Monday, July 25, 2011

வாழ்க்கை ஒரு போராட்டம் !

போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது . நாம் பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கிறது . ஏன் நாம் பிறப்பதே ஒரு போராட்டம் தானே . லட்சக்கணக்கான விந்தணுக்களுடன் சண்டையிட்டு , போராடி தான் நமக்கான இருப்பை , பிறப்பை உறுதி செய்துள்ளோம் .போராட்டத்தில் பிறந்து , போராட்டத்தில் வளர்ந்து , போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை . நாம் இன்று போராட்டமே  இல்லாத வாழ்க்கையை மட்டுமே வாழ நினைக்கிறோம் . இது எப்போதும் சாத்தியமில்லை . பிறப்பதற்கே  லட்சக்கணக்கான அணுக்களை வென்ற நம்மால் வாழ்வதற்கான  போராட்டத்தில் வெல்ல முடியாதா என்ன ?!

வீதியில் நின்று போராடுவதும் , நாட்டுக்காக போராடுவதும் மட்டும் போராட்டம்   அல்ல . உயிர் வாழ்வதற்கான போராட்டம் தான் உண்மையான போராட்டம் . இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் .கடந்த வாரம் Discovery யில் ஒரு நிகழ்வை ஒளிபரப்பினார்கள் . அலாஸ்காவில் வாழும் பனிக்கரடிகளையும் , சாலமன் மீன்களைப் பற்றிய ஒளிபரப்பு அது . பனி காலம் முடிந்த நிலையில் தங்களுக்கு வேண்டிய ( பிடித்தமான ) உணவைப்பெற நதிக்கரைக்கு வருகின்றன கரடிகள் . சாலமன் மீன்கள் , கரடிகள் இருக்கும் இந்த நதிப்பகுதியைக் கடந்தால் தான் தங்களது இனப்பெருக்கத்தை நடத்த முடியும் . இல்லையென்றால் கரடிகளுக்கு உணவாக வேண்டியது தான் . 

ஒரே நதிக்கரை இரண்டு இனங்களின் வாழ்க்கைப் போராட்டம் . கரடிகள் வருகின்றன மீன்களைப் பிடிக்கின்றன , பனிக்காலத்திற்கு வேண்டிய கொழுப்பைச் சேமிக்கின்றன . குட்டிகளுடன் வரும் பெண் கரடிகள் , குட்டிகளை ஒளித்து வைத்துவிட்டு ஆண் கரடிகள் இல்லாத இடத்தில் சாலமன் மீன்களை தனக்காகவும் , தன் குட்டிகளுக்காகவும் வேட்டையாடுகின்றன . ஆண் கரடி பார்த்து விட்டால் உறவுக்கு கட்டாயப் படுத்தும் . இடையுறாக இருக்கும் குட்டிகளையும் கொன்று விடும் . அதனால் பெண் கரடிகள், மிகவும் எச்சரிக்கையாக  இருக்க வேண்டிய காலகட்டம் இது . கரடிகளிடமிருந்து தப்பித்த சாலமன் மீன்கள் உகந்த இடத்திற்குச் சென்று  தங்கள் இனப்பெருக்கதைச் செய்கின்றன . பெண் மீன், தன் வால் பகுதியால் பள்ளம் தோண்டி  முட்டையிடுகிறது . ஆண் மீன், முட்டைகளின்  மீது  விந்துவைப் பீய்ச்சி அடிக்கிறது . உரிமையில்லாத மற்றொரு ஆண் மீனும் முட்டைகளின்  மீது விந்துவைப் பீய்ச்சி அடிக்கிறது . கொஞ்ச காலம் அடை காக்கும் பெண் மீன் பிறகு இறந்து விடுகிறது . பிறகு முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பிறந்து தங்கள் போராட்டத்தைத் தொடருகின்றன .

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் . நேர்மையாக இல்லாமல் இருப்பதும் ஒரு போராட்டம் தான் . ஏனென்றால் எல்லா நேரங்களிலும் நேர்மையாக இருப்பதற்கான சூழலும் , எல்லா நேரங்களிலும் நேர்மையாக இல்லாமல் இருப்பதற்க்கான சூழலும் யாருக்கும் அமைவதில்லை .தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்திக்கொள்ள போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது . அதற்கான பலன்கள் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அவர்கள் மட்டுமே அடைவர் . உண்மைக்காக , நீதிக்காக , நேர்மைக்காக , உரிமைக்காக,மண்ணுக்காக  என்று நாம் போராட வேண்டியுள்ளது .

சமீபத்தில் இங்கிலாந்தில் 11 வயதில் கடத்தப்பட்டு ஒருவனிடம்  16 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட  பெண்ணிடம் , "எப்படி இவ்வளவு கொடுமைகளையும் சகித்து கொண்டீர்கள் ? " என்று கேட்டதற்கு " எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்ற நினைப்பு தான் காரணம் . அவ்வப்போது நான் இருக்கும் கொடுமையான சூழ்நிலையை மறந்து விடுவேன் " என்று கூறினார் . இத்தனைக்கும் சரியான உணவு கிடையாது . 14 வயதிலேயே தனது பிரசவத்தை  தானே பார்த்துக்கொண்ட கொடுமை வேறு . தன் குழந்தை தனக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததாகவும் குறிப்பிட்டார் . மறதி தான் ,நம் வாழ்கையின் பெரும் துயர்களை மறக்கச் செய்கிறது .எத்தனையோ போராட்டங்கள் இருந்தாலும் உயிர் வாழ்வதற்கான போராட்டம் ,மற்ற அனைத்து போராட்டங்களையும் வென்று விடுகிறது .

நல்லதை நினைத்தே போராடுவோம் !



முகப்பு 


...............................................................................................

Monday, July 11, 2011

இன்று தெற்கு சூடான் , நாளை தமிழ் ஈழம் ...!

ஜூலை 9 ஆம் நாள் தெற்கு சூடான் தனி நாடாக உதயமாகியுள்ளது . 50 ஆண்டு காலப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . யாரும் யாரையும் அதிக காலம் அடக்கியாள முடியாது . எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் போராட்டம் வெடிக்கும் என்பது வரலாறு . இதற்கு தெற்கு சூடானும் விதிவிலக்கல்ல,  தமிழ் ஈழமும் விதிவிலக்கல்ல . சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க தெற்கு சூடான் கொடுத்த விலை "20 இலட்சம் மனித உயிர்களும் 50 வருட நிம்மதியும் ". தங்கம் , வைரம் போன்ற கனிம வளங்களும் , விவசாயம் செய்வதற்கு மிகச்சிறந்த சூழ்நிலையும் தெற்கு சூடானுக்கு கிடைத்துள்ளது . புதிய ஆட்சியாளர்கள் கையில் உள்ளது தெற்கு சூடானின் எதிர்காலம். 

மனிதனால் மனிதன் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் அனைவரும் துரோகிகள் தான் . இந்த துரோகிகள் பட்டியலில் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் வரும் . இலங்கை ஒரு எண்ணெய் வளம் மிக்க நாடாக இருந்திருந்தால் அமெரிக்காவின் நிலையே வேறுவிதமாக இருந்திருக்கும் . நம் இனம் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்த தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாமெல்லாம் இனத்துரோகிகள் . நமக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது .

ஈழத்தின் இன்றைய நிலை மிகவும் கொடியது . போரை விட போருக்குப் பிறகான வாழ்க்கை தான் மிகக் கொடியது என்பது வரலாறு .ஈழப் போரில் இறந்த மாவீரர்களை விட அதிக துன்பங்களை இன்று எஞ்சியிருக்கும் நம் இனம் சந்திக்கிறது . மண்,உடைமை , உரிமை ,உறவுகள் , உறுப்புகள் , மானம் , சுதந்திரம்,என்று அனைத்தையும் இழந்து இனி இழப்பதற்க்கு எதுவுமில்லை என்ற நிலையில் தான் இருக்கிறது நம் இனம் . தினமும் துன்பங்களும் துயரங்களும் மட்டுமே மிஞ்சி இருக்கிறது . சொந்த மண்ணில்  எந்தவித உரிமைகளும் இல்லாமல் வாழ்வது மிகவும் கொடுமை . இந்நிலை நிச்சயம் மாறும் .

இந்தச்சூழ்நிலையில் ஒரே ஆறுதல் தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள் . ராஜபக்சேவை கூண்டில் ஏற்றவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டுவரவும் கொண்டுவரப்பட்ட தீர்மானம் சிறந்த ஒன்று . ஈழத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் வாழ்ந்து வரும் நம் இனம் இதுவரை சிந்திய கண்ணீரும் துடைக்கப்பட இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி .தமிழகத்தில் உள்ள  ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் இனி அனைத்து  உரிமைகளும் கிடைக்கும் . மேற்கத்திய நாடுகள் நம் நலனில் அக்கறை கொண்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது . அனைத்து நாடுகளின் கவனத்தையும்
நாம் பெற வேண்டும் .

மனிதனால் மனிதன் கொல்லப்படுவதை தடுக்கவே  முடியாதா ? மனிதன் என்று அடுத்தவன் உடைமைக்காக சண்டை போட ஆரம்பித்தானோ அன்றே மனிதனால் மனிதன் இறப்பது நிகழ்ந்து இருக்க வேண்டும் . காடுகளில் வாழ்ந்த போது அடுத்த மனிதன் வேட்டையாடிய உணவைப் பறிக்கவும் , அடுத்தவனின் பெண் துணையைப் அடையவும் , பிறகு மன்னராட்சி காலங்களில் மற்ற நாடுகளின் செல்வங்களைக் கொள்ளையடிக்கவும் , நாட்டை விரிவு படுத்தவும் , தன் பலத்தை நிருப்பிக்கவும் என்று மனிதனால் மனிதன் கொல்லப்படுவது தொடர்ந்து கொண்டே வந்தது . இன்றைய இயந்திர வாழ்க்கையில் நம் மனமும் கல்லாகிப் போனது . சக மனிதன் கொல்லப்படுவது இன்று மிகவும் சாதாரணம் . நம்மை ஆளும் உலக அரசுகளும் , ஊடகங்களும் மனிதனால் மனிதன் கொல்லப்படுவதை தடுக்கவே இல்லை . மாறாக இன்றும் போர் என்ற பெயரில் நிறைய மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள் . தீவிரவாதிகள் தங்களின் பலத்தைக் காட்ட பயன்படுத்துவது மனித உயிர்களைத்தான் . மனித உயிர்கள் மட்டுமல்ல மற்ற உயிரினங்களும் கொல்லப்படுவது நம் வாழும் பூமிக்கு நல்லதல்ல . நம் பூமி எல்லோருக்கும் சொந்தம் !

மனித இனம் என்பதிலிருந்து பிரிந்த இனங்களின் எண்ணிக்கை மிக அதிகம் . வாழும் சூழ்நிலை  , உணவு, கலாச்சாரம் , பண்பாடு ,மதம் , முக்கியமாக மொழி இவற்றை மையமாக வைத்து பல்வேறு மனித இனங்கள் இன்று எஞ்சியிருக்கின்றன . பல இனங்கள் அழிந்து விட்டன . நாம் எல்லோரும் ஆப்பிரிக்காவில்  இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது . இன்று எஞ்சியிருக்கும்
இனங்களில் ஒன்று தமிழினம் ( முன்பு , திராவிட இனம் ). இந்த இனம் தமிழ் மொழி பேசும் ஆனால் தமிழினம் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் . அழிக்க முடியாத களங்கம்  இது . ஆனாலும்  "வலுத்தது நிலைக்கும்" என்பது போல இன்றும் நிலைத்து நிற்கிறது . இனியும் நிற்கும் . 

சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை உயிர்த்து எழுமாமே அது போல நம் தமிழ் ஈழமும் உயிர்த்து எழும் . எத்தனை முறை அழித்தாலும் மீண்டும் மீண்டும் எழும் . காலத்தை நான் மிகவும் நேசிக்கிறேன் . காரணம் ,
காலம்தான் நம் வாழ்க்கையின் ஆற்ற முடியாத அத்தனை துயரங்களையும் , ரணங்களையும் ஆற்றுகிறது .நமது துயரையும் நிச்சயம் ஆற்றும் . யாரும் யாரையும் நீண்ட காலம் அடக்கியாள முடியாது .

தமிழக சட்டமன்றத்தில் தமிழ் ஈழம் மலர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் .இலங்கையில் ஈழம் அமைய  வாக்கெடுப்பு நடத்த தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும் . ஈழம் அமைவதில் மிகவும் கொஞ்சப் பேருக்கு விருப்பம் இல்லை . அவர்கள் பல்வேறு விதமான காரணம் சொல்கிறார்கள் . அதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை . கூட்டுக்குடும்பம் நல்லது தான் அதனால் அனைவரும் நலமாக இருக்கும்வரை . நலன்கள் பாதிக்கப்படும் போது தனிக்குடும்பமே சிறந்தது . இது குடும்பத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பொருந்தும் .

இலங்கையில் அழிக்கப்பட்டது தமிழினம் மட்டும் அல்ல , மனித இனமும் தான் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டும் . இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின்
ஆதரவையும் பெற வேண்டும் . ஒட்டுமொத்த உலகமும் தமிழ் ஈழம் அமைய குரல் கொடுக்கும் வகையில் நம் செயல்பாடுகள் அமைய வேண்டும் .வாக்கெடுப்பு நடத்த வேண்டும் . தமிழ் ஈழம் மலர வேண்டும் .

ஈழத்தில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் நாள் தொலைவில் இல்லை !


மேலும் படிக்க:

 முகப்பு 

 காங்கிரஸை அழிப்போம் !
...............................

Monday, July 4, 2011

அற்புதங்களும் ஆச்சரியங்களும் !

எண்ணிலடங்காத அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தது தான் நம் வாழ்க்கை . ஒவ்வொரு நொடியும் அற்புதம் தான் . நம் வாழ்க்கை, மீண்டும் சந்திக்க முடியாத நிமிடங்களில் அடங்கியிருக்கிறது . ஆனால் , இதை எல்லா நேரங்களிலும் உணர முடியாத நிலையில் தான் நம் பயணம் இருக்கிறது . நம்மைச்சுற்றி தினமும் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்திய ஆச்சரியம் பத்மநாபசாமி கோவில் .

அனந்த பத்மநாபசாமி கோவில் , கேரளாவில் புகழ்பெற்ற விஷ்ணு கோவில் .இது , விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று . இதுவரை இந்தக் கோவிலைப்பற்றி தெரியாதவர்கள் கூட இப்போது தெரிந்து கொண்டிருப்பர் . புதையலைத் தேடி அலையும் பல கௌ-பாய் படங்கள் பார்த்திருப்போம் . அதையெல்லாம் மிஞ்சும் வகையில் இருக்கிறது இந்தக்கோவிலின் பாதாளப் புதையல் . அள்ள அள்ள தங்கம் . ஓரே வாரத்தில் உலகின் பணக்கார கடவுளான திருப்பதி பாலாஜியின் சொத்து மதிப்பை மிஞ்சி விட்டார் இந்த பத்மநாபசாமி.
அந்தப் பாதாள அறையில் இறுதி 8 இடங்களுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது  . இன்னும் எவ்வளவு அதிசயங்கள் வெளியே வருமோ ? தெரியாது . 
இன்றும் தஞ்சை பெரிய கோவிலின் அதிசயங்கள்  தொடர்ந்து கொண்டிருக்கின்றன . நம் முன்னோர்களின் திறமையைக் கண்டு ஒவ்வொரு நாளும் பெருமை கொள்கிறோம் . எந்தவிதமான தொழில்நுட்ப வசதியும் இல்லாத  காலகட்டத்தில் அவர்களால் இவ்வளவையும் செய்ய முடிந்திருக்கிறது . வாழ்க்கையைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் . அடுத்த வாரமே இன்னொரு கோவில் முதலிடத்தைப் பிடித்தாலும் பிடிக்கலாம் .

வரலாறு மிகவும் சுவாரசியமானது . நாம் இன்று பயன்படுத்தும் அநேக பொருட்கள்  கடந்த 100 வருடங்களுக்குள் கண்டுபிடிக்கப் பட்டவையாக இருக்கும் . அடுத்த 100 வருடங்கள் கழித்து இவை கண்டிப்பாக இருக்காது . ஆனால் , ஒரு சில பொருட்கள் காலம் கடந்தும் தனக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ளும் . அந்தப் பொருட்களின் நீட்சி தான் வரலாறாக மாறுகிறதோ என்னவோ ! . மண்ணோடு மண்ணாக கலந்துவிட்ட பொருட்களுக்கு வரலாறு இல்லை . 

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்  கொண்டாடப்பட வேண்டியது . ஆனால் , நமக்கு அந்த கொண்டாட்ட மனநிலை தொடர்ந்து வாய்ப்பதில்லை . நம் நாகரீக வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டாட்ட மனநிலையில் இருப்பது மிகவும் கடினம் . நாகரீகம் தோன்றாத காலத்தில் இந்த கொண்டாட்ட மனநிலை அதிகமாக இருந்து இருக்கும் . நாகரீகம் தோன்றியவுடன் பிரிவினைகள் அதிகமாகி விட்டன . வலுத்தவன் மட்டுமே எல்லா நலன்களையும் பெற்றான் . மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னர்களுக்கு மட்டுமே அதிகபட்ச சுதந்திரம் இருந்தது . ஜனநாயக ஆட்சியில் மக்களாகிய நமக்குத்தான் அதிக உரிமை இருக்க வேண்டும் . ஆனால் , உண்மையில் நிலைமை  அப்படியில்லை . இன்றும் ஏறக்குறைய மன்னராட்சி போலவே இருக்கிறது நம் ஜனநாயகம் . ஒருவேளை இது மன்னராட்சியின் நீட்சியாக இருக்குமோ !

நம் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது . நம் சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில்  நமக்குப்பிடித்த விசயம் நிகழும் போது நம் மனம் துள்ளிக் குதிக்கிறது . உதாரணமாக, அசாதாரண சூழ்நிலையில்  நமக்கு மிகவும் பிடித்த , நீண்ட நாட்களாக கேட்க வேண்டும் என்று எண்ணிய ஒரு பாடல் ஒலிக்கும் போது நம்மை அறியாமலேயே நாம் கொண்டாட்ட மனநிலைக்கு இடம் பெயர்ந்து  விடுகிறோம் . வாழ்க்கை ஒரு முறை தான் . அதனால் , முடிந்த அளவுக்கு  வாழ்க்கையைக் கொண்டாடுவோம்.

அடுத்த நொடி இந்த உலகம் தரப்போகின்ற  அற்புதங்களும் ஆச்சரியங்களும் ஏராளம் !

மேலும் படிக்க  :



..........................................

ஜூலை 2011 - 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பது பொய் !

இந்த ஜூலை ( 2011 ) மாதத்தில் 5 வெள்ளி , 5 சனி , 5 ஞாயிறு கிழமைகள் வருகின்றன .இது , 823  ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும் என்பது சுத்தப் பொய் . ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு  பிறகும் இவ்வாறு வருகிறது . இதே மாதிரியான ஜூலை 2005 ஆம் ஆண்டு வந்தது , அடுத்து  ஜூலை 2016 ஆம் ஆண்டு இதே போன்ற ஜூலை வரவுள்ளது . பொதுவாக எந்த மாதத்தில் 31 நாட்கள் வருகின்றனவோ அந்த மாதத்தில் அடுத்தடுத்த 3 நாட்கள் 5 முறை  வரும் . இதில் எந்த அதிசயமும் இல்லை .

ஜூலை 2005 :



ஜூலை 2016 :


நாட்காட்டி 2011 :


உதாரணமாக 2011 நாட்காட்டியைப் பாருங்கள் . எந்த மாதத்தில் எல்லாம் 31 நாட்கள் இருக்கின்றதோ அந்த மாதத்தில் அடுத்தடுத்த 3 நாட்கள் 5 முறை வருவதைக் காணமுடியும் .

மேலும் படிக்க :

முகப்பு 

................................................

Saturday, June 25, 2011

செல்போன் சேவை நிறுவனங்களின் பகல் கொள்ளை !

பலவிதமான கொள்ளைக்காரர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . நாளுக்கு நாள் இவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது . ஒருவேளை 2012 ல் உலகம் அழிந்து விடுமோ ?  தெரியாது . அரசியல் கொ.கா. , ஆன்மீக கொ.கா.,இயற்கை கொ.கா., உலகமயமாக்கல் கொ.கா., பதுக்கல் கொ.கா. என்று பல கொ.கா. நம்மிடையே உலவுகிறார்கள் . இதில் செல்போன் சேவை நிறுவனங்களும் அடக்கம் . இவர்களுக்காகவே  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 60 ஆண்டுகளுக்கு முன்பே  இந்தப் பாடலை ( "குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா _ இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்திருட்டு உலகமடா _ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்திருந்த மருந்து சொல்லடா ( http://jselvaraj.blogspot.com/2011/04/blog-post_27.html) " )  எழுதியுள்ளார் .

பெட்ரோலோ , டீசலோ , பஸ் டிக்கெட்டோ ஒரு ரூபாய் ஏறினால் கூட குதி குதி என்று குதிக்கும் நாம் , செல்போன் சேவை நிறுவனங்கள் ஓசையில்லாமல் கூட்டிய 4 முதல் 5 ரூபாயை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு விட்டோம் . முன்பு 50 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் 43 அல்லது  42 ரூபாய் ஏறும் . ஆனால் தற்போது 50 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் 39 அல்லது  38 ரூபாய் மட்டுமே ஏறுகிறது . நம் செல்போனில் இருக்கும் 1 ரூபாயின்  மதிப்பு 1.31. ஒரு காலுக்கு 60 பைசா என்று சொல்லப்பட்டாலும் நாம் உண்மையில் செலவழிப்பது 78 பைசா . இது பகல் கொள்ளை தானே .

 மதிப்பு கூட்டு சேவை ( Value Added Services) என்ற பெயரில் இவர்கள் செய்யும் கொடுமை ஏராளம் . உங்கள் செல்போனில் 20 ரூபாய்க்கு மேல் இருந்தால் ஏதோ சர்வீசை  Telecommunication call மூலமாகவோ  , SMS மூலமாகவோ,Flash SMS மூலமாகவோ  உங்கள் தலையில் கட்டி மாதம் மாதம் உங்கள் பணத்தைச் சுரண்டி  விடுவர் . Telecommunication Call மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அதிகம் . மிகவும் முக்கியமான வேலையில் இருக்கும் பொது இவர்களது call வரும் , முக்கியமான call ஆக இருக்குமோ என்று நினைத்து ஆன் செய்தால் " உங்களுக்கு எந்தப்பாடல் வேண்டும் என்று இயந்திரக் குரல் ஒலிக்கும் ". இதைவிடக் கொடுமை Flash SMS தான் , போனை ஆன் செய்யும்போதே நம் கணக்கில் இருந்து பணம் திருப்பட்டுவிடும் . இதுபோல் எனக்கு இரண்டுமுறை நிகழ்ந்துள்ளது . உண்மையில் Caller tone காக ஒரு மாதத்திற்கு எடுக்கப்படும் தொகை  ரூபாய் 30 , ஆனால் உண்மையில் நாம் செலவளிப்பது  40
 ரூபாய் . படித்தவர்களை விட செல்ல்போனைச்  சரியாக பயன்படுத்தத் தெரியாத பாமர மக்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர் .

இதற்க்கெல்லாம் என்ன தான் தீர்வு ?

செல்போன், ஒரு எளிமையாக்கப்பட்ட ஒரு தொலைதொடர்பு கருவி அவ்வளவுதான் . பொதுவாக ஒரு பொருளின் விலை உயர்ந்தால் என்ன செய்வோம்  , பணம் அதிகம் இருப்பவர் கவலைப்பட மாட்டார்கள் . ஆனால் , நடுத்தரவர்க்கம் கவலைப்படும் . அந்தப்பொருளின் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்யும் . அது போலத் தான் இதற்கும் . முடிந்தவரை செல்போனில் பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் . உங்கள் பொன்னான நேரமும் மிச்சம் , உங்கள் பணமும் மிச்சம் ஒரு சில சிட்டுக்குருவிகளும் உயிர் பிழைக்கும் .

Customer Care கு போன் செய்து தற்போது ஏதேனும் சர்வீஸ் இருந்தால் அதை நீக்குங்கள் .தற்போது  ஒரே முறையில் சர்வீசை நீக்க மாட்டார்கள் .மீண்டும் மீண்டும் முயற்சி செய்துதான் நீக்க வேண்டியுள்ளது . 

இரண்டாவதாக Do Not Disturb சர்வீசை உறுதி செய்யுங்கள் . இதைச் செய்தால் உங்களுக்கு செல்போன் நிறுவங்களிடமிருந்து எந்தவிதமான ( Telecommunication call , SMS, Flash SMS ) தொல்லையும் இருக்காது . இவை தான் தற்காலிக தீர்வு . நிரந்தர தீர்வு என்பது செல்போனே பயன்படுத்தாமல் இருப்பது .Do Not Disturbகு 1909 முதலில் START 0(zero) என்று  SMS செய்யுங்கள் . பிறகு Y என்று அதே 1909 கு SMS செய்யுங்கள் . பிறகு அவர்கள் தொல்லை இருக்காது .

செல்போன் பயன்படுத்தினால் மூளை கேன்சர் வரும்( Cell phone causes brain cancer ) !

செல்போன் பயன்படுத்தினால் மூளை கேன்சர் வரும் என்பதை சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது . தொடர்ந்து செல்போனை பயன்படுத்தும் போது மூளை கேன்சரை உருவாக்குகிறது . பெரியவர்களை விட வயது 1 முதல்  12  வரை உள்ள குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் . காரணம் , அவர்களின் மண்டை ஓடு அந்த வயதில் முழு வளர்ச்சி பெற்று இருக்காது . அதனால் மின்காந்த அலைகள் ( Electro Magnet Waves) அவர்களை அதிகமாக பாதிக்கிறது .முடிந்த வரை  குழந்தைகளை செல்போன் பேச அனுமதிக்காதீர்கள் . 
மொத்தத்தில் முடிந்த அளவிற்கு செல்போன் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்வது தான் எல்லோருக்கும் நல்லது !

எல்லோருமே திருடர்கள் தான் !

மேலும் படிக்க :


.........................................

Monday, June 13, 2011

சிவில் சர்வீசஸ் தேர்வில் கேள்விகள் தமிழிலும் இருக்க வேண்டும் !

ஜூன் 12 ஆம் தேதியன்று நாடு முழுவதும் UPSC நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது . இதில் கேள்விகள் ஆங்கிலத்திலும் , ஹிந்தியிலும் இருந்தன . ஹிந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்களுக்கு இந்தத் தேர்வு கொஞ்சம் எளிதாக இருந்து இருக்கும் . காலையில் நடந்த பொதுஅறிவு தேர்வை விட மதியம் நடந்த ஆங்கிலத் திறனறிவு தேர்வில் மொழியால் பாதிப்பு அதிகம் . 

ஒரே தீர்வு தான். ஆங்கிலம் , ஹிந்தி இவற்றுடன் பிராந்திய மொழியிலும் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் . ஹிந்திக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் நிறுத்தப்பட வேண்டும். ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை ஆளும் அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும். 


மேலும் படிக்க :

...................................

சென்னையில் மீண்டும் பறவைகளின் சங்கீதம் !

சென்னைக்கும் பறவைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா ? சென்னை , கிராமங்களின் கூட்டமாக இருந்த காலத்தில் கேட்ட பறவைகளின் சங்கீதம் இப்போது மீண்டும் கேட்க ஆரம்பித்துவிட்டது . தினமும் இயந்திர ஒலிகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் காதுகளுக்கு இந்த பறவைகளின் சங்கீதம் ஒரு ஆறுதல் . இயந்திர ஒலிகளை மட்டுமே விரும்பிக் கேட்கும் ஒரு சிலருக்கு இது எரிச்சலைக்கூட உருவாக்கலாம் . ஆனாலும் இது நம்  ஆரோக்கியத்தின் அடையாளம் .  

சென்னையில் மரம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் குயில் இருக்கிறது . காலை , மதியம் ,மாலை , இரவு என்ற பேதமில்லாமல் எல்லா நேரமும் கூவிக் கொண்டே இருக்கிறது . எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை குயிலின் சங்கீதம் . ஒரு சில இடங்களில் தனியாகவும் மற்ற இடங்களில் இயந்திர ஒலிகளுடன் இணைந்து தான் கேட்கிறது , குயிலின் சங்கீதம் . பிரித்து உணர்வது நம் திறமை . 

முன்பு காகங்களும் , கொஞ்சம் புறாக்களும் மட்டுமே பறந்த  சென்னை நகரத்தில் மைனாக்களும் ,  சிட்டுக்குருவிகளும் ( ஒலிகளை எழுப்பிக் கொண்டும் ) , தட்டாம் பூச்சிகளும் , பட்டாம்பூச்சிகளும் (ஒலிகளை எழுப்பாமலும் )  பறக்க ஆரம்பித்துவிட்டன . ஆனால் , எண்ணிக்கை மிகக் குறைவு . கடந்த சுதந்திர தினத்தின் போது சென்னை கோட்டையில் பச்சைக்கிளிகளைப் பார்க்க முடிந்தது . அதன் பிறகு இன்று வரை பச்சைக்கிளிகளைப் பார்க்க முடியவில்லை . 

பெரியார் ரோடு பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்தில் உள்ள பூங்காவில் மதிய நேரங்களில் மைனாக்களைப் பார்க்க முடியும் . சமீபத்தில் ஒருநாள் காலை 6 மணிக்கு மெரினா கடற்கரைக்குச்  சென்றபோது கடற்கரைப்பகுதி முழுவதும்  நூற்றுக்கணக்கான புறாக்கள் மண்ணைக் கிளறி தங்கள் உணவைத் தேடித் தின்றதைக் காண முடிந்தது . கடற்கரையை ஒட்டியிருந்த ஒரு மரத்திற்கு அடியில் பத்துக்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் இருந்தன . போக்குவரத்து நெரிசல் குறைவான தெருக்களில் ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகளைக் காண முடியும் . முன்பு , எங்குமே இவற்றைக் காண முடியாது .

சிறிய செடிகள் , எவ்வளவு நெருக்கடியான இடத்திலும் முளைத்து விடுகின்றன     .செடிகளில் இருக்கும் பூவில் தேனை எடுக்க பட்டாம்பூச்சிகள் எங்கிருந்தாவது வந்து விடுகின்றன . பறவைகளைக் கூண்டில் அடைத்து வளர்ப்பதற்குப் பதில் ஒரு பழ மரத்தை வளர்த்தாலே போதும் பறவைகள் மரத்தைத் தேடி வந்துவிடும் .காகங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை . அவை , நம் சகோதரனாய் மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன . இயற்கையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இதை தான் . எதவும் தனக்காக மட்டுமே வாழாமல் எல்லோருக்காகவும் வாழ்ந்து எல்லோருக்கும் பலனைக் கொடுத்து , எல்லோரிடமிருந்தும் பலனைப் பெறுகின்றன . 

தினமும் பயணம் செய்தே ஆகவேண்டிய சூழ்நிலை ,  நகர வாழ்க்கையின் ஓர் அங்கம் . முடிந்தவரை பயணத்திற்கு தனிநபர் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள் . பேருந்துக்காக நிற்கும் போதும் , பேருந்து மற்றும் ரயிலில் செல்லும் போதும் நம் அருகில் இருக்கும் கவலை தோய்ந்த முகங்களை மட்டும் பார்க்காமல் கொஞ்சம் வானத்தையும் பாருங்கள் . முதலில் மேகங்களை ரசியுங்கள் , பிறகு பறவைகள் பறப்பதை ரசியுங்கள் .  காலை மற்றும் மாலையில் சூரியனையும் , இரவில் நிலவையும் ரசிக்கலாமே !

வலுத்தது நிலைக்கும் - Survival of the fittest !

மேலும் படிக்க :

.......................

Sunday, June 5, 2011

வேடந்தாங்கலில் ஒரு நாள் !

" வேடந்தாங்கல் " - பாடப்புத்தகங்களிலும் , வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ நாளிதழ்களிலும்  இடம்பெறும் ஒரு பெயர் . ஒவ்வொரு முறையும் இந்தப்பெயரை பார்க்கும்போதும் , கேட்கும்போதும் ஒரு முறையாவது அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் துளிர் விடும் . நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு இன்று தான் வாய்ப்பு அமைந்தது . 

வேடந்தாங்கல் - இந்தியாவின் மிகப்பழமையான நீர் சார்ந்த பறவைகள் சரணாலயம் . இது 300 ஆண்டுகள் பழமையானதாகும் . 250 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூர் கிராம மக்களால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது . பறவைகளை தங்கள் குழந்தைகள் போலே பாவித்து , அவைகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டனர் . இந்த கிராம மக்களின் இந்த உயர்ந்த பண்பால் தான் நமக்கு இந்த சரணாலயம் கிடைத்துள்ளது . 1962 முதல் இந்தச் சரணாலயம் வனத்துறையின்  
கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது .

வேடந்தாங்கல் சரணாலயம் 70 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது . சென்னையிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவிலும் , செங்கல்பட்டிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது . சென்னையிலிருந்து 2 மணி நேரத்தில் சென்று விடலாம் . நானும் எனது நண்பனும் சென்னையிலிருந்து சென்றோம் . பறவைகளின் உலகைக் காண மிகுந்த ஆவலுடன் செங்கல்பட்டு வரை மின்சார ரயிலிலும் , செங்கல்பட்டிலிருந்து பேருந்திலும் சென்றோம் . பேருந்தில் செல்லும்போதே சரணாலயம் எங்கு இருக்கிறது என்று அறிய முடிந்தது . காரணம் ,சரணாலயம் இருக்கும் இடத்தில் நிறைய பறவைகள் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன .

நவம்பர் முதல் ஜூன் வரை பறவைகளைப் பார்க்க முடியும் . டிசம்பர் மாதம் பறவைகளைக் காண மிகச்சிறந்த மாதம் . காலை 6 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே அதிக பறவைகளைக் காண முடியும் . அதற்குமேல் இரை தேடச் சென்றுவிடும் . மாலை 5 க்கு மேல்தான் மீண்டும் கூட்டுக்குத் திரும்பும் . அதிகாலை அல்லது மாலை பொழுதில் அங்கு இருக்கும் வரையில் நம் பயணத்திட்டம் அமைய வேண்டும் . நாங்கள் காலை 9 மணிக்குத்தான் அங்கு சென்றோம் .சொந்த கிராமத்துக்குச் சென்றது போல உணர்ந்தோம் . சுற்றுலாப்  பகுதி என்பதற்க்கான அடையாளம் சிறிது கூட இல்லை . இந்நிலை தொடரட்டும் . நபருக்கு 5 ரூபாய் நுழைவு கட்டணம் . 9 மணி ஆனபோதும் நீரில்  இருந்த  மரங்களில்  நிறைய பறவைகள் இருந்தன . பறவைகளை காண்பதற்கு உயர்ந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது . அதில் வனத்துறை சார்பில் பைனாகுலர் மூலம் பார்க்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது . பைனாகுலர் மூலம் பறவைகளைக் காண்பது ஒரு நல்ல அனுபவம்  .  

வனத்துறை சார்பில் சுற்றுலாப்பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது . உணவு மட்டும் நாம் கொண்டு சென்றுவிட வேண்டும் .  
மாலையில் கூட்டுக்குத் திரும்பும் பறவைகளைப் பார்த்த பிறகுதான் வீட்டுக்குச்  செல்ல வேண்டும் என்று முடிவு செய்து நாள் முழுவதும் அங்கேயே தங்கினோம் . எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தோம் . மதிய உணவு கொண்டு செல்லவில்லை . 50 ரூபாய்க்கு வாங்கிய  நுங்கு தான் மதிய உணவு . காலியாக இருந்த இடத்தில் கொஞ்ச நேரம்  படுத்துத் தூங்கினோம் . தினமும் இயந்திர ஒலிகளை மட்டுமே கேட்ட எங்கள் காதுகளுக்கு இன்று நல்ல விருந்து ,  இடைவிடாமல் நாள் முழுவதும் பறவைகளின் ஒலிகளை உண்டு மகிழ்ந்தன .  

குறைந்த உயரம் முதல் அதிக உயரம் வரை வானத்தில் பறவைகள் வட்டமாக  
பறந்து கொண்டிருந்தன . படுத்துக்கொண்டே காரணத்தை ஆராய்ந்தபோது இரை தேடச் சென்ற மற்ற பறவைகளுக்கு இருப்பிடத்தை உணர்த்தவே அவை இவ்வாறு ( கலங்கரை விளக்கம் போல சரணாலய விளக்கமோ ! ) பறப்பதாக உணர்ந்தோம் . கிளைடர் விமானம்,  இவை பறப்பதைப் பார்த்துதான் உருவாக்கி இருக்க வேண்டும் . அவ்வளவு அழகாக காற்றில் மிதக்கின்றன .பல்வேறு வகையான பறவைகள் இருந்தன .

Spot-Billed Grey Pelican :


Snake Bird with fish in Water  :




Snake Bird in Tree :



Spoon Bill :




Large Egret :








Night Heron:




 Painted Stork :










Glossy Ibis :




Open-billed Stork :



இணையத்தின் உதவியால் இந்த படங்கள் கிடைத்தன . இவை மட்டுமல்ல இன்னும் நிறைய பறவைகள் இருந்தன . பாம்பு பறவை ( Snake Bird ) அவ்வளவு அழகு . நீருக்குள் மூழ்கி மீனைப் பிடிக்கிறது . மீனைப் பிடித்தவுடன் கரைக்குச் சென்று மீனை உண்ணுகிறது . பறவைகள் தண்ணீரின்மேல் இறங்கும் முறை அவ்வளவு அழகு . பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருந்தது . பார்த்துக்கொண்டே தான் இருந்தோம் . 

வேடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரிடம் பேசினோம் . இந்தப் பறவைகள் மற்றும் அங்கு இருந்த குரங்குகள் , இவற்றை தங்கள் குடும்பத்தில் உறுப்பினர்களாகவே கருதுகிறார்கள் . இவற்றுக்கு யாரும் எந்த தீங்கும் செய்வதில்லை . அவர் சினிமா பார்த்து 20 வருடங்கள் ஆகின்றதாம் ( கொடுத்து வைத்தவர் !) . விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார் . தமிழ்நாடு முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது . இதற்குத் தீர்வு ?

மாலை 5 மணிக்கு மேல் இரை தேடச் சென்ற பறவைகள் கூட்டுக்குத் திரும்ப ஆரம்பித்தன . நான்கு திசைகளிலும் இருந்து ஏராளமான பறவைகள் பறந்து வந்து கொண்டே இருந்தன .6 மணி வரை பறவைகள் வருவதை பார்த்துவிட்டு 
வெளியே வந்தோம் . பேருந்துக்கு இன்னும் நேரம் இருந்ததால் பக்கத்தில் இருந்த வயல்வெளிக்குச் சென்றோம் . எங்கள் கண்களே எங்களால் நம்ப முடியவில்லை . தூக்கனாகுருவிகளைப் பார்த்தோம் . ஆமாம் , 15 வருடங்களுக்குப்பிறகு இப்போது  தான் நான் அவற்றைப் பார்த்தேன் . அவை ஒரு பனைமரத்தில் கூடுகள்  கட்டியிருந்தன . சில பறவைகள் கூடு கட்டிகொண்டிருந்தன . எங்களைப் பார்த்ததும் நிறைய பறவைகள் அருகில் இருந்த மின்சாரக்கம்பியில் போய் அமர்ந்தன . ஒரு சில பறவைகள் மட்டும் தொடர்ந்து கூடு கட்டிக் கொண்டிருந்தன . மின்சாரக்கம்பியில் அமர்ந்து இருந்த பறவைகள் தொடர்ந்து ஒலி எழுப்பின . அதைத் தொடர்ந்து மிஞ்சிய பறவைகளும் மின்சாரக் கம்பிக்குச் சென்றன . நாங்கள் அந்த மரத்தை விட்டு கொஞ்ச தூரம் வந்ததும் , சில பறவைகள் மட்டும் மரத்திற்குச் சென்றன . அவை  சைகை ஒலி எழுப்பியவுடன் அனைத்து பறவைகளும் மீண்டும் மரத்திற்கு வந்தன . என்ன ஒரு எச்சரிக்கை உணர்வு ! 
நன்றி - மோகன் 

இந்தப்படத்தை பெரிதாக்கிப் பாருங்கள் . தூக்கனாகுருவி கூடுகள் தெரியும் .

தூக்கனாகுருவி மட்டுமல்ல நம் ஊரில் அழிந்து வரும் பறவைகளான ரெட்டை வால் குருவி , தைலன் குருவி , மைனா , காடை ,மற்றும் செம்பூத்து போன்றவற்றைக் கண்டோம் .  பல வகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் தட்டாம்பூச்சிகளையும் காண முடிந்தது . 6 . 15 குப் பிறகு மீண்டும் சரணாலயத்தின் உள்ளே சென்றோம் . நம்ப முடியாத எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான பறவைகள் எல்லாத்திசைகளிலும் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக பறந்து வந்து கொண்டே இருந்தன . ஜூன் மாதத்தில் இவ்வளவு பறவைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை . 

நன்றி - மோகன் 


இவ்வாறு பறவைகள் பறந்து வந்தது " Fly Away Home " என்ற ஆங்கிலத் திரைப்படத்தை நினைவு படுத்தியது . 


இப்படி ஒரு வாய்ப்பை இழக்க இருந்தோம் . 6 மணிக்கு வரவேண்டிய பேருந்து வராத காரணத்தால் எங்களுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்தது . இந்த முழு நாளையும் 6 மணிக்குப் பிறகான நிமிடங்கள் முழுங்கி விட்டன . எவ்வளவு பறவைகள் ! . சூரிய உதயத்தில் புதிய நாளைத்தொடங்கி சூரிய மறைவில் முடிக்கின்றன .  இந்த பறவைகளைப்  போல் தானே முன்பு நாமும் இருந்தோம் .பறவைகள் விதைப்பதும் இல்லை ;அறுப்பதும் இல்லை !

பிரிய மனமில்லாமல் சரணாலயத்தை விட்டு வெளியே வந்தோம் . அப்போது ஒரு குறுந்தகவல் வந்தது " இன்று உலக சுற்றுச்சூழல் தினம் ( World Environment Day )" என்று . இவ்வளவு பொருத்தமான நாளில் பறவைகளின் உலகைக் கண்டது மேலும் களிப்பை உண்டாக்கியது . அடுத்த பயணத்திற்கு காத்திருக்கிறேன் !

உலக சுற்றுச்சூழல் தினம் ! 

 ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகும் .  


வனங்கள் இல்லாமல் நமக்கு வாழ்க்கை இல்லை . இயற்கை இல்லாமல் நம்முடைய ஒரு நிமிட வாழ்க்கைகூட சாத்தியமில்லை .

இயற்கையைக் கொண்டாடுங்கள் !

ஏனெனில் , இயற்கையைக் கொண்டாடாமல் வாழ்க்கையைக் கொண்டாட முடியாது .

எல்லோரும் கொண்டாடுவோம் !

மேலும் படிக்க :

ரயில் வண்டிப் பயணம் !

பூமியைக் காப்போம் வாருங்கள் !

சூரியன் - உலக சக்திகளின் மையம் !

நீரின்றி அமையாது உலகு !

..................................................

Friday, June 3, 2011

முக்கிய பிரச்சனைகளும் ஆளுநர் உரையும் !

ஆளுநர்  உரையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்: 

ரசு தேவையான நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்கள் அச்சமின்றி அமைதியான வாழ்க்கையை நடத்த வழிவகுக்கும்.

டந்த ஆட்சியில் சட்டவிரோதமான முறையில் வலுக்கட்டாயமாக பயமுறுத்தி பலருடைய
சொத்துக்கள் பறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களுக்கு மீண்டும் வழங்க ஏதுவாக புதிய சட்டம் இயற்றப்படும்.

சென்னை - ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அதுவரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படுகிறது.

ள்ளூர் கேபிள் டிவி இயக்குபவர்கள் பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டிவி சேவை அரசுடமை ஆக்கப்படும். அரசு கேபிள் டிவி நிறுவனம் புதுப்பிக்கப்படும்.

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இந்த அரசு 2011 செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் தொடங்கும். முதல் கட்டமாக 2011-2012 ஆம் ஆண்டில் 9.12 இலட்சம் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

ந்த அரசு, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதியன்று மகளிருக்கு மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கும். 2011-2012 ஆம் ஆண்டு சுமார் 25 இலட்சம் 26 குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன்பெறும்.

மச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும். ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு இது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவர இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இந்த அரசு பல்கலைக் கழகங்களைச் சீரமைத்து உலகத் தரம் மிக்க
நிறுவனங்களாக மாற்றியமைக்க சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தும்.

கலைஞர் காப்பீடு, கான்கிரீட் வீடு திட்டங்கள் ரத்து...

லைஞர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் கான்கிரீட் வீடு வழங்கும் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, அவற்றுக்கு மாற்றான திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது.

கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் 'சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்' தொடங்கப்படும். இத்திட்டத்தில் சுமார் 300 சதுர அடி அளவில் ரூபாய் 1.80 இலட்சம் செலவில் அரசே வீடு கட்டிக் கொடுக்கும்.

ற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் தேவைகளை நிறைவு செய்யத்தக்க வகையில் முழுமையாக இல்லை என்பதால், இத்திட்டம் கைவிடப்படும்.

னைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்.

தமிழுக்காக...

திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் புகழ் பெற்ற தமிழ் நூல்களை ஆங்கிலம், சீன, அரேபிய மற்றும் உலகில் அதிகம் பேசப்படும் ஏனைய மொழிகளிலும், மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு இணைய தளத்தில் இடம் பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் பெருமை உலகமெல்லாம் பரவ வழிவகை செய்யப்படும்.

ணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் தனித் தன்மை இழந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களை மீட்டெடுக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

மிழ் மொழியை இந்திய ஆட்சிமொழிகளுள் ஒன்றாக ஆக்கவும், நீதிமன்றங்களில் தமிழைப் பயன்படுத்தவும் மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்துகிறது.

சட்டமேலவை தேவையில்லை...

ம்மாநிலத்தில் சட்ட மேலவை ஒரு தேவையற்ற அமைப்பாகக் கருதப்பட்டதால் 1.11.1986 அன்று எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்டது. எனவே, மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டுவரத் தேவையில்லை என இந்த அரசு கருதுகிறது. சட்டப் பேரவையில் இப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும்.

மிழகத்தில் லஞ்ச ஊழல் அற்ற நிலைமையை உருவாக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

முதியோர் ஓய்வூதியத் திட்டம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை, பயனாளிகள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதன் மூலம் வங்கி சேவையாளர் உதவியுடன் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய திட்டம் வரும் 2011 செப்டம்பர் முதல் நாள் முதல் செயல்படுத்தப்படும்.

விலைவாசியை கட்டுப்படுத்த புதிய திட்டம்...

ரூபாய் 50 கோடி ஒதுக்கீட்டில் 'விலை கட்டுப்பாட்டு நிதி' உடனடியாக ஏற்படுத்தப்பட்டு வட்டியில்லாக் கடனாக கூட்டுறவு அமைப்புகளுக்கு வழங்கி அத்தியாவசியப் பொருட்களின் விலை அளவுக்கு அதிகமாக உயரும்போது அத்தகைய பொருட்களை உற்பத்தி மையங்களில் நேரடியாக வாங்கி அடக்க விலையிலேயே நுகர்வோருக்கு விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும்.

நாட்டின் பொருளாதார உற்பத்தி மதிப்பில் மகாராஷ்டிரம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களுக்கு
அடுத்தபடியாக மூன்றாவது அதிக பங்களிப்பு தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

'மிழ்நாடு 2025 தொலைநோக்கு பார்வைத் திட்டம்' ஒன்றைத் தயாரித்து வளர்ச்சிக்குத் தடையாக உள்ள காரணிகளைக் கண்டறிந்து களைவதுடன், வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய முக்கிய கட்டமைப்புத் திட்டங்களைக் கண்டறிந்து முன்னுரிமையில் செயல்படுத்தி தமிழகத்தை
வளர்ச்சிப் பாதையில் மீண்டும் கொண்டு செல்ல பாடுபடும்.

வேளாண்மைக்கு...

முதன்மை துறையான விவசாயம், கால்நடைத் துறை, மீனளம் போன்றவற்றின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தும். விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் தமிழ்நாட்டிலுள்ள 75 இலட்சம் சிறு குறு விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் வகையிலும் பண்ணைசார் சிறப்புத்
திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

வேளாண் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் பங்களிப்புடன் விவசாய பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சந்தை வசதி, சேமிப்புக் கிட்டங்கிகள் மற்றும் குளிர் சாதன வசதிகளை உருவாக்குதல் போன்ற பணிகளையும் இந்த அரசு தீவிரமாக மேற்கொள்ளும்.

மாநில நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தி பாசன ஆதாரத்தைப் பெருக்கும். இதனால்
வெள்ள பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதுடன், இத்தகைய கால்வாய்கள் நீர்வழிப் போக்குவரத்திற்கும்
பயன்படுத்தப்படும்.

மத்திய அரசுடன் சுமுக உறவு... 


த்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு சுமூகமாக இருக்கும் வகையில் இந்த அரசுசெயல்படும். மாநில அரசின் தன்னாட்சி நிதி அதிகாரம் பாதிக்காத வகையில் சரக்கு மற்றும் சேவை வரியை உள்ளடக்கிய மறைமுக வரி முறைகளில் கொண்டுவரப்படும் வரிச் சீர்திருத்தத்தை இந்த அரசு வரவேற்கும்.

விற்பனை வரி மட்டுமே மாநிலத்திற்கு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ள நிலையில், மாநில அரசுகளின் வருவாயை பாதிக்காத சரக்கு மற்றும் சேவை வரி முறையை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.

நதிநீர் பிரச்னை...

மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணவே இந்த அரசு விரும்புகிறது. இதற்கு வாய்ப்பு கிட்டாத சூழ்நிலையில் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த அரசு தயங்காது.

முல்லைப் பெரியாறு மற்றும் பிற நதிநீர்ப் பிரச்சனைகள் நீதிமன்றங்களுக்குச் சென்றுவிட்ட நிலையில் ஒரு நிலையான தீர்வினை எட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும். முல்லைப் பெரியாறு அணை குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு ஒரு நியாயமான முடிவு கிடைக்கும் என இந்த அரசு நம்புகிறது.

துரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி பாதையை அனைத்து வசதிகளும் கொண்ட தன்னிறைவு வளர்ச்சிப் பாதையாக மாற்றி தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதிதாக வளர்ச்சி பெற்று வரும் துறைகளான உயிரி தொழில்நுட்பம், நானோ தொழில் நுட்பம் மற்றும் மருந்தியல் போன்ற துறைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த அரசு செயல்படும்.

கவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த சேவைகளை வழங்கும் முக்கிய மையமாக தமிழகத்தை மாற்றும் நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும். இரண்டாம் நிலை நகரங்களில் தொலை தொடர்பு பூங்காக்கள் மூலம் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி இத்துறையின் வளர்ச்சியை
இரட்டிப்பாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கிராமப்பகுதிகளில் உள்ள வணிக வெளிப்பணி மையங்கள் வலுவாக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி பரவலாக்கப்படும்.

மின்வெட்டு பிரச்னை..

மின்சாரம், சாலை வசதி, நகர்ப்புற கட்டமைப்புகள், வீட்டு வசதி ஆகிய உட்கட்டமைப்புகளில்உள்ள குறைவைப் போக்க தொடர்ந்து திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி தமிழ்நாடு நீட்டித்த பொருளாதார வளர்ச்சியைப் பெற வழிவகை செய்யப்படும்.

 டந்த ஆட்சி காலத்தில் மின் பற்றாக்குறையினால் இம்மாநிலத்தின் தொழில் வளர்ச்சிவெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு மாநிலத்தின் மின் துறையை சீரமைத்து தமிழகத்தை உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்.

திர்கால கூடுதல் தேவையை எதிர்நோக்கி நீண்ட கால மின் செயல்முறை திட்டங்கள் வகுக்கப்பட்டு தொழில் துறைகள் மற்றும் பிற துறைகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

டனடித் தீர்வாக, சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், காற்றாலை மின் உற்பத்தியை முழுமையாக பயன்படுத்துதல், தொழில்நுட்ப, வணிக ரீதியான இழப்பைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ரு நம்பகத்தன்மையுள்ள மாற்று எரிபொருள் ஆதாரமாக மரபுசாரா எரிசக்தியான காற்று, சூரிய ஒளி மற்றும் உயிரி எரிபொருள் மூலம் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும். மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதற்காக தனியாக ஒரு கொள்கையை இந்த அரசு வகுக்கும்.

மோனோ ரயில்...

ற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோமீட்டர் அளவுக்கேதிட்டமிடப்பட்டுள்ளது. மூலதனச் செலவு அதிகமாக உள்ள இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர மிகுந்த காலமாகும்.
எனவே, இந்த அரசு சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட மோனோ இரயில் திட்டத்தை செயல்படுத்தும்.

முதற்கட்டமாக 111 கிலோமீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக 300 கிலோமீட்டர் வரை விரிவுபடுத்தப்படும்.
கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலைக்குறைக்க மோனோ இரயில் திட்டம் செயல்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

நாடாளுமன்றத்தில், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு சட்ட முன்வடிவை விரைவில் கொண்டு வரவேண்டும் என இந்த அரசு வலியுறுத்துகிறது.

கிராமப்புரங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதி, 24 மணிநேர மருத்துவ வசதி, தரமான கல்வி, அனைத்து பருவ காலங்களிலும் பயன்படுத்தக்கூடிய சாலைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த அரசு பாடுபடும்.

சோதனை அடிப்படையில் கிராமப்புரங்களில் சூரிய எரிசக்தியைப் பயன்படுத்தும் தெருவிளக்குகள் அமைக்க இந்த அரசு முயற்சி மேற்கொள்ளும்.

 மிழகத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் 60 இலட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும்,

40 இலட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கக்கூடிய வகையில் சர்வதேச சுற்றுலா மையமாக மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பாலிதின் பைகளுக்கு தடை...

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க இந்த அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும். மக்கிப் போகாத ப்ளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு சிறப்பு தகவல் கல்வித் திட்டம் தொடங்கப்படும்.

முதன்முறையாகவோ அல்லது மறு சுழற்சி மூலமோ தயாரிக்கப்படும் 60 மைக்ரான் மற்றும் 8ஒ12 அளவுக்குக் குறைவான பாலிதின் பைகளுக்கு தடை விதிக்கப்படும். இந்திய தர நிர்ணயக் கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு ப்ளாஸ்டிக் பொருட்களுக்கான மறுசுழற்சிமுறை கடுமையாக ஒழுங்கு முறைபடுத்தப்படும்.

ரசு அலுவலர்கள் சுதந்திரமாகவும், ஊக்கமுடனும் செயல்பட உரிய சூழ்நிலையை ஏற்படுத்தித்
தந்தால்தான் அரசின் திட்டங்கள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட இயலும் என இந்த அரசு கருதுகிறது.

இலங்கைத் தமிழர்கள்..

லங்கைத் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்கள் சீரமைக்கப்பட்டு அவர்கள் தமிழகத்திலேயே கௌரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

ந்த முகாம்களில் தரமான இருப்பிடம், குடிநீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவை செய்து தரப்படும். இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகள் கல்வி பயிலத் தேவையான உதவிகளை வழங்குவதுடன் அவர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான
சிறப்பு வேலை வாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

மிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும்.
இலங்கைப் போரினால் இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் மாண்டு போன நிலையில்மீதமுள்ள இலங்கைத் தமிழர்களும் தங்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகள் போல் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

லங்கைத் தமிழர்கள் அவர்கள் சொந்தப் பகுதிகளிலேயே மறுவாழ்வு பெறுவதற்கான உடனடி நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வலியுறுத்துமாறு மத்திய அரசை இந்த அரசு கேட்டுக்கொள்கிறது.


இவை அனைத்துமே சிறந்தவை தான் . கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் கான்கிரீட் வீடு வழங்கும் திட்டத்தை ரத்து செய்தது மிகச் சரியான நடவடிக்கை இந்த இரு திட்டங்களிலும் மக்களை விட மற்றவர்களே அதிகம் பயன்படுவர் . கேபிள் , தமிழ் , விவசாயம் , நதிநீர்  , மின்வெட்டு  , போக்குவரத்து நெரிசல் , சுற்றுச்சூழல் , அகதிகள் முகாம் என்று ஏறக்குறைய எல்லா பிரச்சனைகளும் தீர்வுகள் சொல்லப்பட்டுள்ளன . இதைச் சரியாக செயபடுத்துவதில் தான் இந்த அரசின் வெற்றியும் தோல்வியும் அடங்கியுள்ளது . இன்னும் இரண்டு விசயங்கள் . கிராமம் மற்றும் நகரங்களில் பயன்தரும் மரங்கள் நட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்  . நடைபாதையில் வசிப்பவர்கள் பற்றி எந்த ஆட்சியாளரும்  கருத்தில் கொள்ளவதில்லை அவர்களின்  வாழ்க்கைதரம் உயர உரிய நடவடிக்கை தேவை . அவர்களும் இந்தியர்கள் தானே , அவர்களுக்கும் எல்லா உரிமையும் உண்டு .

உலகம் , எல்லோருக்கும் சொந்தமானது ! 

பப்ளிகுட்டி : 
கடந்த ஏப்ரல் 20 , 2011 நான் குறிப்பிட்ட தமிழகத்தின்  10 முக்கிய பிரச்சனைகளில்  ( URL -: தமிழகத்தின் முதல் 10 முக்கியப் பிரச்னைகள் ! )  8 பிரச்சனைகளுக்கு இந்த ஆளுநர் உரையில் ஏறக்குறைய  தீர்வு உள்ளது . மீதி இரண்டு . 1 . இந்த முறை சரியான அமைச்சர்களே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் .  2 . சிந்திக்காத ஒன்றே  ஒன்று நடைபாதையில் வசிப்பவர்கள் வாழ்க்கைத்தரம்  . 

நன்றி : விகடன் .
 
மேலும் படிக்க :



..................................  

Wednesday, June 1, 2011

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !

M.R.ராதா , ஈடு இணையில்லாத உன்னதமான  கலைஞர் , எதற்கும் , யாருக்கும் அஞ்சாத மகா துணிச்சல்காரர் , பெரியாரின் வழி நடந்த பெரியார் . தனது நாடகங்கள் மூலம் பகுத்தறிவு கருத்துகளை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பரப்பியவர் . நடிப்பில் யாரும் தொட முடியாத உயரத்தைத் தொட்டவர் . இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் . ஒரு முறை மலேசியா சென்ற போது அவர் பேசியதைக் கேளுங்கள் . 


எவ்வளவு விசயங்களைப் பேசி இருக்கிறார் என்று பாருங்கள் . எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேச்சு .அரசியல் , மதம் , சினிமா , MGR , சினிமாக்காரர்கள் , கூத்தாடிகள் , மன்னர்கள் , பெரியார் , ஜெயில் , கடவுள் என்று நிறைய பேசி இருக்கிறார் .

சுயமரியாதை மிக்க ஒளிவு மறைவற்ற தமிழனின் பேச்சைக் கேட்ட திருப்தி!

மேலும் பார்க்க  :

நீயா நானா ? கோபிநாத்தின் ஆவேசம் ! 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...! 

MGR அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் !

.................................

Tuesday, May 31, 2011

குங் பு பாண்டா 2 ( Kung Fu Panda 2) - அற்புதமான கலைப்படைப்பு !

குங் பு பாண்டா 2 ( Kung Fu Panda 2)  , சண்டைகாட்சிகள் நிறைந்த அதிரடியான நகைச்சுவைத் திரைப்படம் . ஜாக் பிளாக் ( Jack Black ) , ஏன்ஜிளினா ஜூலி ( Angelina Jolie ) , ஜாக்கி ஜான்  ( Jackie Chan ) மற்றும் பலர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர் . குங் பு பாண்டா முதல் பாகம் 2008 ஆண்டு வெளிவந்து மிகபெரிய வரவேற்பைப் பெற்றது . இரண்டாம் பாகமும் அசத்தலாக உள்ளது . அதுவும் முப்பரிமாணத்தில் ( 3 D ) மிகவும் அருமை .

பொம்மை படம்  ( நம் பாசையில் ) என்று ஒதுங்கி விட வேண்டாம் . புதுப்படம் எதாவது பார்க்க வேண்டும் என்று விரும்பினால் இந்தப்படத்திற்க்குச் செல்லுங்கள் உங்கள் பணத்துக்கேற்ற பலன் கிடைக்கும் .படம் முழுவதும்  ( கிராபிக்ஸ்  உதவியால் ) கலையம்சங்கள் நிரம்பிக் கிடக்கின்றன . ஒவ்வொரு காட்சியும் அற்புதம் . 
குறிப்பிடத்தக்க இன்னொரு முக்கிய விசயம் " அழகுணர்ச்சி " . பொதுவாகவே சிறந்த ஆங்கிலப்படங்களில் அழகுணர்ச்சி அதிகமாகவே இருக்கும் . சமீப தமிழ் படங்களில்  அழகுணர்ச்சி என்பதே இல்லாமல் போய்விட்டது . நம் படங்களில் அழகுணர்ச்சி மிகக்குறைவாகவே உள்ளது . ஆனால் , பழைய தமிழ் படங்களில் அழகுணர்ச்சி மிகுதியாக இருக்கும் . சின்ன சின்ன விசயங்களே அழகானவை . இந்தப்படத்தில் அழகுணர்ச்சி படம் முழுவதும் இருக்கிறது .


படத்தின் நாயகன் பண்டாவின் அட்டகாசம் நம்மை படம் முழுவதும் சிரிக்க வைக்கிறது .  படத்தின் முடிவு காட்சிகளில் அதிரடியான சண்டைகளுக்கு மத்தியிலும் கூட  நம்மை  சிரிக்க வைக்க மறக்கவில்லை . டிராகன் வாரியர்ஸ் அணி அதிகமான சாகசங்களை நிகழ்த்திக் காட்டுகிறது . ஜாக் பிளாக் - ன் பின்னணி குரல் படத்தின் மிகப்பெரிய பலம் . ஒட்டுமொத்த  கலைஞர்களின்  உழைப்பால்  நமக்கு ஒரு சிறந்த திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு  உருவாகியுள்ளது .  உங்கள் உதடுகள் சிரிக்கத் தயாராக இருந்தால் உடனே சென்று படத்தைப் பாருங்கள் .


அழகுணர்ச்சி வாழ்க !

மேலும் படிக்க :

5 ரூபா -குறும்படம் !

எது நிரந்தரம் ? 

சூரியன் - உலக சக்திகளின் மையம் ! 


Home Page   


...................................

Saturday, May 14, 2011

ஜனநாயகத்தின் வெற்றி !

நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் வெற்றி பெற்றுள்ளது . இணையப்பதிவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துள்ளது . ஆட்சி மாற்றம் அவசியம் தேவை . ஒட்டு மொத்தத்தில் இது ஜனநாயகத்தின் வெற்றி . எவ்வளவு அட்டூழியங்கள் நிகழ்ந்தாலும் 5 வருடத்தில் ஆட்சியை மாற்றும் அதிகாரம் நம்மிடம் உள்ளது . இது ஊழல்வாதிகளுக்கும் , அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்களுக்கும் விழுந்த சவுக்கடி .

கடந்த ஆட்சியில் எந்த அமைச்சரும் எதுவும் செய்யவில்லை , ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட பணம் எங்கே ? அதனால் தான் ஒரு சிலரைத் தவிர ஒட்டு மொத்த அமைச்சர்களும் மிக மோசமான தோல்விகளை சந்தித்துள்ளனர் . அடுத்து வரும் அமைச்சர்களுக்கு இது ஒரு பாடம் . அமைச்சர்களாக வருபவர்கள் தங்கள் தொகுதிக்கு மட்டும் நல்லது செய்தால் போதாது  , தங்கள் துறை சார்ந்த பயன் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் . அமைச்சராக இருந்து உங்கள் தொகுதிக்கு மட்டும் நல்லது செய்திருந்தால் , நீங்கள் அந்த தொகுதியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களாக இருந்தாலும் தோற்க்கடிக்கப்படுவீர்கள் .

அ .தி.மு.க. அதிகம் வென்றதற்கு விஜயகாந்தும் , விஜயகாந்த் அதிகம் வென்றதற்கு அ .தி.மு.க. வும் காரணம் . இனி அ .தி.மு.க. செய்யவேண்டியது . இனி எந்த தேர்தலிலும் எந்தக்காரணம் கொண்டும் பா.ம.க. வையும் ,வி .சி .யையும், காங்கிரசையும் கூட்டணியில் சேர்க்கக் கூடாது . சட்டம் ஒழுங்கை சீர் செய்து , மின்சார தட்டுப்பாடை கட்டுப்படுத்தி , மழைநீரைச் சேமித்து , மரங்களை  வளர்த்து , விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து , கட்சிக்காரர்களின்  ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி , சமூகத்தின் அனைத்து நிலைகளிலும்  உள்ளவர்களின் வாழ்வை வளப்படுத்தும் நல்ல ஆட்சியைத் தர வேண்டும் ; இல்லையேல் 2011 பாடம் தான் உங்களுக்கும் .

இந்த முடிவின் மூலம்  மக்கள் சொல்வது என்ன?

மிழக மக்கள் பணம் கொடுத்தால் ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்ற மோசமான முத்திரை நம் மீது விழுந்து இருந்தது . அதை  இந்த தேர்தல் முடிவு மாற்றி விட்டது . நாங்கள் பணத்துக்காக ஓட்டுப்போட மாட்டோம் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளனர் .

குடும்ப அரசியலுக்கும் , குடும்ப சர்வாதிகாரத்திற்க்கும் , குடும்ப அதிகார துஷ்பிரயோகத்திற்க்கும் மக்கள் சரியான பாடம் கற்ப்பித்துள்ளனர் . அடுத்து பதவிக்கு வருபவர்களும் இது போல் நடந்து கொண்டால் அவர்களுக்கும் இதே கதி தான் .

க்கள்பணி ஆற்றாமல் அதிகமாக ஆட்டம் போட்டு பொதுமக்களுக்கு அதிக இன்னல்கள் விளைவித்தவர்களுக்கும் , ஆட்டமும் போடாமல் , மக்கள்பணியும் செய்யாமல் படுத்து தூங்கியவர்களுக்கும் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது . மக்கள்பணி செய்யாமல் இனி யாரும் ஆட்சிக்கு வர முடியாது .

லங்கைத் தமிழர்கள் கொலை செய்யப்படுவதை வேடிக்கை மட்டும் பார்த்து , போராட்டத்தை  திசை திருப்பியவர்களுக்கு மக்கள் வேட்டு வைத்துள்ளனர் . அடுத்து வருபவர் இலங்கைத்  தமிழர் நலனுக்காக பாடுபட வேண்டும் . கட்சத்தீவை மீட்க வேண்டும் .

ழல்வாதிகளை ஓட ஓட விரட்டி உள்ளனர் . இன்னும் எவ்வளவு ஊழல்கள் வெளிவரப்போகிறதோ தெரியவில்லை . இனி ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது .
திகமான மக்கள் ஓட்டுப்போட தேர்தல் ஆணையத்தின் நடுநிலையான நடவடிக்கைகளே காரணம் . மக்களின் ஓட்டுப் போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது .

க்களின் சிந்திக்கும்  ஆற்றலை என்னவென்று  சொல்வது. சீரிய முறையில் சிந்தித்து மிகக்கவனமாக ஓட்டுப் போட்டுள்ளனர் . மக்களின் மனநிலையை யாராலும் ஊகிக்க முடியவில்லை . கருத்துக்கணிப்புகளில் கட்டுப்படவில்லை . இந்தியா டுடே கருத்துக்கணிப்பு  மட்டுமே ஓரளவு பொருந்தியுள்ளது .

இணையப்பதிவர்கள் அனைவரும் சிறந்த  முறையில் செயல்பட்டுள்ளனர் . கடந்த 5 ஆண்டுகால ஆட்சியை அக்குவேர், ஆணிவேராக அலசி தங்கள் கருத்துகளை முன்வைத்தனர் . இந்த பதிவுகளைப் படித்து பத்துபேர் மாறினால் கூட அது நமக்கு வெற்றி தான் . இனி தான் நமக்கு மிகப்பெரும் பணி உள்ளது . இப்போது அமையப்போகும் ஆட்சியை சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும் . சின்ன தப்புகளுக்கும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் . சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்கள் நலம் பெற வேண்டும் . விவசாயமும்  ,சுற்றுச்சூழலும் முக்கியத்துவம் பெற வேண்டும் . 

இது ஜனநாயகத்தின் வெற்றி . தப்புச்  செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் .   

மாற்றம் ஒன்றே மாறாதது !

மேலும் படிக்க :



...................................................... 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms