்காக குரல் கொடுத்த அரசியல்வாதி !


மக்களுக்காகவே வாழ்ந்த மக்களின் தலைவன் !


Swathi Mutthina male haniye ❤️


கன்னட தேசத்திலிருந்து மற்றுமொரு கவிதை இத்திரைப்படம். கன்னடத் திரைப்படங்களின் தரம் கூடிக்கொண்டே போகிறது. கதை, வசனம், ஒளிப்பதிவு , இசை என அனைத்தும் நமக்கு நல்லதோரு அனுபவத்தைக் கொடுக்கிறது. 


திரைப்படத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருப்பவர் கதாநாயகி Siri Ravikumar தான். மிகையில்லாத நடிப்பு. அடுத்து கதாநாயகனாக நடித்திருக்கும் இயக்குநர் ராஜ்.பி‌.செட்டி கவனத்தை ஈர்க்கிறார். அனைத்து கதாப்பாத்திரங்களும் காரணத்துடன் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒரு காட்சியில் வந்தாலும் அழுத்தமான ஒரு விசயத்தைச் சொல்லிச் செல்கிறார்கள். 


ஆர்ப்பாட்டமில்லாத திரைப்படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.


Feel Good Movie


இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


Veyilmarangal ( Trees under the Sun ) !


விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளை, அவர்கள் சந்திக்கும் அரசியலை அழகியலுடன் முன்வைக்கும் திரைப்படம். கதையின் ஊடாக இயற்கையை அவ்வளவு நெருக்கமாக காட்சிப்படுத்தி இருக்கிறார், இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன். இயற்கையை அவதானிக்கும் எவருக்கும் பிஜுகுமார் அவர்களின் திரைப்படங்கள் நிச்சயம் பிடிக்கும். 


எளிய மக்கள் அரசாங்காத்தாலும் துரத்தப்படுகின்றனர். ஆதார் கார்டு இல்லையென்பதால் நிவாரணமும் கிடைக்காது என்கின்றனர். ( இன்றைய சென்னை வெள்ளத்திலும் இது தான் நிலைமை. ரேசன் கார்டு இல்லையென்றால் நிவாரணம் கிடைக்காதாம் ).சொற்ப கூலி கொடுக்கும் நிலப்பிரபுவால் துரத்தப்படுகின்றனர். அப்போது இந்திரன்ஸ் பேசும் வசனம் " நீங்கள் எங்களைத் துரத்துவதால் ஒன்றும் செத்துப் போகமாட்டோம். எங்களின் உடலில் ஆரோக்கியம் உள்ளவரை இந்தப் பூமியில் வாழ்வோம்❤️ ".


இந்த பூமியில் மனித இனம் தொடர்ந்து இயங்க அதிக உடலுழைப்பைக் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்கள்தான். இந்திய அளவில் அவர்கள் சாதியின் பெயராலும் கொடுமைகளை அனுபவிக்கின்றனர். 


மனித இனம் இந்தப் பூமிக்குச் செய்து வரும் அயோக்கியத்தனங்களால் உருவாகி இருக்கும் காலநிலைமாற்ற விளைவுகளால் தங்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்படுபவர்களாக விளிம்புநிலை மக்களே உள்ளனர். இதையும் இயக்குநர் காட்சிப்படுத்தி இருக்கிறார்.


ஆர்ப்பாட்டமில்லாத , அமைதியான மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பு 👍


மேலும் படிக்க :

ADRISHYA JALAKANGAL !

 JANA GANA MANA - பாசிச எதிர்ப்பு சினிமா !

கூழாங்கல் ❤️


நடையின் ஊடாக வெக்கையான நிலப்பரப்பையும் , அங்கு வாழும் அசலான மனிதர்களையும் , அவர்களின் வாழ்வியலையும் முன்வைக்கும் ஒரு மண் மணக்கும் படைப்பு. திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்பதை உணர்ந்து நிறைய விசயங்களை அழகிய திரைமொழியுடன் குறிப்பால் உணர்த்துவது சிறப்பு. தமிழ்த் திரைப்படங்கள் தொடர்ந்து தவறவிடும் விசயமிது. 


எந்தப் படைப்பாக இருந்தாலும் பார்வையாளர்களும் அதில் பங்கெடுத்து ஒரு உரையாடலை அந்தப் படைப்புடன் நிகழ்த்த வேண்டும்.  இந்தத் திரைப்படத்தில் பார்வையாளர்கள் தாங்களே யூகித்துக் கொள்ளும் வகையில் பல காட்சிகள் அமைந்திருக்கின்றன. காட்சி ஊடகமான திரைப்படத்தில் எல்லாவற்றையும் நீட்டித்து விளாவாரியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்,  குறிப்பாக வன்முறையை நீட்டித்து காட்டுவதே தங்களின் கடமை என இருக்கும் இயக்குநர்கள் இதை உணர வேண்டும்.


ஒளிப்பதிவும், பின்னணி இசையும் திரைப்படத்தை மேலும் நெருக்கமாக உணர வைக்கின்றன. அவை  எந்த இடத்திலும் திரைப்படத்தை இடையூறு செய்யவில்லை. சண்டையின் போது பேசப்படும் கெட்ட வார்த்தைகள் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதுவும் திரைப்படத்திற்கு கூடுதல் யதார்த்த தன்மையைக் கொடுத்திருக்கிறது. 


குழந்தைதன்மையுடன்  குழந்தையை திரையில் பார்ப்பது அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. 

கருப்பு வெள்ளை காலத்திற்கு பிறகு தமிழ்த் திரைப்படங்கள் குழந்தைகளை குழந்தைகளாக காட்டாமல் பெரியவர்கள் போலவே காட்டி வருகின்றன. நிறைய படங்களில் குழந்தைகளைக் காட்டுவதேயில்லை , அப்படியே காட்டினாலும் நகைச்சுவை காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இப்படியான சூழலில் இந்த 'கூழாங்கல்' திரைப்படத்தில் முக்கியப் கதாப்பாத்திரமாக ஒரு சிறுவனை குழந்தைத்தன்மை சிதையாமல் காட்சிப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டிற்குரியது.


மொத்தத்தில் நம்மையும் அந்த வெக்கையான நிலப்பரப்பில் நடக்க வைத்த இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉.


1.15 மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய சிறிய திரைப்படம் தான் . வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாக பாருங்கள். 


மேலும் படிக்க:


ஹர்காரா - மண்ணின் கதை !


அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !






ஹர்காரா - மண்ணின் கதை !


நாட்டார் தெய்வங்கள் குறித்தான குறிப்புடன் தொடங்கும் போதே திரைப்படம் நம்மை ஈர்க்கத் துவங்கி விடுகிறது. நாட்டார் தெய்வங்கள் எப்படி மக்களின் வாழ்வியலிலிருந்து தோன்றியிருக்கின்றன என்பதை இத்திரைப்படம் முன்வைக்கிறது. பெரும்பாலும் நாம் நமது முன்னோர்களையும் இயற்கையின் ஏதோ ஒரு வடிவத்தையுமே குலதெய்வங்களாக வணங்குகிறோம். அவையே நாட்டார் தெய்வங்கள்.


" நாட்டார் தெய்வங்கள் எவையும் 'முன்னே வந்து' வரம் தரும் தெய்வங்கள் அல்ல; 'பின்னே நின்று' பாதுகாப்புத் தரக்கூடியன. அவை அழிக்கும் ஆற்றல் அற்றவை. மாறாக வயல் களத்திலும், அறுவடைக் காலத்திலும், கண்மாய்க் கரையிலும், ஊர் மந்தையிலும், ஊர் எல்லையிலும் தூங்காமல் நின்று காவல் காக்கக்கூடியன. " என்று கூறுகிறார் ,தொ.பரமசிவன் . நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் காவல் தெய்வங்களாக இருப்பதை நாம் உணர முடியும். ஒரு மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாக 'மாதேஸ்வரன்' மாறிய கதை தான் 'ஹர்காரா'.


 நமது நாட்டார் தெய்வங்கள் கற்பனைக் கதைகளான இதிகாசங்களிலிருந்து தோன்றவில்லை. நிறுவனமயப்படுத்தப்பட்ட நடைமுறையோ, வழிபாடோ , பேதங்களோ, படையலோ நாட்டார் தெய்வங்களுக்கு இல்லை. அவை மக்களின் வாழ்வுடன் கலந்தவை. பெரிய பெரிய கோயில்களில் பல கால பூசைகளுடன் பெருந்தெய்வங்கள் இருந்தாலும் அவை எதுவும் நாட்டார் தெய்வங்களுக்கு ஈடாகாது. அவை மக்களின் வாழ்விலிருந்து விலகி நிற்பவை. 


காளி வெங்கட் மலையேறும் காட்சியின் போது வரும் இடைவேளை வரை சரியாக செல்லும் திரைக்கதையில் பின்பு விறுவிறுப்பு குறைந்து விடுகிறது. இறுதிகட்ட காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் கூட்டியிருந்தால் இன்னும் நெருக்கமான படைப்பாக இத்திரைப்படம் அமைந்திருக்கும். மற்றபடி நல்லதொரு அனுபவம். இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉 ❤️.


தமிழில் வன்முறை வெறியாட்டத் திரைப்படங்கள் தொடந்து வெளிவரும் சூழலில் ' ஹர்காரா ' போன்ற மக்களின் வாழ்வியலைப் பேசும் அர்த்தமுள்ள திரைப்படங்களும் வெளிவருவது நம்பிக்கையளிக்கிறது. இவ்வாறு மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும். 


ஆகவே மக்களே ! வன்முறை வெறியாட்டத் திரைப்படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவதில் கொஞ்சத்தையாவது நம் வாழ்வைச் சொல்லும் 'ஹர்காரா' போன்ற திரைப்படங்களுக்குக் கொடுக்க வேண்டும். 


மேலும் படிக்க:


அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !


நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !


ஜெய்பீம் -அறத்தின் குரல் ! 


Sunday, September 1, 2024

பெரியார் ஒருவரே !



பெரியாரின் கொள்கைகளை பெரியாரைத் தவிர வேறு எவராலும் கடைபிடிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். பெரியார், தான் பேர் வாங்க வேண்டும் என்பதற்காக எந்தக் கொள்கையையும் முன்நிறுத்தவில்லை. மக்களுக்கு நல்லதென்றால் எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதரிப்பார், மக்களுக்கு தீங்கு என்றால் எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார், அவ்வளவுதான் பெரியார். எந்த வட்டத்திற்குள்ளும் பெரியாரை அடக்கிவிட முடியாது. 


மக்களின் நலன்களையும் , மக்களுக்கான விடுதைலையையும், சமத்துவத்தையும், அனைவருக்குமான சுதந்திர வாழ்க்கையையும் உறுதி செய்ய தொடர்ந்து குரல் கொடுத்தார். அனைத்துவிதமான ஆதிக்கங்களையும் எதிர்த்தார். மக்களின் நலன்கள் மட்டுமே முன்நிறுத்தப்பட்டதால்தான் பெரியாரின் கொள்கைகள் இன்றும் பேசப்படுகின்றன. 


இவ்வளவு காலம் பெரியாரின் கொள்கைகள் பேசப்படுவதை பெரியாரே விரும்பியிருக்கவில்லை. பெரியாரின் கொள்கைகளின் தொடர்ச்சியாக வேறு புதிய கொள்கைகள் இந்நேரம் உருவாகியிருக்க வேண்டும். அத்தகைய ஆக்கப்பூர்வமான மாற்றம் இங்கே நிகழவில்லை. அந்த அளவிற்கு நாம் பின்தங்கி இருக்கிறோம். தான் கண்ட அனைத்தையும் அறிவியலின் கண் கொண்டு பார்த்தவர்தான், பெரியார். அறிவிற்கு பொருந்தாத எதையும் அவர் நம்பவில்லை; ஏற்கவில்லை. நாயகத்துதிபாடல், நாயகத்துதிபாடல் உருவாக்கும் கும்பல் மனப்பான்மை இவற்றை கடுமையாக வெறுத்தார். ஆனால் இன்று அவரை வைத்து நாயகத்துதிபாடலும், கும்பல் மனப்பான்மையும் செய்யப்படுவது பெரியாருக்கு நாம் செய்யும் துரோகம். 


எதிர்தரப்பையும் தன்பக்கம் ஈர்க்கும் வல்லமை பெரியாருக்கும் இருந்தது, அறிஞர் அண்ணாவிற்கும் இருந்தது. கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் எதிர்தரப்பின் நியாயங்களை ஏற்றுக்கொண்டார்கள். முக்கியமாக தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொண்டார்கள். இந்தப் போக்கு பின்பு மாறிவிட்டது. தமிழகத்தில் நாயகத்துதிபாடல் மனநிலையை வளர்த்துவிட்டதில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. இன்று, தமிழகத்தில் எல்லா கட்சிகளும், எல்லா அமைப்புகளும் நாயகத்துதிபாடலில் சிக்கி லயித்துக் கொண்டிருக்கின்றன. நாயகத்துதிபாடல் முன்நிறுத்தப்படும் எந்த இடத்திலும் ஆக்கப்பூர்வமான மாற்றம் நிகழாது. 


" யார் சொல்லியிருந்தாலும், 

எங்கு படித்திருந்தாலும், 

நானே சொன்னாலும், 

உனது புத்திக்கும், 

பொது அறிவிற்கும்,

பொருந்தாத எதையும் நம்பாதே ! " 

-  பெரியார் ❤


மேலும் படிக்க :

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !


Limelight (1952) !


சாப்ளின் என்ற மாமேதையின் இதுவரை பார்த்திராத திரைபடங்களுள் இதுவும் ஒன்று. நேற்று தான் பார்க்க வாய்ப்பு அமைந்தது. இவரது மற்ற திரைப்படங்களைப் போல இத்திரைப்படத்திலும் மனிதமே மேலோங்கி இருக்கிறது. சாப்ளினின் நடிப்பை மட்டுமல்ல அவரது திரைப்பட உருவாக்கத்தையும் யாராலும் பிரதியெடுக்க முடியாது. 


இவரது திரைப்படங்களை போட்டுக் காட்டி படத்தின் இயக்குநரும் இவர் தான், இசையமைப்பாளரும் இவர் தான், தயாரிப்பாளரும் இவர் தான் என்று சொன்னால் பல பேர் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு திரையில் தன்னை மட்டுப்படுத்தியே சித்தரித்து இருப்பார். இதுவும் ஒருவித யுக்தி தான் என்றாலும் திரையில் அப்படி தங்களைச் சித்தரிக்க விரும்ப மாட்டார்கள். திரையில் நடிகர் சாப்ளினை மட்டுமே நம்மால் காண முடியும், இயக்குநர் சாப்ளினோ, தயாரிப்பாளர் சாப்ளினோ தென்படமாட்டார். 


இயக்குநர் சாப்ளின் ஒரு Perfectionist. ஒவ்வொரு காட்சியும் கண்ணாடி போல அவ்வளவு திருத்தமாக இருக்கும். சாப்ளினால் சிரிக்க வைக்க மட்டுமல்ல அழ வைக்கவும் முடியும். தனது திரைப்படங்களில் பல இடங்களில் தற்கொலைக்கு எதிரான காட்சிகளைச் சேர்த்திருப்பார். தற்கொலையில் ஈடுபட முயற்சிப்பவர்களை தேற்றி இந்த வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்பவராக நடித்திருக்கிறார். 'சிட்டி லைட்ஸ் ' திரைப்படத்தில் தற்கொலைக்கு முயற்சிப்பவரிடம் ' Tomorrow also birds will sing ( நாளையும் பறவைகள் பாடும் ) ' என்று சொல்வார். எதை இழந்த பின்பும் வாழ்க்கை மிச்சம் இருக்கிறது ,எவ்வளவு பெரிய இழப்பையும் கடந்துவிட முடியும் என்ற நம்பிக்கையே உயிர்களைக் காப்பாற்றும். அதே போல Limelight - லிலும் ஒரு கதாப்பாத்திரத்தை தற்கொலையிலிருந்து காப்பாற்றி, நம்பிக்கையளித்து வாழ்க்கையை வாழ வைக்கிறார். தத்துவார்த்த ரீதியான பல வசனங்கள் இடம்பெற்றுள்ளன. எவ்வளவு புகழை அடைந்தாலும் Limelight தொடர்ந்து யார் மீதும் விழாது என்பதே Limelight. 


எக்காலத்திற்குமான கலைஞன் ❤️ !


மேலும் படிக்க :

எக்காலத்திற்குமான கலைஞன் !


K.A.தங்கவேலு - நகைச்சுவைச் சக்கரவர்த்தி !

மார்க் ஆண்டனி 🔥


திரைப்படம் ஆரம்பம் முதல் முடிவு வரை படுவேகமாக போவதால் நிறை குறை பற்றி யோசிக்கக் கூட நமக்கு நேரமில்லை. இடைவேளைக்கு கொஞ்ச நேரம் முன்பு" என்னங்க இன்னும் இடைவேளை விடலை. படம் பெரிய படமா?" என்று இணையர் கேட்டார். "படம் பெரியது அல்ல.‌ அந்த அளவிற்கு வேகமாக காட்சிகள் நகர்வதால் நமக்கு அப்படி தெரிகிறது " என்று பதிலளிக்க வேண்டியிருந்தது. இடைவேளையின் போது எங்களுக்கு முன்வரிசையில் இருந்த இளைஞர் தன் நண்பரிடம் " என்ன மாப்ள இப்பவே முழுப் படம் பார்த்த மாதிரி இருக்குது " என்றார். "எல்லோரும் நம்மைப் போலவேதான் உணர்ந்திருப்பார்கள் போல" என்று நினைத்துக் கொண்டே பாப்கார்ன் வாங்க நடக்க ஆரம்பித்தோம்.


ஒரு சிக்கலான கதையை சிக்கலில்லாமல் சொல்லி இருக்கிறார்கள். தமிழில் எப்படி இது சாத்தியம் என்று தேடும் போது தான் தெரிந்தது, திரைக்கதையை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் சேர்த்து அர்ஜுன் மற்றும் சவரிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து எழுதியிருக்கின்றனர் என்று. எவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும், தேர்ந்த நடிகர்கள் நடித்திருந்தாலும் திரைக்கதை சிறப்பாக அமையாவிட்டால் நல்ல அனுபவம் கிடைக்காது. உலகத் திரைப்படங்களிலும் இந்திய அளவில் கேரளத் திரைப்படங்களிலும் திரைக்கதையை இரண்டு மூன்று பேர் சேர்ந்து எழுதும் போக்கு இருக்கிறது.‌இப்போது தமிழிலும் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழ்த் திரையுலகின் இயக்குநர்களே நீங்கள் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் திரைக்கதையை இரண்டு மூன்று பேர்களோடு சேர்ந்து எழுதுங்கள். அப்போதுதான் நாங்கள் தப்பிக்க முடியும். 


திரைப்படம் முழுக்கவே டைமிங் வசனங்கள் அனல் பறக்கின்றன. நிறைய விசயங்களையும், நிறைய திரைப்படங்களையும் Troll செய்திருக்கிறார்கள். அதனால் திரைப்படம் முழுக்கவே கலகலப்பு நிறைந்திருக்கிறது. அடுத்ததாக நம்மை படத்துடன் ஒன்ற வைப்பது பின்னணி இசை. யாருடா இது ? இவ்வளவு சிறப்பா பின்னணி இசையமைத்திருப்பது என்று தேடிப் பாரத்தால் ஜி.வி.பிரகாஷ்குமார். நடிப்பதை விட இவர் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நாம் வெற்று இரைச்சலிலிருந்து தப்பிக்க முடியும். பின்னணி இசை படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவுகிறது. தேர்ந்தெடுத்த பழைய மூன்று பாடல்களும் ( பஞ்சு மிட்டாய் சேலை கட்டி..., அடியே மனம் நில்லுனா நிக்காதடி..., வருது வருது விலகு விலகு ஒரு வேங்கை வெளியே வருது...) நன்றாக பொருந்துகின்றன. மூன்று பாடல்களிலும் பெண் குரல், எஸ்.ஜானகி❤️. கடந்த ஒரு வாரமாக இந்த மூன்று பாடல்களும் தமிழகமெங்கும் தேடியெடுத்து கேட்கப்படுகின்றன. கடைசியாக தமிழில் சிறந்த பின்னணி இசையாக நினைவில் இருப்பது 'அசுரன்' . அந்தத் திரைப்படத்திற்கும் இசை ஜி.வி.பி.தான்.


ஜெயிலர் திரைப்படம் போல இந்தத் திரைப்படத்திலும் வன்முறை இருக்கிறது. ஆனால் எந்த இடத்திலும் உறுத்தவில்லை. ஜெயிலர் திரைப்படமெல்லாம் குழந்தைகளுடன் பார்க்கத் தகுதியே இல்லாதது. குரூர மனம் படைத்தவர்களால்தான் இவ்வாறு வன்முறையை(ஜெயிலர்) திரையில் காண்பிக்க முடியும். மாவீரன், ஜெயிலர், மார்க் ஆண்டனி என மூன்று படங்களை தொடர்ந்து திரையரங்கில் பார்த்தோம். இதில் ஜெயிலர் தான் குப்பை(வன்முறை அதிகம், திரைக்கதை சொதப்பல்,லாஜிக் மீறல்கள் அதிகம்). வன்முறையை நியாப்படுத்துவதை தமிழ் சினிமா கைவிட வேண்டும். வன்முறையைத் திரையில் காண்பிக்கும் போது பொறுப்புணர்வு வேண்டும். 


'ஆண்டனி'யாக இருந்தாலும் அவரின் உடலிலும் கருப்பணசாமி இறங்கும் அதாம்லே தமிழ்நாடு. நாட்டார் தெய்வங்கள் பேதங்களுக்கு அப்பாற்பட்டவை. பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் காவல் தெய்வங்களாகவே இருக்கின்றன. 80's ,90's kids களை மட்டுமல்ல 2k kids களையும் திராவிட பேரழகியான சில்க் ஸ்மிதா ஈர்த்திருக்கிறார் என்பதை திரையரங்கில் காண முடிந்தது.


ஆண்டனி விஷாலின் தோற்றம் துல்கர் சல்மானையே நினைவுபடுத்தியது. ஒரு காட்சியில் கூட விஷாலாக தோன்றவில்லை. அப்புறம் எஸ்.ஜே.சூரியா ரசிகர்களின் Pulse அறிந்து அட்டகாசப்படுத்தியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் லாஜிக்,கருத்து, கத்திரிக்காய் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. இது ஒரு Fantasy திரைப்படம் அவ்வளவு தான். இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉

மேலும் படிக்க :

கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

ஜெய்பீம் -அறத்தின் குரல் !


போர்களை நிறுத்துங்கள் !


19ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை போரின் வதைகளையும், வாதைகளையும், வலிகளையும் அதிகமாக அனுபவித்த இனம் யூத இனம். இன்று அதே யூத இனம் அடுத்த இனத்தை வதைக்கிறது. ஆதிக்க உணர்வு தான் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறது. யாராக இருந்தாலும் அதிகாரம் கைகளுக்கு வந்தவுடன் ஆதிக்க உணர்வு தோளில் ஏறி அமர்ந்து கொள்கிறது. இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் நிற்க வேண்டுமானால் நாம் பாலஸ்தீன மக்களின் பக்கமே நிற்க வேண்டும். 


எந்தவிதமான ஆதிக்கமாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்களும் , குழந்தைகளும் தான். நாம் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துவிட்டதாக சொல்லிக்கொள்ளும் இன்றைய சூழலிலும் உலகின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போர்கள் நடந்து வருவது மனித இனத்திற்கே அவமானம் . அன்றைய போர்களில் போரிற்கு தொடர்பில்லாத எளிய மக்கள் அவ்வளவாக பாதிக்கப்படவில்லை. ஆனால் இன்றைய போர்களில் எளிய மக்களே அதிகமும் கொல்லப்படுகின்றனர். 


எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் எந்த நேரத்தில் எங்கே குண்டு விழும் என்று தெரியாத அந்தப் போர்ச் சூழலை நினைக்கும் போதே அச்சமாகவும், பதைபதைப்பாகவும் இருக்கிறது. இரு தரப்பிலும் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐநா சபைக்கென்று கொஞ்சமாவது அதிகாரமும் மரியாதையும் இருந்தன. தற்போது எல்லாம் நீர்த்து போய் முதலாளித்துவத்தின் கண்துடைப்பு அமைப்பாக மாறிவிட்டது. அதே போல முன்பு உலகில் எங்கு போர் தொடங்கினாலும் முதல் குரலாக ஒலிப்பது அமைதி உடன்படிக்கைக்கு இரு தரப்பும் முன் வர வேண்டும் என்பது தான்‌. அதற்கு சம்மதிக்க மறுத்து போரைத் தொடரும் நாடுகள் மீது உடனடியாக பொருளாதார தடை விதிக்கப்படும். இப்போதெல்லாம் இப்படியான எந்தக் குரலும் ஒலிப்பதில்லை. அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்தும் யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை.


போர்க் குற்றம் புரியும் நாடுகளை வெளிப்படையாக ஆதரிக்கும் குரல்கள் மட்டுமே தற்போது கேட்கின்றன. மனித உயிர்களுக்கு எந்தவிதமான மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. இது தான் கூட்டுக்களவாணி முதலாளித்துவம். தற்போதைய சூழலில் உலகெங்கிலும் வலதுசாரிகளின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது . இது பூமிக்கும் மனித இனத்திற்கும் நல்லதல்ல. "எல்லோருக்கும் எல்லாம் " என்பதை எப்போதும் வலதுசாரிகள் ஏற்கமாட்டார்கள். வன்முறை யார் மீதும் எப்போது வேண்டுமானாலும் எந்த வடிவத்திலும், எந்தப் பெயரிலும் நிகழ்த்தப்படலாம் என்பதே கள நிலவரமாக உள்ளது. "அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி" என்கிறார் சாமுவேல் ஜான்சன். தேசபக்தி என்ற பெயரில் தான் நாடுகள் மற்ற நாட்டு மக்கள் மீது வன்முறையை ஏவி விடுகின்றன. எதற்கெடுத்தாலும் தேசபக்தியைத் தூக்கிப் பிடிப்பவர்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.எல்லாவற்றையும் விட மனிதமே பெரியது.அனைத்திலும் மனிதமே முன்நிறுத்தப்பட வேண்டும். 


தற்போதைக்கு உடனடியாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரும் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரும் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும். ஆதிக்க உணர்வு தான் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறது. மனிதர்களுக்கு ஆதிக்க உணர்வு மட்டும் இல்லையென்றால் பூமியெங்கும் அமைதி மட்டுமே நிலவும். உலகெங்கும் போர்ச்சூழலிருக்கும் மக்கள் விடுவிக்கப்பட்டு அமைதியாக வாழ வழிவகை செய்யப்பட வேண்டும். பூமியில் மனிதர்கள் சமநிலையை உருவாக்கத் தவறினால் இயற்கை தனது பாணியில் சமநிலையை நிச்சயம் உருவாகும்

மேலும் படிக்க :

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

வடகிழக்கு மாநிலங்களை காப்போம் !


தெற்கத்திக் கள்ளன் !


1988-ல் வெளிவந்த திரைப்படமாக இருந்தாலும் பிற்போக்கு கருத்துகளுடன் முற்போக்கு கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. விஜயகாந்திற்கு வெள்ளந்தியான கிராமத்து நாயகன் பாத்திரம். நவநாகரீக, திருமணத்தை வெறுக்கும் , ஆடம்பரத்தை விரும்பும் நகரத்து பணக்காரப்பெண் கதாப்பாத்திரம், ராதிகாவிற்கு. இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.இந்த இருவருக்காவும் மட்டுமே இத்திரைப்படத்தைக் காணலாம். விஜயகாந்த் தனது மிகையில்லாத நடிப்பால் அதிகமும் கவருகிறார்.


கள்ளன் என்ற பெயர்க்காரணம் விளக்கப்படும் இடம் சுவாரசியம். அதே போல கள்ளன் என கையெழுத்து போடும் இடமும். அங்கங்கே வரும் டைமிங் நகைச்சுவை வசனங்கள் அருமை. தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் வேட்டி சட்டையுடன் நடித்தவர் , விஜயகாந்தாகத்தான் இருக்கும். மலேசியா வாசுதேவன் வில்லனாக நடித்திருக்கிறார். மைனர், பண்ணையார் போன்ற வேடங்களில்தான் மலேசியா வாசுதேவன் அதிகமும் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் பாடிய' தில்லா டாங்கு டாங்கு...' என்ற பாடலும் இடம்பெற்றிருக்கிறது. 


நிறைய நடிகர்கள் இருந்தும் அவர்கள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பது குறையாக இருக்கிறது. 


YouTube - ல் காணக் கிடைக்கிறது.  


மேலும் படிக்க  :

மனிதரில் இத்தனை நிறங்களா !

அவள் அப்படித்தான்! 

உதிரிப்பூக்கள் !


Daredevil Musthafa - Fantastic Making !


மக்களிடையே மதவாதிகளால் தொடர்ந்து சிறுபான்மையின வெறுப்பை விதைத்துக் கொண்டிருக்கும் கன்னட மண்ணிலிருந்து ஒரு அற்புதமான திரைப்படம். இஸ்லாமியர்கள் குறித்தான பொதுப்பார்வைக்கு முஸ்தபா எனும் கதாபாத்திரத்தின் மூலமாக பதிலளித்து இருக்கிறார்கள். ரொம்பவெல்லாம் அவர்கள் மெனக்கெடவில்லை.தங்களின் மேதைமையை மறந்து மிக எளிய மக்களின் மனநிலையை திரையில் கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆனால் அது தான் கடினமும் கூட.‌ 


சின்ன சின்ன விசயங்கள் கூட அழகாக கவனப்படுத்தப்பட்டுள்ளன. பார்ப்பன மனநிலையும் விவரிக்கப்பட்டிருக்கிறது. ஏன் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டைத் தேர்ந்தெடுக்கிறார்கள். என்பதற்கான மிகப் பொருத்தான விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் ஒருவரை ஒருவர் தொட்டு விளையாட வேண்டிய அவசியம் இல்லை. எப்படியான மனநிலை பாருங்கள். 


ஒவ்வொரு விசயத்தையும் வெற்றுக்கூச்சல்கள் இல்லாமல் இயல்பாக சொல்லியிருப்பதுதான் இத்திரைப்படத்தின் பலம். இடையிடையே வரும் அனிமேஷன் காட்சிகள் அழகு. படத்தின் நிளத்தை குறைக்க உதவுகின்றன. இசையும் திரைப்படத்திற்கு இடையூறு இல்லாமல் பொருத்தமாக அமைந்திருக்கிறது. நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.


Poornachandra Tejaswi என்கிற கன்னட எழுத்தாளிரின் சிறுகதையையே திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள். சிறுகதையின் தலைப்பான ' Daredevil Musthafa' என்பதையே திரைப்படத்திற்கும் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். Poornachandra Tejaswi -ன் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்து இருக்கிறார்கள். 


Shashank Soghal இயக்கியிருக்கும் முதல் திரைப்படமிது. தனது பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். எந்தத் திரைப்படமானாலும் திரைக்கதை முக்கியம். இயக்குநருடன் சேர்ந்து நான்கு பேர் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். அதனாலேயே மனதிற்கு நெருக்கமான படைப்பாக மாறியிருக்கிறது. ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற இவர்களது எண்ணம் நிறைவேறியிருக்கிறது. கூட்டுழைப்பின் வெற்றி. 


தேர்ந்த படைப்பைக் கொடுத்ததற்கு படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தத் திரைப்படத்திற்கு தற்போதைய காங்கிரஸ் அரசு முழுமையான வரிவிலக்கு அளித்திருக்கிறது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்படைப்பு இருக்கிறது. கன்னட மொழியில் ஆங்கிய சப்டைட்டிலுடன் காணலாம். நிறைய பேர் நல்ல திரைப்படமாக இருந்தாலும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டால்தான் பார்க்கிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும். எந்த மொழியில் இருந்தாலும் பார்த்துப் பழகும் மனநிலைக்கு நாம் வர வேண்டும். எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம். FeelGoodMovie ❤️


Aeysha, Sulaikha Manzil  இப்போது Daredevil Musthafa என தொடர்ந்து மூன்று வாரங்களாக இஸ்லாமிய வாழ்வை முன்வைக்கும் திரைப்படங்களையே பார்த்தாச்சு. 

மேலும் படிக்க :

FANDRY - மனதிற்கு நெருக்கமான படைப்பு !

ADRISHYA JALAKANGAL !

Modern Love Chennai !


தமிழ் சினிமாவையும் காதலையும் பிரிக்கவே முடியாது. இன்று வரை மிகவும் அரிதாகவே காதல் இயல்பான ஒன்று என்று முன்வைத்த திரைப்படங்கள் வந்திருக்கின்றன. வெற்றுக் கூச்சல்களும் , மிகைப்படுத்தல்களும், Stalking-களும், நாயக துதிபாடல்களுமே இங்கு காதல் திரைப்படங்களில் முன்வைக்கப்பட்டன. இப்படியான சூழலில் இயல்பான காதல்களை வெளிப்படுத்தும் Anthology யாக 

வெளிவந்திருக்கும் ' Modern Love Chennai ' முக்கியத்துவம் பெறுகிறது. 


இந்த Anthology-ல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்றாலும் நிறைய பழைய  கிளிஷேக்கள் கிழித்து எறியப்பட்டிருக்கின்றன. இந்தத் தொடரின் வெற்றி என்பது கூட்டுழைப்பின் வெற்றி. ஒவ்வொரு பகுதிக்கும் திரைக்கதை தயார் செய்த பிறகு இயக்குநர்களை தேர்ந்தெடுத்திருப்பார்கள் போல. இசை, ஒளிப்பதிவு, வசனங்கள், கதைகள் நடைபெறும் இடங்கள் என அனைத்தும் சிறப்பு.மொத்தத்தில் நல்லதொரு உருவாக்கம். தியாகராஜன் குமாரராஜா குழுவினருக்கு வாழ்த்துகள்.


இந்த Anthology முழுக்கவே  பெண் கதாப்பாத்திரங்களுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெகுஜன சினிமாவில் இது சாத்தியமில்லை. வெவ்வேறு விதமான பெண்களின் மன உணர்வுகள் திரையில் காட்சிகளாக விரிகின்றன.  


இந்த ' Modern Love Chennai ', யாரையும் காதலிக்காமல் இருப்பவர்களை காதலிக்கத் தூண்டும், காதலித்துக் கொண்டிருப்பவர்களை மேலும் நெருக்கமாக்கும். Feel Good Anthology.


The New York Times நாளிதழில் 'Modern Love ' பகுதியில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே அடிப்படையாக வைத்து இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருப்பதால்தான் மனதிற்கு இவ்வளவு நெருக்கமாக இருக்கிறதோ ! 


முதலில் 'Modern Love' என்ற பெயரில் ஆங்கிலத்தில் 2019ல் வெளியாகியிருக்கிறது. பிறகு 'Modern Love Mumbai ' மற்றும்  ' Modern Love Hyderabad ' ஆகியவை 2022ல் வெளியாகி இருக்கின்றன. இப்போது 2023ல் 'Modern Love Chennai ' . இனி அடுத்து மற்ற நகரங்களின் பெயர்களிலும் வரலாம். காதலுக்கு எல்லைக்கோடுகள் கிடையாது தானே ' Modern Love' க்கும் ❤️.


மேலும் படிக்க :

அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !

EXTRAORDINARY ATTORNEY WOO - FEEL GOOD SERIES !



Fandry - மனதிற்கு நெருக்கமான படைப்பு !


நாகராஜ் மஞ்சுலேவின் Sairat திரைப்படம் பார்த்த போதே இந்த Fandry திரைப்படத்தையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது தேடிய போது பார்க்கக் கிடைக்கவில்லை. 'அயலி' பார்ப்பதற்காக Zee5 செயலிக்கு சந்தா செலுத்தும் போது நாகராஜ் மஞ்சுலேவின் நிறைய திரைப்படங்கள் Zee5 தளத்தில் இருப்பது தெரிய வந்தது கூடவே Fandry -யும். அப்போதே அயலி பார்த்தாலும் இப்போது தான் Fandry பார்க்க முடிந்திருக்கிறது. காத்திருப்பு வீண் போகவில்லை.


திரைப்படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை தேர்ந்த கதை சொல்லல். சாதிய பாகுபாடுகள் காட்சிகளாக மட்டுமே விரிகின்றன. எந்த இடத்திலும் பிரச்சார நெடி இல்லை. ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து கல்வி கற்க வரும் ஒரு மாணவனின் அக உணர்வுகளையே இத்திரைப்படம் விவரிக்கிறது. குறியீடுகள் திரைப்படமெங்கும் நிறைந்திருக்கின்றன.கதையில் இடம்பெற்ற மனிதர்கள் வாழும் நிலப்பரப்பை நெருக்கமாக உணர வைக்கிறது, ஒளிப்பதிவு. இந்தத் திரைப்படத்தில் மிகவும் ரசித்த விசயம், பின்னணி இசை❤️. Alokananda Dasgupta , மிகவும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். தேவையான இடங்களில் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கும் இசை அவ்வளவு இதமாக இருக்கிறது. 


"நாகராஜ் மஞ்சுலேவின் திரைப்படங்களில் அரசியலை விட அழகியலே அதிகம் இருக்கிறது " என்பது அவர் மீதான விமர்சனமாக இருக்கிறது. இது மிகவும் அபத்தமான வாதம். அரசியலுடன் அழகியலும் சேரும் போதுதான் ஒரு படைப்பு முழுமையடைகிறது. அப்படியே அழகியல் இல்லாமல் 100 சதவீத அரசியல் படம் எடுத்தா மட்டும் உடனே அந்த அரசியலை எல்லோரும் ஏற்றுக் கொள்ளவா போறாங்க‌? இல்லையே. மாற்றம் மெதுவாகவே நிகழும்.


நாகராஜ் மஞ்சுலேவின் கதை சொல்லும் பாணி மிகவும் பிடித்திருக்கிறது. இனி அவரது மற்ற திரைப்படங்களையும் சந்தா முடியும் முன் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க :

சேத்துமான் !

கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !





The Elephant Whisperers !


ஆவணப்படுத்துதல் என்பது முக்கியமான செயல்பாடு.இதில் நம் அனைவருக்கும் பங்கிருக்கிறது. ஆவணப்படுத்துதல் என்பது எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஆவணப்படுத்தல் மூலம் அறிவும் வரலாறும் பதிவாகிறது. இது ஒரு தொடர் செயல்பாடு.ஆனால் இந்த விசயத்தில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். 

ஆவணப்படங்கள் உலகெங்கும் கவனம் பெற்றிருந்தாலும் இந்தியச் சூழலில் இன்னமும் போதிய கவனம் பெறவில்லை. இதன் முக்கியத்துவத்தையும் நாம் உணரவில்லை. மற்ற இயக்குநர்கள் வெளியே தெரிந்த அளவிற்கு இந்திய ஆவணப்பட இயக்குநர்கள் வெளியே தெரியவில்லை. இப்படியான சூழலில் ' The Elephant Whisperers ' ஆவண குறும்படத்திற்கு கிடைத்திருக்கும் விருதானது ஆவணப்படங்கள் குறித்தான புரிதலை கொஞ்சமேனும் அதிரிக்கும். இயற்கையையும், இயற்கையுடன் இணைந்த வாழ்வை வாழும் காட்டின் பாதுகாவலர்களையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ஆவண குறும்படத்திற்கு விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 


ஆசியாவிலேயே பழமையான யானை முகாம்களில் ஒன்றாக இருக்கும் முதுமலை யானைகள் முகாம் பற்றியோ அதன் செயல்பாடுகள் பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு இதற்கு முன்பு தெரியாது. இந்த ஆவண குறும்படம் அதை நமக்கு தெரியப்படுத்தி இருக்கிறது. எந்த உயிரினமும் மனிதர்களாகிய நாம் கொடுக்கும் அன்பை பெற்றுக்கொண்டு திருப்பிக் கொடுக்கின்றன. சமீபத்தில் கூட உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஆரிப் என்பவர், காயமடைந்த நாரை ஒன்றை குணப்படுத்தி இருக்கிறார். குணமாகி ஓராண்டான பிறகும் அந்த நாரை அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவர் கூடவே பறந்து செல்வதை தீக்கதிர் வெளியிட்ட ஒரு காணொளியில் காண முடிந்தது.


உலகெங்கிலுமே பல்வேறு விதமான உயிரினங்கள் மனிதர்கள் வாழுமிடங்களிலும், மிருக காட்சி சாலைகளிலும் வளர்க்கப்படுகின்றன. அனைத்துமே அன்பிற்கு கட்டுப்பட்டவனவாகவே இருக்கின்றன. " யானைக்களுக்கு உணர்ச்சிகள் அதிகம், புத்தியும் அதிகம். ஆனாலும் அது ஒரு காட்டு மிருகம் என்பதை அறிந்தே இருக்கிறோம் " என்று பொம்மன் இந்த குறும்படத்தின் ஓரிடத்தில் சொல்கிறார். இந்தப் பார்வை ரொம்ப முக்கியம். " எல்லாவற்றையும் நாங்களே சொல்லிதர முடியாது.அது யானை , யானைக்கூட இருந்துதான் கத்துக்கணும்" என்கிறார், பெள்ளி. இப்படியான புரிதல் இருப்பதால்தான் தாய் யானையைப் பிரிந்த யானைக்குட்டிகளை இவர்களால் வளர்த்தெடுக்க முடிந்திருக்கிறது. 


பொம்மன் மற்றும் பெள்ளியின் வெள்ளந்தியான முகங்களைக் காண்பதும், அவர்களின் வாஞ்சையான பேச்சைக் கேட்பதும் பெரும் மகிழ்வைக் கொடுக்கக் கூடியவை. இவர்கள் வளர்த்த யானைகளான ரகு மற்றும் பொம்மியுடனான இவர்களது உரையாடல்கள் இன்னமும் சுவாரசியமானவை. காட்டின் பாதுகாவலர்கள் (பழங்குடியினர்) குறித்தும், அவர்களுக்கிருக்கும் காடு பற்றிய புரிதல்கள் குறித்தும் , முதுமலை யானைகள் முகாம் குறித்தும் ஒரு சிறு துளி தான் ஆவண குறும்படமாக உருவாகியிருக்கிறது. அந்தச் சூழலிலேயே இன்னும் பதிவு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. 


இயக்குநர் கார்த்திகியும் மற்றும் குழுவினரும் இரண்டு ஆண்டுகளாக முதுமலை காட்டில் தங்கி இந்த ஆவண குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் காட்டில் பதிவு செய்த பலவற்றை இக்குறும்படத்தில் இணைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவை காட்சிக்கு நெருக்கமாக இருந்தாலும் போக போக அவை இடையூறு தருபவையாக இருக்கின்றன. மற்றபடி நல்லதொரு உருவாக்கம்.


பொதுவாகவே விருது என்பதில் பல்வேறு விதமான அரசியல்கள் இருந்தாலும் விருது கிடைக்கும் போது குறிப்பிட்ட படைப்பு வெளியே தெரிய வரும், கூடவே படைப்பாளியும் தெரிய வருவார். ஒரு சில படைப்புகள் தான் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விருது பெற்ற கவனத்தால் பொம்மன், பெள்ளி உள்ளிட்ட 91 யானை பாகன்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டிருக்கிறது‌. இது மட்டுமல்லாமல் 91 பாகன்களுக்கும் தலா பத்து இலட்ச ரூபாய் அவர்கள் விருப்பப்படி வீடு கட்டிக்கொள்ள தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. காட்டு மனிதர்களை நாட்டு மனிதர்கள் கெடுக்காமல் இருந்தால் சரி.


இயக்குநர் கார்த்திகி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉. 


மேலும் படிக்க :

Extraordinary Attorney Woo - Feel Good Series !

Life in Colour with David Attenborough - Documentary !

அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !


" ஆளும் வர்க்கத்தின் பலம் அரசு இயந்திரங்களான நிர்வாகம், சட்டம், அதிகாரம் முதலிய அரசு இயந்திரங்களை இயக்குவதில் மட்டும் அல்ல பண்பாட்டுத் தளத்திலும் பத்திரமாக இருக்கிறது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் போராட வேண்டியிருக்கிறது" - கிராம்சி.

பண்பாட்டு தளத்தில் மாற்றம் நிகழாமல் சமூகத்தில் மாற்றம் நிகழாது. ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான சமூக மாற்றத்தையும் தடுக்கும் காரணிகளில் ஒன்றாக பண்பாட்டு கூறுகள் தொடர்ந்து இருந்து வருகிறது. பண்பாட்டு கூறுகளுக்கும் ஆணாதிக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. அதனாலேயே பண்பாட்டு கூறுகளில் நிகழும் மாற்றங்களைக் கண்டு ஆண்கள் அஞ்சுகின்றனர். பண்பாட்டு கூறுகளிலும் காலத்திற்கு ஏற்ற மாற்றம் தேவை என வலுவாகவே பேசுகிறது 'அயலி'. பண்பாட்டில் கலந்திருக்கும் மூட நம்பிக்கைகளை பகுத்தறிவு கொண்டு களைய முன் வர வேண்டும். பண்பாடு என்பதும் மாறிக்கொண்டே இருப்பதுதான். மாற்றத்தை ஏற்காத பண்பாடு அழிந்து போய்விடும். பண்பாட்டிற்கும் அரசியலுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. 

" 'கலை கலைக்காகவே 'ன்னு சில பேர் கரடி விடுவானுங்க .அதை நீங்க நம்பாதீங்க .அப்படியிருந்தா அது எப்போவோ செத்துப் போயிருக்கும் . கலை வாழ்க்கைக்காகத்தான்; வாழ்க்கையும் கலையும் சேரும் போதுதான் அதுக்கு உயிரே வருது..."- எம்.ஆர்.ராதா. 

கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அது எப்போதும் மக்களுக்கானது. 'அயலி' இந்த மண்ணை பற்றியும் , இந்த மண்ணின் மக்களைப் பற்றியும் பேசுகிறது. தமிழ் நிலம் சார்ந்த குறியீடுகள் இத்தொடர் முழுவதும் நிரம்பியிருக்கின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டு ஆய்வாளர், தொ.பரமசிவன் எழுத்தை வாசித்தவர்களுக்கு இந்தத் தொடர் இன்னும் நெருக்கமானதாக இருக்கக்கூடும். நாட்டார் தெய்வங்கள், பிடிமண் கோயில், கொலை செய்யப்பட்டவரையே தெய்வமாக வழிபடுவது, சடங்குகள், பழக்கவழக்கங்கள் என தொ.ப.வின் தாக்கம் நிறைய இருந்தது. 

பரபரப்பில்லாத , திடீர் திருப்பங்கள் இல்லாத, வன்முறை இல்லாத அடுத்தடுத்து இரண்டு தொடர்கள் பார்க்கப்பட்டுவிட்டது. முதலில் பார்த்தது ' Extraordinary Attorney Woo'. இப்போது 'அயலி'. மிகவும் சிறப்பான உருவாக்கம். கதையை தேர்ந்தெடுப்பதில் , திரைக்கதை அமைப்பதில், கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில், ஒளிப்பதிவில், இசையில், கலை அமைப்பில் என தொழில்நுட்ப ரீதியாக சமீப கால மாற்று சினிமா படைப்புகள் நிறைவை அளிக்கின்றன. இத்தொடரும் அப்படியே.

தமிழ்நாட்டில் நாம் பேசுகின்ற அரசியலுக்கும் 80களுக்கு பிறகான தமிழ் சினிமாவிற்கும் தொடர்பே இல்லாமல் இருந்து வந்தது. இதுவும் சமீப ஆண்டுகளில் தான் மாறியிருக்கிறது. அயலியும் நாம் வெளியே பேசுகின்ற அரசியலை திரையில் பேசியிருக்கிறது. முதலில் இப்படியொரு தரமான படைப்பைக் கொடுத்த இயக்குநர், முத்துக்குமார் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்.

அயலியின் பேசுபொருள் நமது வீட்டிலும் , பொதுவெளியிலும் மாறியே ஆக வேண்டியது. புனிதம் என்றும் தீட்டு என்றும் இந்த பூமியில் எதுவும் இல்லை. இதை காரணம் காட்டி பாகுபாடு காண்பிப்பது முடிவிற்கு வர வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பாக பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பேசுகிறது, அயலி.

மிகவும் கச்சிதமான கதாப்பாத்திர தேர்வுகள் அயலியின் பெரும் பலம். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் ஏற்று நடித்தவர்கள் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபி திரை முழுவதையும் ஆக்கிரமிக்கிறார். சின்ன சின்ன உணர்வுகளைக்கூட சிறப்பாக வெளிப்படுத்தி கவனத்தை இருக்கிறார். மொத்தத்தில் நல்ல தேர்வு. இவரின் அம்மா குருவம்மாவாக அனுமோளும் , அப்பா தவசியாக மதனும் நடித்திருக்கிறார்கள். முதல் 5 பகுதிகள் வரை அம்மாவிற்கும் மகளுக்கும் உள்ள நெருக்கம் விவரிக்கப்படுகிறது. அபிக்கும் அனுமோளுக்கும் இடையே நடிப்பில் நீயா நானா போட்டியே நடக்கிறது.

 தமிழ்ச்செல்வியின் தோழி மைதிலியாக லவ்லினும், அம்மாவாக காயத்ரி கிருஷ்ணனும் மற்றொரு தோழி கயல்விழியாக தாராவும் நடித்திருக்கிறார்கள். சேகராக நடித்திருக்கும் ஜென்சனும் கவனத்தை ஈர்க்கிறார். மற்ற கதாப்பாத்திரங்களும் சிறப்பாகவே உள்ளன. அபியின் குரல், தமிழும் மலையாளமும் கலந்த அனுமோளின் குரல் , மதனின் குரல், காயத்ரி கிருஷ்ணனின் குரல், ஜென்சனின் குரல் என கதாப்பாத்திரங்களின் விதவிதமான குரல்களும் வசீகரிக்கின்றன. 

நறுக்கு தெரித்தார் போல அமைந்த வசனங்கள் பட்டையைக் கிளப்புகின்றன. உலகத் திரைப்படங்களில், மற்ற இந்திய மொழி திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் என கொண்டாடப்படும் திரைப்படங்களில் வசனங்கள் வலிமை மிக்கதாக இருக்கும். தமிழின் சிறந்த திரைப்படங்களில் வசனங்கள் அந்த அளவிற்கு வலிமை இல்லாமல் இருந்தது. அதையும் இந்த அயலி உடைத்திருக்கிறது. வசனங்களுக்காக மட்டுமே நாம் அயலியைக் கொண்டாடலாம். பல இடங்களில் வசனங்கள் சாட்டையடி கொடுக்கின்றன.பகுத்தறிவின் பாதையில் வசனம் எழுதிய சச்சின் அவர்களுக்கு வாழ்த்துகள். 

ரேவாவின் இசையும் ராம்ஜியின் ஒளிப்பதிவும் படைப்பை இன்னும் நெருக்கமாக அணுக உதவுகின்றன. சின்னச்சின்ன இடங்களிலும் இசை சேர்க்கப்பட்டிருப்பது அழகு. உதாரணமாக தமிழ்ச்செல்வி தனது அப்பாவிடம் போலியாக அழுவது போல பேசி பரீட்சை எழுத சம்மதம் வாங்கும் காட்சியில் சேரக்கப்பட்டிருக்கும் இசை. அதே போல சில இடங்களில் இசை சேர்க்காமல் விடப்பட்டிருப்பதும் அழகுதான். 

காதல் இல்லாமல் ஒரு படைப்பைக் கொடுத்தற்கே முதலில் இயக்குநருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு 'காதல்' என்ற ஒன்று தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கிறது. ஏதாவது ஒரு காதல் படத்தில் இருந்தே ஆக வேண்டும் என பெரும்பாலான இயக்குநர்கள் நினைக்கிறார்கள். சரிங்க அப்படித்தான் இவ்வளவு காதல்களைச் சொல்லி காதலை ஜனநாயகப்படுத்தியிருக்காங்களா ? என்றால் அதுவும் இல்லை. தொடர்ந்து காதலை புனிதப்படுத்தியே வைத்திருக்கிறார்கள். பெண்களை Stalking செய்வதை காதல் என நம்ப வைத்திருக்கிறார்கள். காதல் என்பது இயல்பானது என்றோ , யாருக்கும் யாருக்கும் இடையிலும் நிகழலாம் என்றோ, காதலித்தால் திருமணம் செய்துதான் ஆக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை என்றோ, வாழ்வில் எத்தனை காதல்கள் வேண்டுமானலும் வரலாம் என்றோ தமிழ் சினிமா பேசவேயில்லை.

அயலியின் இறுதிகட்ட பகுதிகள் தமிழ்ச்செல்வி மூலமாக நாயக பிம்பத்தை உருவாக்கினாலும் பெண்களின் எதிர்குரலாகவே பதிவாகிறது. அத்தனை பண்பாடுகளும், அத்தனை கட்டுப்பாடுகளும், அத்தனை சடங்குகளும், அத்தனை பழக்கழக்கங்களும், அத்தனை கௌரவங்களும் பெண்களைக் கட்டுப்படுத்தவே பயன்படுத்தப்படுவதை அயலி கேள்விக்கு உட்படுத்துகிறது. 

கொரோனா காலத்தில் தமிழகத்தில் மிக அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இந்தச் சூழலில் குழந்தை திருமணத்தால் உருவாகும் பாதிப்புகளை வெளிப்படுத்தி குழந்தை திருமணத்திற்கு எதிரான படைப்பாக, பெண் கல்வியை ஆதரிக்கும் படைப்பாக, காலத்திற்கு பொருந்தாத பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் படைப்பாக அயலி மிளிர்கிறது.

பெண் உடலில் இயற்கையாக நிகழும், மனித குழந்தை பிறப்பதற்கு துணைபுரியக்கூடிய 'மாதவிடாய்' மூலம் இன்றும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் , கிராமம், நகரம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. குறிப்பாக வழிபாடு தொடர்பான விசயங்களில் இன்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களும் தாங்களாகவே கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்கின்றனர். மிக அரிதாகவே அந்த நாட்களில் வழிபாடு சார்ந்த விசயங்களில் பெண்கள் ஈடுபடுகின்றனர். 

மாதவிடாய் காலங்களில், பணிபுரியும் பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பெண்களின் வலி நிறைந்த அந்த நாட்களின் பணிச்சுமையை உடனே குறைக்க முடியாவிட்டாலும், அவர்களை ஒதுக்கி வைத்து மனச்சுமை ஏற்றாமல் இருப்பது முக்கியம். தெய்வங்கள், மாதவிடாய் காலங்களில் பெண்கள் வழிபடுவதை தடுப்பதில்லை. அடிப்படைவாதிகளே தடுக்கிறார்கள். 

மொத்தத்தில் அயலி ஒரு பெண்களை மையப்படுத்திய தொடர். இது ஒரு தொடக்கம் தான். அயலி சொல்லாமல் விட்டதாக நினைக்கும் சாதி மறுப்பு திருமணங்கள், ஆணவ படுகொலைகள் , பாலின சமத்துவம் குறித்தான படைப்புகள் அடுத்தடுத்து வெளிவர வேண்டும். அயலியில் போதாமைகள் இருக்கலாம். ஆனால் இதை முற்றாக நிராகரிப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை. 

அடுத்தடுத்து பார்க்க வேண்டிய திரைப்படங்களின், தொடர்களின் வரிசை நீளமாக இருக்கும் நிலையிலும் ஒரு படைப்பு நம்மை மீண்டும் பார்க்கத் தூண்டுவது சாதாரண விசயம் அல்ல. அயலி மீண்டும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. மீண்டும் இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் ❤️

மேலும் படிக்க :

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

ஜெய்பீம் -அறத்தின் குரல் ! 


Extraordinary Attorney Woo - Feel Good Series !


வெற்றி பெற்ற பெரும்பாலான இணையத் தொடர்கள் பரபரப்புகளையும் , திடீர் திருப்பங்களையும் , அதீத வன்முறைகளையும் முன்வைத்த சூழலில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உள்ளங்களைக் கவர்ந்திருக்கும் இணையத்தொடர்தான், ' Extraordinary Attorney Woo '. 

Feel Good Series. சின்ன சின்ன விசயங்களைக் கூட பார்த்து பார்த்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். சரி, தவறு என்பதைக் கடந்து அறத்தின் பக்கம் நிற்கிறது இத்தொடர். ' Social Justice ' என்ற வார்த்தை பல முறை வருகிறது. இத்தொடரின் பின்னணி இசை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. நவீன இசைக்கருவிகளின் மூலமும் நல்லதொரு இசையைக் கொடுக்க முடியும் என்பதை இத்தொடரின் இசையமைப்பாளர் நிரூபித்து இருக்கிறார். ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. நவீன தொழிற்நுட்பங்கள் உதவியுடன் அவ்வப்போது காற்றில் உலவ விடப்படும் விதவிதமான திமிங்கலங்கள் , டால்பின்கள் அழகாக இருக்கின்றன.

கொரியத் திரைப்படங்கள், கொரியத் தொடர்கள் இன்றைய இந்திய இளைஞர்களால் ஏன் இவ்வளவு கொண்டாடப்படுகின்றன என்பதற்கான காரணமும் இத்தொடரைப் பார்க்கும் போது விளங்கியது. பழமையும் நவீனமும் கலந்த வாழ்வியல் முறையை கொரிய படைப்புகள் முன்வைக்கின்றன என நினைக்கிறேன். நவீனத்தை ஏற்பதில்தான் இந்தியர்களாகிய நாம் பின்தங்கி இருக்கிறோம். நவீன தொழிற்நுட்பங்களை விரைவாக ஏற்றுக் கொள்கிறோம்‌. வாழ்வியல் முறைகளில் நவீனத்தை நாம் அவ்வளவு எளிதாக ஏற்பதில்லை. அதனால் நவீன வாழ்வை விரும்பும் இந்திய இளைஞர்களை (2k Kids) கொரிய தொடர்கள் ஈர்க்கின்றன போலும்.

ஆட்டிசம் பாதித்த Attorney, Young Woo-வாக, தொடரின் நாயகியாக நடித்திருக்கும் 

Park Eun-bin பிரமிக்க வைக்கிறார். எந்த இடத்திலும் கதாப்பாத்திரத்தை விட்டு விலகவேயில்லை. நடையிலும், பாவனைகளிலும், பேச்சிலும் ஆட்டிசத்தின் பாதிப்புகளை வெளிப்படுத்துகிறார். திமிங்கலங்கள் பற்றிய விசயங்களை எப்போதும் எந்த இடத்திலும் சலிக்காமல் பேசுகிறார்‌. பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். அடுத்த முறை கண்ணாடி கதவைப் பயன்படுத்தும் போது இவர் போலவே கதவை லேசாக திறந்து 1..2..3.. சொன்ன பிறகுதான் உள்ளே நுழைவோம்‌ போல. அந்த அளவிற்கு நம்முள் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறார். 'Extraordinary' Acting.

சம கால பிரச்சனைகள் பலவற்றை இத்தொடரின் 16 பகுதிகளும் விவாதிக்கின்றன. அவரவரின் நியாயங்கள் முன்வைக்கப்படுகின்றன. எது நியாயமானது என்பதையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்கள். சமூக அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. உருவாக்கம் தரமுடன் இருப்பதால் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த முடிந்திருக்கிறது.   

தொடரின் தலைப்பில் மட்டும் ' Extraordinary ' இல்லை. இந்தத் தொடரே ' Extraordinary ' -ஆக இருக்கிறது. நல்ல அனுபவம். 

மேலும் படிக்க :

ENNIO : THE MAESTRO (THE GLANCE OF MUSIC ) (2021) , DOCUMENTARY MOVIE !

SEX EDUCATION - NETFLIX SERIES !

விட்னஸ் - சாதிக்கும், அதிகாரத்திற்கும் எதிரான குரல் !


2022ம் ஆண்டு, இந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான 'விட்னஸ்' திரைப்படத்துடன் நிறைவு பெறுகிறது. 

இந்தாண்டு வெளிவந்த நிறைய தமிழ்த் திரைப்படங்கள் நம்பிக்கை அளிக்கின்றன. நாயகத்துதிபாடல்களை மட்டுமே முன்வைக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. பல்வேறு விதமான அரசியல்களை பேசும் திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. பொறுப்புணர்வுடன் திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் இது அரிதான விசயம். இந்த ஆண்டில் நிறைய வெளிவந்திருக்கின்றன. OTT-ம் ஒரு காரணமாக இருப்பதை மறுக்கமுடியாது. குறிப்பாக SonyLiv தளத்தில் நிறைய குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ( கார்கி, அனல் மேலே பனித்துளி, கடைசி விவசாயி, சேத்துமான், இப்போது விட்னஸ்) இருக்கின்றன. 

'விட்னஸ்' நாம் பேச மறந்த, பேச மறுத்த விசயத்தைப் பேசி இருக்கிறது. சாதிக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு திரைப்படம் முழுவதும் விவரிக்கப்படுகிறது. அதிகாரம், எப்போதும் சட்டத்தின் பக்கம் நிற்பதற்குப் பதிலாக சாதியின் பக்கமே நிற்கிறது‌. எளிய மக்களை அடக்கி ஒடுக்கவே அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது.  

தேர்ந்தெடுத்த கதாப்பாத்திரங்களும், காட்சிப்படுத்திய விதமும் மிகவும் பிடித்திருந்தது. செங்கொடிகளை திரையில் காண்பித்ததும், தீவிர இடதுசாரி தோழர்களின் வாழ்வை செல்வா தோழரின் கதாப்பாத்திரம் வாயிலாக விவரித்ததும் முக்கியமானது. மக்களின் பிரச்சனைகளுக்காக இன்றும் ஓயாமல் குரல் கொடுப்பவர்கள் இடதுசாரி தோழர்கள்தான், ஓட்டரசியல்வாதிகள் அல்ல. 

இவ்வளவு சிக்கலான விசயத்தை தேர்ந்த கலைவடிவமாக கொடுத்த இயக்குநர் தீபக்கிற்கும் , படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் ! 

இத்திரைப்படத்தைப் பார்க்கும் எவரையும் ஏமாற்றாது. 

மேலும் படிக்க :

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

ஜெய்பீம் -அறத்தின் குரல் ! 

The Good The Bad and The Ugly !


வெக்கை நிறைந்த நிலப்பரப்புகள், வெயிலும் , அழுக்கும் படிந்த மனிதர்கள், திரைப்படமெங்கும் முழங்கும் துப்பாக்கிக்குண்டுகள், சீறிப்பாயும் குதிரைகள், அட்டகாசமான கேமிரா கோணங்கள், Tonino Delli Colli -ன் அழகான ஒளிப்பதிவு , Ennio Morricone -ன் மிகச்சிறந்த இசையும் என அற்புதமான திரைப்பட அனுபவம். என்னியோ மோரிக்கோன் இசைக்காகவே பார்க்க ஆரம்பத்ததுதான் 'Dollars Trilogy' என அழைக்கப்படும் Sergio Leone இயக்கிய 'A Fistful of Dollars' , ' For a Few Dollars More' மற்றும் இந்த ' The Good, the Bad and the Ugly' என இந்த மூன்று திரைப்படங்களும்.

மூன்று திரைப்படங்களும் நிறைவையே அளித்தன. அதிலும் இந்த 'The Good, the Bad and the Ugly' திரைப்படமெல்லாம் ஏறக்குறைய மூன்று மணி நேரம். ஆனால் எந்த இடத்திலும் சலிப்பே இல்லை. Sergio Leone இயக்கிய இத்தகைய திரைப்படங்களை 'Spaghetti Western' என்கிறார்கள். முந்தைய இரண்டு திரைப்படங்களைப் போலவே இந்தத் திரைப்படத்திலும் விசில் இசை இடம்பெறுகிறது. என்னியோ மோரிக்கோன் பற்றிய ஆவணப்படம் ( Ennio : the Mastro ( The glance of music )) பார்த்த பிறகு அவரது இசையில் உருவான திரைப்படங்களை தேடிப்பார்க்கும் ஆவல் உருவானது . அது Sergio Leone இயக்கிய திரைப்படங்களிலிருந்து தொடங்கியிருக்கிறது. 

Ennio Morricone is a real master ❤️ 

மேலும் படிக்க :

ENNIO : THE MAESTRO (THE GLANCE OF MUSIC ) (2021) , DOCUMENTARY MOVIE !

SEX EDUCATION - NETFLIX SERIES !


மாமனிதன் ❤️


கதைக்கே தேவையில்லாத அதீத வன்முறை காட்சிகளுடனும், வெத்து நாயகத்துதிபாடல்களுடனும் , இன்னமும் பெண்களே பொருளாகவே சித்தரிக்கும் திரைப்படங்கள் பெருமளவில் வெளியாகிக் கொண்டிருக்கும் தமிழக சூழலில் இந்த 'மாமனிதன்' திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

கிராம பின்புலத்தில் வாழ்பவர்களில் சிலர் இத்திரைப்படத்தில் நாயகன் சந்திக்கும் சூழலை எதிர்கொண்டு இருப்பார்கள். ஆனால் இத்திரைப்படத்தில் காண்பித்தது போல ஒருவராவது வாழ்ந்து இருப்பார். மற்றவர்கள் அதே ஊரில் அல்லது பக்கத்து ஊரில் இருந்துகொண்டு நிலைமையை சமாளித்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த நெருக்கடியை , மற்ற திரைப்படங்கள் போல ஏதாவது அற்புதம் நடந்து 'நாயகனாக' மீண்டு வருவது போல காண்பிக்கப் போகிறார்களோ என்று எதிர்பார்த்த நிலையில் 'மனிதனாக' வே காட்சிப்படுத்தியது நல்ல விசயம்.

இன்றைய உலகவணிகமயமாக்கல் சூழலில் மனிதர்களின் தேவைகள் வேண்டுமென்றே அதிகரிக்கப்படுகின்றன. அதிகரித்து வரும் தேவைகளை நிறைவு செய்ய திடீரென ஒரு மாற்றம் நிகழாதா ? என்றே நம்மில் பெரும்பாலானோர் எதிர்பார்க்கிறோம். நாம் மாற்றத்தை மட்டும் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. வளர்ச்சியை நோக்கி பயணிப்பதிலும் தவறில்லை. ஆனால் உடனடியான வளர்ச்சி என்பது ஆபத்தானது. இதில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். சிறிய கவனக்குறைவு கூட சிக்கலில் சிக்க வைத்துவிடும். பணம் சார்ந்த விசயங்களில் விதவிதமான வழிகளில் ஏமாற்ற அங்கங்கே மனிதர்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள். 

இந்தத் திரைப்படத்தில் முக்கியமாக காட்சிப்படுத்தப் பட்டிருப்பது 'அன்பு'. சக மனிதர்கள் மீதான அன்பு தான் மனித இனத்தையே இயங்க வைக்கிறது. பெரும்பாலான பிரச்சனைகளிலிருந்து நம்மை காப்பாற்றுவதும், கரை சேர்ப்பதும் அன்புதான். அந்த அன்பு என்பது மதங்கள் கடந்தது என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார், இத்திரைப்படத்தின் இயக்குனர், சீனு ராமசாமி. சாதியை முன்வைத்தும், மதத்தை முன்வைத்தும் மக்களைப் பிரித்து குளிர் காய அரசியல் கட்சிகள் தயாராக இருக்கும் சூழலில் மக்களின் ஒற்றுமையை, மதநல்லிணக்கத்தை படமாக்கியது, பாராட்டிற்குரியது.

இத்திரைப்படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை கல்வியின் முக்கியத்துவம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. " உன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் படிப்பை மட்டும் விட்டுவிடாதே" என்பது காட்சிகளாக விரிகிறது. கல்வி எப்போதும் நம்மைக் கைவிடாது. சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் கல்வியின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. 

விஜய் சேதுபதியின் நாயக பிம்பம் அவ்வப்போது வெளிப்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் அடக்கியே வாசித்து இருக்கிறார். காயத்ரி, எதிர்பாராத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குரு சோமசுந்தரம் பாயாகவே வாழ்ந்திருக்கிறார். களத்தில் மாதவனாக வரும் இசை விமர்சகர் ஷாஜி , இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வந்தாலும் திரைப்படம் முழுவதும் அவரையும் சேர்த்தே கதை நகர்கிறது. 

போதாமைகள் இருந்தாலும் எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம்தான், மாமனிதன்.

மேலும் படிக்க :

கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !

ஜெய்பீம் -அறத்தின் குரல் !


சேத்துமான் ❤️


எழுத்தாளர், பெருமாள் முருகனின் வசனத்திற்காக மட்டுமே இத்திரைப்படத்தைக் காணலாம். அந்த அளவிற்கு வசனங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. மிகவும் இயல்பான காட்சியமைப்புகள். தேவைப்படும் இடங்களில் மட்டுமே இசை சேர்க்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் தேர்ந்த படைப்பு.

தமிழ் திரைப்படங்கள், மலையாளத் திரைப்படங்கள் போல அசலான திரைப்படங்களை நோக்கி நகருகிறது என்ற நம்பிக்கையை இத்திரைப்படம் அளிக்கிறது. திரைக்கதையின் ஊடாக வலிந்து திணிக்கப்படும் நாயகத்துதிபாடல்களும் , தேவையே இல்லாமல் சேர்க்கப்படும் வன்முறை காட்சிகளும் நிறைந்த தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகி வரும் சூழலில் 'சேத்துமான்' போன்ற திரைப்படங்கள் நம்பிக்கை அளிக்கின்றன. 

தமிழ்த் திரைப்படங்களில் மிக அதிகளவிலான வன்முறை காட்சிகள் இடம்பெறுவது மிகவும் ஆபத்தானது. இப்போது சின்னத்திரை தொடர்களிலும் தேவையில்லாத வன்முறை காட்சிகள் திணிக்கப்படுகின்றன. தொடர்ந்து காட்டப்படும் வன்முறை காட்சிகளால், வன்முறை சரி என்ற மனநிலையை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் உருவாக்கி வருகிறது. ஒருவரை தாக்குவது மட்டும் வன்முறையல்ல ; தாக்க நினைப்பதே வன்முறைதான் என்பதை முதலில் நாம் உணர வேண்டும். வன்முறை, எப்போதும் எதற்கும் தீர்வாகாது. இதை முன்னிருத்தியே கலைப்படைப்புகள் உருவாக வேண்டும். 

மேலும் படிக்க :

கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms