Monday, September 2, 2024

Veyilmarangal ( Trees under the Sun ) !


விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளை, அவர்கள் சந்திக்கும் அரசியலை அழகியலுடன் முன்வைக்கும் திரைப்படம். கதையின் ஊடாக இயற்கையை அவ்வளவு நெருக்கமாக காட்சிப்படுத்தி இருக்கிறார், இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன். இயற்கையை அவதானிக்கும் எவருக்கும் பிஜுகுமார் அவர்களின் திரைப்படங்கள் நிச்சயம் பிடிக்கும். 


எளிய மக்கள் அரசாங்காத்தாலும் துரத்தப்படுகின்றனர். ஆதார் கார்டு இல்லையென்பதால் நிவாரணமும் கிடைக்காது என்கின்றனர். ( இன்றைய சென்னை வெள்ளத்திலும் இது தான் நிலைமை. ரேசன் கார்டு இல்லையென்றால் நிவாரணம் கிடைக்காதாம் ).சொற்ப கூலி கொடுக்கும் நிலப்பிரபுவால் துரத்தப்படுகின்றனர். அப்போது இந்திரன்ஸ் பேசும் வசனம் " நீங்கள் எங்களைத் துரத்துவதால் ஒன்றும் செத்துப் போகமாட்டோம். எங்களின் உடலில் ஆரோக்கியம் உள்ளவரை இந்தப் பூமியில் வாழ்வோம்❤️ ".


இந்த பூமியில் மனித இனம் தொடர்ந்து இயங்க அதிக உடலுழைப்பைக் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்கள்தான். இந்திய அளவில் அவர்கள் சாதியின் பெயராலும் கொடுமைகளை அனுபவிக்கின்றனர். 


மனித இனம் இந்தப் பூமிக்குச் செய்து வரும் அயோக்கியத்தனங்களால் உருவாகி இருக்கும் காலநிலைமாற்ற விளைவுகளால் தங்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்படுபவர்களாக விளிம்புநிலை மக்களே உள்ளனர். இதையும் இயக்குநர் காட்சிப்படுத்தி இருக்கிறார்.


ஆர்ப்பாட்டமில்லாத , அமைதியான மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பு 👍


மேலும் படிக்க :

ADRISHYA JALAKANGAL !

 JANA GANA MANA - பாசிச எதிர்ப்பு சினிமா !

கூழாங்கல் ❤️


நடையின் ஊடாக வெக்கையான நிலப்பரப்பையும் , அங்கு வாழும் அசலான மனிதர்களையும் , அவர்களின் வாழ்வியலையும் முன்வைக்கும் ஒரு மண் மணக்கும் படைப்பு. திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்பதை உணர்ந்து நிறைய விசயங்களை அழகிய திரைமொழியுடன் குறிப்பால் உணர்த்துவது சிறப்பு. தமிழ்த் திரைப்படங்கள் தொடர்ந்து தவறவிடும் விசயமிது. 


எந்தப் படைப்பாக இருந்தாலும் பார்வையாளர்களும் அதில் பங்கெடுத்து ஒரு உரையாடலை அந்தப் படைப்புடன் நிகழ்த்த வேண்டும்.  இந்தத் திரைப்படத்தில் பார்வையாளர்கள் தாங்களே யூகித்துக் கொள்ளும் வகையில் பல காட்சிகள் அமைந்திருக்கின்றன. காட்சி ஊடகமான திரைப்படத்தில் எல்லாவற்றையும் நீட்டித்து விளாவாரியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்,  குறிப்பாக வன்முறையை நீட்டித்து காட்டுவதே தங்களின் கடமை என இருக்கும் இயக்குநர்கள் இதை உணர வேண்டும்.


ஒளிப்பதிவும், பின்னணி இசையும் திரைப்படத்தை மேலும் நெருக்கமாக உணர வைக்கின்றன. அவை  எந்த இடத்திலும் திரைப்படத்தை இடையூறு செய்யவில்லை. சண்டையின் போது பேசப்படும் கெட்ட வார்த்தைகள் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதுவும் திரைப்படத்திற்கு கூடுதல் யதார்த்த தன்மையைக் கொடுத்திருக்கிறது. 


குழந்தைதன்மையுடன்  குழந்தையை திரையில் பார்ப்பது அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. 

கருப்பு வெள்ளை காலத்திற்கு பிறகு தமிழ்த் திரைப்படங்கள் குழந்தைகளை குழந்தைகளாக காட்டாமல் பெரியவர்கள் போலவே காட்டி வருகின்றன. நிறைய படங்களில் குழந்தைகளைக் காட்டுவதேயில்லை , அப்படியே காட்டினாலும் நகைச்சுவை காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இப்படியான சூழலில் இந்த 'கூழாங்கல்' திரைப்படத்தில் முக்கியப் கதாப்பாத்திரமாக ஒரு சிறுவனை குழந்தைத்தன்மை சிதையாமல் காட்சிப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டிற்குரியது.


மொத்தத்தில் நம்மையும் அந்த வெக்கையான நிலப்பரப்பில் நடக்க வைத்த இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉.


1.15 மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய சிறிய திரைப்படம் தான் . வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாக பாருங்கள். 


மேலும் படிக்க:


ஹர்காரா - மண்ணின் கதை !


அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !






ஹர்காரா - மண்ணின் கதை !


நாட்டார் தெய்வங்கள் குறித்தான குறிப்புடன் தொடங்கும் போதே திரைப்படம் நம்மை ஈர்க்கத் துவங்கி விடுகிறது. நாட்டார் தெய்வங்கள் எப்படி மக்களின் வாழ்வியலிலிருந்து தோன்றியிருக்கின்றன என்பதை இத்திரைப்படம் முன்வைக்கிறது. பெரும்பாலும் நாம் நமது முன்னோர்களையும் இயற்கையின் ஏதோ ஒரு வடிவத்தையுமே குலதெய்வங்களாக வணங்குகிறோம். அவையே நாட்டார் தெய்வங்கள்.


" நாட்டார் தெய்வங்கள் எவையும் 'முன்னே வந்து' வரம் தரும் தெய்வங்கள் அல்ல; 'பின்னே நின்று' பாதுகாப்புத் தரக்கூடியன. அவை அழிக்கும் ஆற்றல் அற்றவை. மாறாக வயல் களத்திலும், அறுவடைக் காலத்திலும், கண்மாய்க் கரையிலும், ஊர் மந்தையிலும், ஊர் எல்லையிலும் தூங்காமல் நின்று காவல் காக்கக்கூடியன. " என்று கூறுகிறார் ,தொ.பரமசிவன் . நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் காவல் தெய்வங்களாக இருப்பதை நாம் உணர முடியும். ஒரு மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாக 'மாதேஸ்வரன்' மாறிய கதை தான் 'ஹர்காரா'.


 நமது நாட்டார் தெய்வங்கள் கற்பனைக் கதைகளான இதிகாசங்களிலிருந்து தோன்றவில்லை. நிறுவனமயப்படுத்தப்பட்ட நடைமுறையோ, வழிபாடோ , பேதங்களோ, படையலோ நாட்டார் தெய்வங்களுக்கு இல்லை. அவை மக்களின் வாழ்வுடன் கலந்தவை. பெரிய பெரிய கோயில்களில் பல கால பூசைகளுடன் பெருந்தெய்வங்கள் இருந்தாலும் அவை எதுவும் நாட்டார் தெய்வங்களுக்கு ஈடாகாது. அவை மக்களின் வாழ்விலிருந்து விலகி நிற்பவை. 


காளி வெங்கட் மலையேறும் காட்சியின் போது வரும் இடைவேளை வரை சரியாக செல்லும் திரைக்கதையில் பின்பு விறுவிறுப்பு குறைந்து விடுகிறது. இறுதிகட்ட காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் கூட்டியிருந்தால் இன்னும் நெருக்கமான படைப்பாக இத்திரைப்படம் அமைந்திருக்கும். மற்றபடி நல்லதொரு அனுபவம். இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉 ❤️.


தமிழில் வன்முறை வெறியாட்டத் திரைப்படங்கள் தொடந்து வெளிவரும் சூழலில் ' ஹர்காரா ' போன்ற மக்களின் வாழ்வியலைப் பேசும் அர்த்தமுள்ள திரைப்படங்களும் வெளிவருவது நம்பிக்கையளிக்கிறது. இவ்வாறு மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும். 


ஆகவே மக்களே ! வன்முறை வெறியாட்டத் திரைப்படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவதில் கொஞ்சத்தையாவது நம் வாழ்வைச் சொல்லும் 'ஹர்காரா' போன்ற திரைப்படங்களுக்குக் கொடுக்க வேண்டும். 


மேலும் படிக்க:


அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !


நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !


ஜெய்பீம் -அறத்தின் குரல் ! 


Sunday, September 1, 2024

பெரியார் ஒருவரே !



பெரியாரின் கொள்கைகளை பெரியாரைத் தவிர வேறு எவராலும் கடைபிடிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். பெரியார், தான் பேர் வாங்க வேண்டும் என்பதற்காக எந்தக் கொள்கையையும் முன்நிறுத்தவில்லை. மக்களுக்கு நல்லதென்றால் எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதரிப்பார், மக்களுக்கு தீங்கு என்றால் எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார், அவ்வளவுதான் பெரியார். எந்த வட்டத்திற்குள்ளும் பெரியாரை அடக்கிவிட முடியாது. 


மக்களின் நலன்களையும் , மக்களுக்கான விடுதைலையையும், சமத்துவத்தையும், அனைவருக்குமான சுதந்திர வாழ்க்கையையும் உறுதி செய்ய தொடர்ந்து குரல் கொடுத்தார். அனைத்துவிதமான ஆதிக்கங்களையும் எதிர்த்தார். மக்களின் நலன்கள் மட்டுமே முன்நிறுத்தப்பட்டதால்தான் பெரியாரின் கொள்கைகள் இன்றும் பேசப்படுகின்றன. 


இவ்வளவு காலம் பெரியாரின் கொள்கைகள் பேசப்படுவதை பெரியாரே விரும்பியிருக்கவில்லை. பெரியாரின் கொள்கைகளின் தொடர்ச்சியாக வேறு புதிய கொள்கைகள் இந்நேரம் உருவாகியிருக்க வேண்டும். அத்தகைய ஆக்கப்பூர்வமான மாற்றம் இங்கே நிகழவில்லை. அந்த அளவிற்கு நாம் பின்தங்கி இருக்கிறோம். தான் கண்ட அனைத்தையும் அறிவியலின் கண் கொண்டு பார்த்தவர்தான், பெரியார். அறிவிற்கு பொருந்தாத எதையும் அவர் நம்பவில்லை; ஏற்கவில்லை. நாயகத்துதிபாடல், நாயகத்துதிபாடல் உருவாக்கும் கும்பல் மனப்பான்மை இவற்றை கடுமையாக வெறுத்தார். ஆனால் இன்று அவரை வைத்து நாயகத்துதிபாடலும், கும்பல் மனப்பான்மையும் செய்யப்படுவது பெரியாருக்கு நாம் செய்யும் துரோகம். 


எதிர்தரப்பையும் தன்பக்கம் ஈர்க்கும் வல்லமை பெரியாருக்கும் இருந்தது, அறிஞர் அண்ணாவிற்கும் இருந்தது. கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் எதிர்தரப்பின் நியாயங்களை ஏற்றுக்கொண்டார்கள். முக்கியமாக தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொண்டார்கள். இந்தப் போக்கு பின்பு மாறிவிட்டது. தமிழகத்தில் நாயகத்துதிபாடல் மனநிலையை வளர்த்துவிட்டதில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. இன்று, தமிழகத்தில் எல்லா கட்சிகளும், எல்லா அமைப்புகளும் நாயகத்துதிபாடலில் சிக்கி லயித்துக் கொண்டிருக்கின்றன. நாயகத்துதிபாடல் முன்நிறுத்தப்படும் எந்த இடத்திலும் ஆக்கப்பூர்வமான மாற்றம் நிகழாது. 


" யார் சொல்லியிருந்தாலும், 

எங்கு படித்திருந்தாலும், 

நானே சொன்னாலும், 

உனது புத்திக்கும், 

பொது அறிவிற்கும்,

பொருந்தாத எதையும் நம்பாதே ! " 

-  பெரியார் ❤


மேலும் படிக்க :

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !


Limelight (1952) !


சாப்ளின் என்ற மாமேதையின் இதுவரை பார்த்திராத திரைபடங்களுள் இதுவும் ஒன்று. நேற்று தான் பார்க்க வாய்ப்பு அமைந்தது. இவரது மற்ற திரைப்படங்களைப் போல இத்திரைப்படத்திலும் மனிதமே மேலோங்கி இருக்கிறது. சாப்ளினின் நடிப்பை மட்டுமல்ல அவரது திரைப்பட உருவாக்கத்தையும் யாராலும் பிரதியெடுக்க முடியாது. 


இவரது திரைப்படங்களை போட்டுக் காட்டி படத்தின் இயக்குநரும் இவர் தான், இசையமைப்பாளரும் இவர் தான், தயாரிப்பாளரும் இவர் தான் என்று சொன்னால் பல பேர் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு திரையில் தன்னை மட்டுப்படுத்தியே சித்தரித்து இருப்பார். இதுவும் ஒருவித யுக்தி தான் என்றாலும் திரையில் அப்படி தங்களைச் சித்தரிக்க விரும்ப மாட்டார்கள். திரையில் நடிகர் சாப்ளினை மட்டுமே நம்மால் காண முடியும், இயக்குநர் சாப்ளினோ, தயாரிப்பாளர் சாப்ளினோ தென்படமாட்டார். 


இயக்குநர் சாப்ளின் ஒரு Perfectionist. ஒவ்வொரு காட்சியும் கண்ணாடி போல அவ்வளவு திருத்தமாக இருக்கும். சாப்ளினால் சிரிக்க வைக்க மட்டுமல்ல அழ வைக்கவும் முடியும். தனது திரைப்படங்களில் பல இடங்களில் தற்கொலைக்கு எதிரான காட்சிகளைச் சேர்த்திருப்பார். தற்கொலையில் ஈடுபட முயற்சிப்பவர்களை தேற்றி இந்த வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்பவராக நடித்திருக்கிறார். 'சிட்டி லைட்ஸ் ' திரைப்படத்தில் தற்கொலைக்கு முயற்சிப்பவரிடம் ' Tomorrow also birds will sing ( நாளையும் பறவைகள் பாடும் ) ' என்று சொல்வார். எதை இழந்த பின்பும் வாழ்க்கை மிச்சம் இருக்கிறது ,எவ்வளவு பெரிய இழப்பையும் கடந்துவிட முடியும் என்ற நம்பிக்கையே உயிர்களைக் காப்பாற்றும். அதே போல Limelight - லிலும் ஒரு கதாப்பாத்திரத்தை தற்கொலையிலிருந்து காப்பாற்றி, நம்பிக்கையளித்து வாழ்க்கையை வாழ வைக்கிறார். தத்துவார்த்த ரீதியான பல வசனங்கள் இடம்பெற்றுள்ளன. எவ்வளவு புகழை அடைந்தாலும் Limelight தொடர்ந்து யார் மீதும் விழாது என்பதே Limelight. 


எக்காலத்திற்குமான கலைஞன் ❤️ !


மேலும் படிக்க :

எக்காலத்திற்குமான கலைஞன் !


K.A.தங்கவேலு - நகைச்சுவைச் சக்கரவர்த்தி !

மார்க் ஆண்டனி 🔥


திரைப்படம் ஆரம்பம் முதல் முடிவு வரை படுவேகமாக போவதால் நிறை குறை பற்றி யோசிக்கக் கூட நமக்கு நேரமில்லை. இடைவேளைக்கு கொஞ்ச நேரம் முன்பு" என்னங்க இன்னும் இடைவேளை விடலை. படம் பெரிய படமா?" என்று இணையர் கேட்டார். "படம் பெரியது அல்ல.‌ அந்த அளவிற்கு வேகமாக காட்சிகள் நகர்வதால் நமக்கு அப்படி தெரிகிறது " என்று பதிலளிக்க வேண்டியிருந்தது. இடைவேளையின் போது எங்களுக்கு முன்வரிசையில் இருந்த இளைஞர் தன் நண்பரிடம் " என்ன மாப்ள இப்பவே முழுப் படம் பார்த்த மாதிரி இருக்குது " என்றார். "எல்லோரும் நம்மைப் போலவேதான் உணர்ந்திருப்பார்கள் போல" என்று நினைத்துக் கொண்டே பாப்கார்ன் வாங்க நடக்க ஆரம்பித்தோம்.


ஒரு சிக்கலான கதையை சிக்கலில்லாமல் சொல்லி இருக்கிறார்கள். தமிழில் எப்படி இது சாத்தியம் என்று தேடும் போது தான் தெரிந்தது, திரைக்கதையை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் சேர்த்து அர்ஜுன் மற்றும் சவரிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து எழுதியிருக்கின்றனர் என்று. எவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும், தேர்ந்த நடிகர்கள் நடித்திருந்தாலும் திரைக்கதை சிறப்பாக அமையாவிட்டால் நல்ல அனுபவம் கிடைக்காது. உலகத் திரைப்படங்களிலும் இந்திய அளவில் கேரளத் திரைப்படங்களிலும் திரைக்கதையை இரண்டு மூன்று பேர் சேர்ந்து எழுதும் போக்கு இருக்கிறது.‌இப்போது தமிழிலும் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழ்த் திரையுலகின் இயக்குநர்களே நீங்கள் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் திரைக்கதையை இரண்டு மூன்று பேர்களோடு சேர்ந்து எழுதுங்கள். அப்போதுதான் நாங்கள் தப்பிக்க முடியும். 


திரைப்படம் முழுக்கவே டைமிங் வசனங்கள் அனல் பறக்கின்றன. நிறைய விசயங்களையும், நிறைய திரைப்படங்களையும் Troll செய்திருக்கிறார்கள். அதனால் திரைப்படம் முழுக்கவே கலகலப்பு நிறைந்திருக்கிறது. அடுத்ததாக நம்மை படத்துடன் ஒன்ற வைப்பது பின்னணி இசை. யாருடா இது ? இவ்வளவு சிறப்பா பின்னணி இசையமைத்திருப்பது என்று தேடிப் பாரத்தால் ஜி.வி.பிரகாஷ்குமார். நடிப்பதை விட இவர் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நாம் வெற்று இரைச்சலிலிருந்து தப்பிக்க முடியும். பின்னணி இசை படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவுகிறது. தேர்ந்தெடுத்த பழைய மூன்று பாடல்களும் ( பஞ்சு மிட்டாய் சேலை கட்டி..., அடியே மனம் நில்லுனா நிக்காதடி..., வருது வருது விலகு விலகு ஒரு வேங்கை வெளியே வருது...) நன்றாக பொருந்துகின்றன. மூன்று பாடல்களிலும் பெண் குரல், எஸ்.ஜானகி❤️. கடந்த ஒரு வாரமாக இந்த மூன்று பாடல்களும் தமிழகமெங்கும் தேடியெடுத்து கேட்கப்படுகின்றன. கடைசியாக தமிழில் சிறந்த பின்னணி இசையாக நினைவில் இருப்பது 'அசுரன்' . அந்தத் திரைப்படத்திற்கும் இசை ஜி.வி.பி.தான்.


ஜெயிலர் திரைப்படம் போல இந்தத் திரைப்படத்திலும் வன்முறை இருக்கிறது. ஆனால் எந்த இடத்திலும் உறுத்தவில்லை. ஜெயிலர் திரைப்படமெல்லாம் குழந்தைகளுடன் பார்க்கத் தகுதியே இல்லாதது. குரூர மனம் படைத்தவர்களால்தான் இவ்வாறு வன்முறையை(ஜெயிலர்) திரையில் காண்பிக்க முடியும். மாவீரன், ஜெயிலர், மார்க் ஆண்டனி என மூன்று படங்களை தொடர்ந்து திரையரங்கில் பார்த்தோம். இதில் ஜெயிலர் தான் குப்பை(வன்முறை அதிகம், திரைக்கதை சொதப்பல்,லாஜிக் மீறல்கள் அதிகம்). வன்முறையை நியாப்படுத்துவதை தமிழ் சினிமா கைவிட வேண்டும். வன்முறையைத் திரையில் காண்பிக்கும் போது பொறுப்புணர்வு வேண்டும். 


'ஆண்டனி'யாக இருந்தாலும் அவரின் உடலிலும் கருப்பணசாமி இறங்கும் அதாம்லே தமிழ்நாடு. நாட்டார் தெய்வங்கள் பேதங்களுக்கு அப்பாற்பட்டவை. பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் காவல் தெய்வங்களாகவே இருக்கின்றன. 80's ,90's kids களை மட்டுமல்ல 2k kids களையும் திராவிட பேரழகியான சில்க் ஸ்மிதா ஈர்த்திருக்கிறார் என்பதை திரையரங்கில் காண முடிந்தது.


ஆண்டனி விஷாலின் தோற்றம் துல்கர் சல்மானையே நினைவுபடுத்தியது. ஒரு காட்சியில் கூட விஷாலாக தோன்றவில்லை. அப்புறம் எஸ்.ஜே.சூரியா ரசிகர்களின் Pulse அறிந்து அட்டகாசப்படுத்தியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் லாஜிக்,கருத்து, கத்திரிக்காய் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. இது ஒரு Fantasy திரைப்படம் அவ்வளவு தான். இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉

மேலும் படிக்க :

கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

ஜெய்பீம் -அறத்தின் குரல் !


போர்களை நிறுத்துங்கள் !


19ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை போரின் வதைகளையும், வாதைகளையும், வலிகளையும் அதிகமாக அனுபவித்த இனம் யூத இனம். இன்று அதே யூத இனம் அடுத்த இனத்தை வதைக்கிறது. ஆதிக்க உணர்வு தான் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறது. யாராக இருந்தாலும் அதிகாரம் கைகளுக்கு வந்தவுடன் ஆதிக்க உணர்வு தோளில் ஏறி அமர்ந்து கொள்கிறது. இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் நிற்க வேண்டுமானால் நாம் பாலஸ்தீன மக்களின் பக்கமே நிற்க வேண்டும். 


எந்தவிதமான ஆதிக்கமாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்களும் , குழந்தைகளும் தான். நாம் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துவிட்டதாக சொல்லிக்கொள்ளும் இன்றைய சூழலிலும் உலகின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போர்கள் நடந்து வருவது மனித இனத்திற்கே அவமானம் . அன்றைய போர்களில் போரிற்கு தொடர்பில்லாத எளிய மக்கள் அவ்வளவாக பாதிக்கப்படவில்லை. ஆனால் இன்றைய போர்களில் எளிய மக்களே அதிகமும் கொல்லப்படுகின்றனர். 


எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் எந்த நேரத்தில் எங்கே குண்டு விழும் என்று தெரியாத அந்தப் போர்ச் சூழலை நினைக்கும் போதே அச்சமாகவும், பதைபதைப்பாகவும் இருக்கிறது. இரு தரப்பிலும் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐநா சபைக்கென்று கொஞ்சமாவது அதிகாரமும் மரியாதையும் இருந்தன. தற்போது எல்லாம் நீர்த்து போய் முதலாளித்துவத்தின் கண்துடைப்பு அமைப்பாக மாறிவிட்டது. அதே போல முன்பு உலகில் எங்கு போர் தொடங்கினாலும் முதல் குரலாக ஒலிப்பது அமைதி உடன்படிக்கைக்கு இரு தரப்பும் முன் வர வேண்டும் என்பது தான்‌. அதற்கு சம்மதிக்க மறுத்து போரைத் தொடரும் நாடுகள் மீது உடனடியாக பொருளாதார தடை விதிக்கப்படும். இப்போதெல்லாம் இப்படியான எந்தக் குரலும் ஒலிப்பதில்லை. அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்தும் யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை.


போர்க் குற்றம் புரியும் நாடுகளை வெளிப்படையாக ஆதரிக்கும் குரல்கள் மட்டுமே தற்போது கேட்கின்றன. மனித உயிர்களுக்கு எந்தவிதமான மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. இது தான் கூட்டுக்களவாணி முதலாளித்துவம். தற்போதைய சூழலில் உலகெங்கிலும் வலதுசாரிகளின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது . இது பூமிக்கும் மனித இனத்திற்கும் நல்லதல்ல. "எல்லோருக்கும் எல்லாம் " என்பதை எப்போதும் வலதுசாரிகள் ஏற்கமாட்டார்கள். வன்முறை யார் மீதும் எப்போது வேண்டுமானாலும் எந்த வடிவத்திலும், எந்தப் பெயரிலும் நிகழ்த்தப்படலாம் என்பதே கள நிலவரமாக உள்ளது. "அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி" என்கிறார் சாமுவேல் ஜான்சன். தேசபக்தி என்ற பெயரில் தான் நாடுகள் மற்ற நாட்டு மக்கள் மீது வன்முறையை ஏவி விடுகின்றன. எதற்கெடுத்தாலும் தேசபக்தியைத் தூக்கிப் பிடிப்பவர்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.எல்லாவற்றையும் விட மனிதமே பெரியது.அனைத்திலும் மனிதமே முன்நிறுத்தப்பட வேண்டும். 


தற்போதைக்கு உடனடியாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரும் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரும் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும். ஆதிக்க உணர்வு தான் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறது. மனிதர்களுக்கு ஆதிக்க உணர்வு மட்டும் இல்லையென்றால் பூமியெங்கும் அமைதி மட்டுமே நிலவும். உலகெங்கும் போர்ச்சூழலிருக்கும் மக்கள் விடுவிக்கப்பட்டு அமைதியாக வாழ வழிவகை செய்யப்பட வேண்டும். பூமியில் மனிதர்கள் சமநிலையை உருவாக்கத் தவறினால் இயற்கை தனது பாணியில் சமநிலையை நிச்சயம் உருவாகும்

மேலும் படிக்க :

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

வடகிழக்கு மாநிலங்களை காப்போம் !


தெற்கத்திக் கள்ளன் !


1988-ல் வெளிவந்த திரைப்படமாக இருந்தாலும் பிற்போக்கு கருத்துகளுடன் முற்போக்கு கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. விஜயகாந்திற்கு வெள்ளந்தியான கிராமத்து நாயகன் பாத்திரம். நவநாகரீக, திருமணத்தை வெறுக்கும் , ஆடம்பரத்தை விரும்பும் நகரத்து பணக்காரப்பெண் கதாப்பாத்திரம், ராதிகாவிற்கு. இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.இந்த இருவருக்காவும் மட்டுமே இத்திரைப்படத்தைக் காணலாம். விஜயகாந்த் தனது மிகையில்லாத நடிப்பால் அதிகமும் கவருகிறார்.


கள்ளன் என்ற பெயர்க்காரணம் விளக்கப்படும் இடம் சுவாரசியம். அதே போல கள்ளன் என கையெழுத்து போடும் இடமும். அங்கங்கே வரும் டைமிங் நகைச்சுவை வசனங்கள் அருமை. தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் வேட்டி சட்டையுடன் நடித்தவர் , விஜயகாந்தாகத்தான் இருக்கும். மலேசியா வாசுதேவன் வில்லனாக நடித்திருக்கிறார். மைனர், பண்ணையார் போன்ற வேடங்களில்தான் மலேசியா வாசுதேவன் அதிகமும் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் பாடிய' தில்லா டாங்கு டாங்கு...' என்ற பாடலும் இடம்பெற்றிருக்கிறது. 


நிறைய நடிகர்கள் இருந்தும் அவர்கள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பது குறையாக இருக்கிறது. 


YouTube - ல் காணக் கிடைக்கிறது.  


மேலும் படிக்க  :

மனிதரில் இத்தனை நிறங்களா !

அவள் அப்படித்தான்! 

உதிரிப்பூக்கள் !


Daredevil Musthafa - Fantastic Making !


மக்களிடையே மதவாதிகளால் தொடர்ந்து சிறுபான்மையின வெறுப்பை விதைத்துக் கொண்டிருக்கும் கன்னட மண்ணிலிருந்து ஒரு அற்புதமான திரைப்படம். இஸ்லாமியர்கள் குறித்தான பொதுப்பார்வைக்கு முஸ்தபா எனும் கதாபாத்திரத்தின் மூலமாக பதிலளித்து இருக்கிறார்கள். ரொம்பவெல்லாம் அவர்கள் மெனக்கெடவில்லை.தங்களின் மேதைமையை மறந்து மிக எளிய மக்களின் மனநிலையை திரையில் கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆனால் அது தான் கடினமும் கூட.‌ 


சின்ன சின்ன விசயங்கள் கூட அழகாக கவனப்படுத்தப்பட்டுள்ளன. பார்ப்பன மனநிலையும் விவரிக்கப்பட்டிருக்கிறது. ஏன் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டைத் தேர்ந்தெடுக்கிறார்கள். என்பதற்கான மிகப் பொருத்தான விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் ஒருவரை ஒருவர் தொட்டு விளையாட வேண்டிய அவசியம் இல்லை. எப்படியான மனநிலை பாருங்கள். 


ஒவ்வொரு விசயத்தையும் வெற்றுக்கூச்சல்கள் இல்லாமல் இயல்பாக சொல்லியிருப்பதுதான் இத்திரைப்படத்தின் பலம். இடையிடையே வரும் அனிமேஷன் காட்சிகள் அழகு. படத்தின் நிளத்தை குறைக்க உதவுகின்றன. இசையும் திரைப்படத்திற்கு இடையூறு இல்லாமல் பொருத்தமாக அமைந்திருக்கிறது. நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.


Poornachandra Tejaswi என்கிற கன்னட எழுத்தாளிரின் சிறுகதையையே திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள். சிறுகதையின் தலைப்பான ' Daredevil Musthafa' என்பதையே திரைப்படத்திற்கும் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். Poornachandra Tejaswi -ன் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்து இருக்கிறார்கள். 


Shashank Soghal இயக்கியிருக்கும் முதல் திரைப்படமிது. தனது பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். எந்தத் திரைப்படமானாலும் திரைக்கதை முக்கியம். இயக்குநருடன் சேர்ந்து நான்கு பேர் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். அதனாலேயே மனதிற்கு நெருக்கமான படைப்பாக மாறியிருக்கிறது. ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற இவர்களது எண்ணம் நிறைவேறியிருக்கிறது. கூட்டுழைப்பின் வெற்றி. 


தேர்ந்த படைப்பைக் கொடுத்ததற்கு படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தத் திரைப்படத்திற்கு தற்போதைய காங்கிரஸ் அரசு முழுமையான வரிவிலக்கு அளித்திருக்கிறது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்படைப்பு இருக்கிறது. கன்னட மொழியில் ஆங்கிய சப்டைட்டிலுடன் காணலாம். நிறைய பேர் நல்ல திரைப்படமாக இருந்தாலும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டால்தான் பார்க்கிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும். எந்த மொழியில் இருந்தாலும் பார்த்துப் பழகும் மனநிலைக்கு நாம் வர வேண்டும். எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம். FeelGoodMovie ❤️


Aeysha, Sulaikha Manzil  இப்போது Daredevil Musthafa என தொடர்ந்து மூன்று வாரங்களாக இஸ்லாமிய வாழ்வை முன்வைக்கும் திரைப்படங்களையே பார்த்தாச்சு. 

மேலும் படிக்க :

FANDRY - மனதிற்கு நெருக்கமான படைப்பு !

ADRISHYA JALAKANGAL !

Modern Love Chennai !


தமிழ் சினிமாவையும் காதலையும் பிரிக்கவே முடியாது. இன்று வரை மிகவும் அரிதாகவே காதல் இயல்பான ஒன்று என்று முன்வைத்த திரைப்படங்கள் வந்திருக்கின்றன. வெற்றுக் கூச்சல்களும் , மிகைப்படுத்தல்களும், Stalking-களும், நாயக துதிபாடல்களுமே இங்கு காதல் திரைப்படங்களில் முன்வைக்கப்பட்டன. இப்படியான சூழலில் இயல்பான காதல்களை வெளிப்படுத்தும் Anthology யாக 

வெளிவந்திருக்கும் ' Modern Love Chennai ' முக்கியத்துவம் பெறுகிறது. 


இந்த Anthology-ல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்றாலும் நிறைய பழைய  கிளிஷேக்கள் கிழித்து எறியப்பட்டிருக்கின்றன. இந்தத் தொடரின் வெற்றி என்பது கூட்டுழைப்பின் வெற்றி. ஒவ்வொரு பகுதிக்கும் திரைக்கதை தயார் செய்த பிறகு இயக்குநர்களை தேர்ந்தெடுத்திருப்பார்கள் போல. இசை, ஒளிப்பதிவு, வசனங்கள், கதைகள் நடைபெறும் இடங்கள் என அனைத்தும் சிறப்பு.மொத்தத்தில் நல்லதொரு உருவாக்கம். தியாகராஜன் குமாரராஜா குழுவினருக்கு வாழ்த்துகள்.


இந்த Anthology முழுக்கவே  பெண் கதாப்பாத்திரங்களுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெகுஜன சினிமாவில் இது சாத்தியமில்லை. வெவ்வேறு விதமான பெண்களின் மன உணர்வுகள் திரையில் காட்சிகளாக விரிகின்றன.  


இந்த ' Modern Love Chennai ', யாரையும் காதலிக்காமல் இருப்பவர்களை காதலிக்கத் தூண்டும், காதலித்துக் கொண்டிருப்பவர்களை மேலும் நெருக்கமாக்கும். Feel Good Anthology.


The New York Times நாளிதழில் 'Modern Love ' பகுதியில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே அடிப்படையாக வைத்து இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருப்பதால்தான் மனதிற்கு இவ்வளவு நெருக்கமாக இருக்கிறதோ ! 


முதலில் 'Modern Love' என்ற பெயரில் ஆங்கிலத்தில் 2019ல் வெளியாகியிருக்கிறது. பிறகு 'Modern Love Mumbai ' மற்றும்  ' Modern Love Hyderabad ' ஆகியவை 2022ல் வெளியாகி இருக்கின்றன. இப்போது 2023ல் 'Modern Love Chennai ' . இனி அடுத்து மற்ற நகரங்களின் பெயர்களிலும் வரலாம். காதலுக்கு எல்லைக்கோடுகள் கிடையாது தானே ' Modern Love' க்கும் ❤️.


மேலும் படிக்க :

அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !

EXTRAORDINARY ATTORNEY WOO - FEEL GOOD SERIES !



Fandry - மனதிற்கு நெருக்கமான படைப்பு !


நாகராஜ் மஞ்சுலேவின் Sairat திரைப்படம் பார்த்த போதே இந்த Fandry திரைப்படத்தையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது தேடிய போது பார்க்கக் கிடைக்கவில்லை. 'அயலி' பார்ப்பதற்காக Zee5 செயலிக்கு சந்தா செலுத்தும் போது நாகராஜ் மஞ்சுலேவின் நிறைய திரைப்படங்கள் Zee5 தளத்தில் இருப்பது தெரிய வந்தது கூடவே Fandry -யும். அப்போதே அயலி பார்த்தாலும் இப்போது தான் Fandry பார்க்க முடிந்திருக்கிறது. காத்திருப்பு வீண் போகவில்லை.


திரைப்படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை தேர்ந்த கதை சொல்லல். சாதிய பாகுபாடுகள் காட்சிகளாக மட்டுமே விரிகின்றன. எந்த இடத்திலும் பிரச்சார நெடி இல்லை. ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து கல்வி கற்க வரும் ஒரு மாணவனின் அக உணர்வுகளையே இத்திரைப்படம் விவரிக்கிறது. குறியீடுகள் திரைப்படமெங்கும் நிறைந்திருக்கின்றன.கதையில் இடம்பெற்ற மனிதர்கள் வாழும் நிலப்பரப்பை நெருக்கமாக உணர வைக்கிறது, ஒளிப்பதிவு. இந்தத் திரைப்படத்தில் மிகவும் ரசித்த விசயம், பின்னணி இசை❤️. Alokananda Dasgupta , மிகவும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். தேவையான இடங்களில் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கும் இசை அவ்வளவு இதமாக இருக்கிறது. 


"நாகராஜ் மஞ்சுலேவின் திரைப்படங்களில் அரசியலை விட அழகியலே அதிகம் இருக்கிறது " என்பது அவர் மீதான விமர்சனமாக இருக்கிறது. இது மிகவும் அபத்தமான வாதம். அரசியலுடன் அழகியலும் சேரும் போதுதான் ஒரு படைப்பு முழுமையடைகிறது. அப்படியே அழகியல் இல்லாமல் 100 சதவீத அரசியல் படம் எடுத்தா மட்டும் உடனே அந்த அரசியலை எல்லோரும் ஏற்றுக் கொள்ளவா போறாங்க‌? இல்லையே. மாற்றம் மெதுவாகவே நிகழும்.


நாகராஜ் மஞ்சுலேவின் கதை சொல்லும் பாணி மிகவும் பிடித்திருக்கிறது. இனி அவரது மற்ற திரைப்படங்களையும் சந்தா முடியும் முன் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க :

சேத்துமான் !

கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !





The Elephant Whisperers !


ஆவணப்படுத்துதல் என்பது முக்கியமான செயல்பாடு.இதில் நம் அனைவருக்கும் பங்கிருக்கிறது. ஆவணப்படுத்துதல் என்பது எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஆவணப்படுத்தல் மூலம் அறிவும் வரலாறும் பதிவாகிறது. இது ஒரு தொடர் செயல்பாடு.ஆனால் இந்த விசயத்தில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். 

ஆவணப்படங்கள் உலகெங்கும் கவனம் பெற்றிருந்தாலும் இந்தியச் சூழலில் இன்னமும் போதிய கவனம் பெறவில்லை. இதன் முக்கியத்துவத்தையும் நாம் உணரவில்லை. மற்ற இயக்குநர்கள் வெளியே தெரிந்த அளவிற்கு இந்திய ஆவணப்பட இயக்குநர்கள் வெளியே தெரியவில்லை. இப்படியான சூழலில் ' The Elephant Whisperers ' ஆவண குறும்படத்திற்கு கிடைத்திருக்கும் விருதானது ஆவணப்படங்கள் குறித்தான புரிதலை கொஞ்சமேனும் அதிரிக்கும். இயற்கையையும், இயற்கையுடன் இணைந்த வாழ்வை வாழும் காட்டின் பாதுகாவலர்களையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ஆவண குறும்படத்திற்கு விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 


ஆசியாவிலேயே பழமையான யானை முகாம்களில் ஒன்றாக இருக்கும் முதுமலை யானைகள் முகாம் பற்றியோ அதன் செயல்பாடுகள் பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு இதற்கு முன்பு தெரியாது. இந்த ஆவண குறும்படம் அதை நமக்கு தெரியப்படுத்தி இருக்கிறது. எந்த உயிரினமும் மனிதர்களாகிய நாம் கொடுக்கும் அன்பை பெற்றுக்கொண்டு திருப்பிக் கொடுக்கின்றன. சமீபத்தில் கூட உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஆரிப் என்பவர், காயமடைந்த நாரை ஒன்றை குணப்படுத்தி இருக்கிறார். குணமாகி ஓராண்டான பிறகும் அந்த நாரை அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவர் கூடவே பறந்து செல்வதை தீக்கதிர் வெளியிட்ட ஒரு காணொளியில் காண முடிந்தது.


உலகெங்கிலுமே பல்வேறு விதமான உயிரினங்கள் மனிதர்கள் வாழுமிடங்களிலும், மிருக காட்சி சாலைகளிலும் வளர்க்கப்படுகின்றன. அனைத்துமே அன்பிற்கு கட்டுப்பட்டவனவாகவே இருக்கின்றன. " யானைக்களுக்கு உணர்ச்சிகள் அதிகம், புத்தியும் அதிகம். ஆனாலும் அது ஒரு காட்டு மிருகம் என்பதை அறிந்தே இருக்கிறோம் " என்று பொம்மன் இந்த குறும்படத்தின் ஓரிடத்தில் சொல்கிறார். இந்தப் பார்வை ரொம்ப முக்கியம். " எல்லாவற்றையும் நாங்களே சொல்லிதர முடியாது.அது யானை , யானைக்கூட இருந்துதான் கத்துக்கணும்" என்கிறார், பெள்ளி. இப்படியான புரிதல் இருப்பதால்தான் தாய் யானையைப் பிரிந்த யானைக்குட்டிகளை இவர்களால் வளர்த்தெடுக்க முடிந்திருக்கிறது. 


பொம்மன் மற்றும் பெள்ளியின் வெள்ளந்தியான முகங்களைக் காண்பதும், அவர்களின் வாஞ்சையான பேச்சைக் கேட்பதும் பெரும் மகிழ்வைக் கொடுக்கக் கூடியவை. இவர்கள் வளர்த்த யானைகளான ரகு மற்றும் பொம்மியுடனான இவர்களது உரையாடல்கள் இன்னமும் சுவாரசியமானவை. காட்டின் பாதுகாவலர்கள் (பழங்குடியினர்) குறித்தும், அவர்களுக்கிருக்கும் காடு பற்றிய புரிதல்கள் குறித்தும் , முதுமலை யானைகள் முகாம் குறித்தும் ஒரு சிறு துளி தான் ஆவண குறும்படமாக உருவாகியிருக்கிறது. அந்தச் சூழலிலேயே இன்னும் பதிவு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. 


இயக்குநர் கார்த்திகியும் மற்றும் குழுவினரும் இரண்டு ஆண்டுகளாக முதுமலை காட்டில் தங்கி இந்த ஆவண குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் காட்டில் பதிவு செய்த பலவற்றை இக்குறும்படத்தில் இணைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவை காட்சிக்கு நெருக்கமாக இருந்தாலும் போக போக அவை இடையூறு தருபவையாக இருக்கின்றன. மற்றபடி நல்லதொரு உருவாக்கம்.


பொதுவாகவே விருது என்பதில் பல்வேறு விதமான அரசியல்கள் இருந்தாலும் விருது கிடைக்கும் போது குறிப்பிட்ட படைப்பு வெளியே தெரிய வரும், கூடவே படைப்பாளியும் தெரிய வருவார். ஒரு சில படைப்புகள் தான் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விருது பெற்ற கவனத்தால் பொம்மன், பெள்ளி உள்ளிட்ட 91 யானை பாகன்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டிருக்கிறது‌. இது மட்டுமல்லாமல் 91 பாகன்களுக்கும் தலா பத்து இலட்ச ரூபாய் அவர்கள் விருப்பப்படி வீடு கட்டிக்கொள்ள தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. காட்டு மனிதர்களை நாட்டு மனிதர்கள் கெடுக்காமல் இருந்தால் சரி.


இயக்குநர் கார்த்திகி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉. 


மேலும் படிக்க :

Extraordinary Attorney Woo - Feel Good Series !

Life in Colour with David Attenborough - Documentary !

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms