Saturday, January 28, 2017

தமிழர்களின் மரபை மீட்போம் !

நாம் கொண்டாடும் பண்டிகைகளில் ஒரே அர்த்தமுள்ள பண்டிகை பொங்கல் மட்டுமே. இந்தியா முழுவதுமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை கூட ஒரு குறிப்பிட்ட மதத்தை முன்வைத்து , ஒருவரை கொன்றதற்காக கொண்டாடப்படுகிறது. ஆனால் பொங்கல் அப்படியல்ல. எந்த மதத்தையும் முன்வைக்காமல் வாழ்வில் பங்கு பெறும் அனைத்திற்கும் நன்றி செலுத்தும் ஒரு பண்டிகை தான் பொங்கல். இது , 'பழையன கழிதல் புதியன புகுதல் ' என்று நம் இல்லத்தை மட்டுமல்லாமல் நம் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகிறது.
உலக சக்திகளின் மையமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி செலுத்துகிறோம். பொங்கல் செய்வதற்காக அதில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களிலும் ( பச்சரிசி , வெல்லம் , ஏலக்காய் , முந்திரி , திராட்சை , நெய் ) அர்த்தம் இருக்கிறது. ஒரு மாட்டோட அருமையைப் பற்றி ஒரு விவசாயியிடம் கேட்டுப் பாருங்கள் , தெரியும். மிச்சமிருக்கும் விவசாயிகளை காக்கும் பணியை மாடுகள் தான் செய்து வருகின்றன. அத்தகைய முக்கியத்துவம் வாயந்த மாடுகளுக்கு நன்றி சொல்கிறோம். இப்படி பொங்கல் பண்டிகையின் போது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தமிருக்கிறது.
தீபாவளியை விட பொங்கலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஏராளமான காரணங்கள் உள்ளன. தீபாவளி , விநாயகர் சதூர்த்தியைப் போல திணிக்கப்பட்ட பண்டிகையல்ல பொங்கல். நம் வாழ்வியலுடன் கலந்த பண்டிகை. இனி , முன்பைவிட அதிக உற்சாகத்துடன் பொங்கலைக் கொண்டாட வேண்டும். தமிழன் என்ற அடையாளம் வேண்டுமென்றால் பொங்கலும் வேண்டும்.
சமீப காலங்களில் இந்த வருடம் தான் பொங்கல் பண்டிகை அதிகம் கவனம் பெற்றுள்ளது . காரணம் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு தமிழர்களின் பெருமை தான். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஜல்லிக்கட்டு என்ற ஒன்று மட்டுமே தமிழர்களின் பெருமையல்ல. கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு தமிழர்களின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் சொல்லும் நிகழ்வல்லவா ! அப்படி முக்கியத்துவம் வாய்ந்த வரலாறு  நம் கண்முன்னேயே கண்டறியப்பட்டும் இன்று மண்மூடிக் கிடக்கிறது. தமிழுக்கென்று நீண்ட நெடிய வரலாறு இருப்பதாக தொடர்ந்து பெருமிதத்திலேயே உலவுகிறோம். அதைக் காக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை.
முதலில் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு என்ன மரியாதை இருக்கிறது தமிழகத்தில் ? இங்கு ஒரு பாடமாகக் கூட தமிழ் படிப்பது கட்டாயமில்லை. எந்தவித சங்கடமும் இல்லாமல் தமிழை பிழையாக பேசுகிறோம் , எழுகிறோம் . அரசு தரும் ரசீதுகளில் கூட தமிழ் மொழிக்கு இடமிருப்பதில்லை. "தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் " என்றார் , பாரதியார். இன்று அந்த உணவினை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் தற்கொலை மரணங்கள் கூட நம்மில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. உலகவணிகமயமாக்கலால் எந்தச் சூழலிலும் எந்தப் பொருளும் எங்கும் கிடைக்கும். பணம் மட்டும் இருந்தால் போதும். மற்ற எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை.
 நாம் உண்ணும் ஒரு வாய் உணவில் எத்தனையோ முகம் தெரியா மனிதர்களின் உழைப்பு இருக்கிறது. இதில் முக்கியமானது இரவும் பகலும் ஓயாது உழைத்து உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் உழைப்பு என்பதை மறந்தே போகிறோம்.பொங்கல் என்பதை அறுவடைக்கு நன்றி சொல்லும் திருவிழா தானே. அறுவடைக்கு உதவி செய்யும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அறுவடைக்கு உதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அந்த அறுவடையைச் செய்யும் உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் அந்த உழவர்களைக் காக்க எதையும் செய்யமாட்டோம்.
கேரளக்கடல் பகுதிகளில் மீன் பிடிப்பவர்கள் இந்திய மீனவர்கள் , குஜராத் கடல் பகுதிகளில் மீன் பிடிப்பவர்கள் இந்திய மீனவர்கள் ஆனால் தமிழகக்கடல் பகுதிகளில் மீன் பிடிப்பவர்கள் மட்டும் இந்திய மீனவர்கள் என அழைக்கப்படுவதில்லை; மாறாக தமிழக மீனவர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள் மத்திய அரசாலும் , தேசிய ஊடகங்களாலும். தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதியில்லையா ? தமிழகத்தில் வாழ்பவர்கள் இந்தியர்கள் இல்லையா ?
தமிழ் எங்களின் தாய்மொழி , நாங்கள் தமிழர்கள். ஆனால் இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வதில் இன்றுவரை பெருமிதம் தான் அடைகிறோம். எங்களை இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்பட வைத்துவிடாதீர்கள். மற்ற மாநிலங்களில் துரத்தப்படும் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்படுகின்றன. கல்பாக்கம் , கூடங்குளம் அணுமின் நிலையங்கள் ,நியூட்ரினோ ஆய்வுமையம் மற்றும் பல. இனிமேலும் எல்லாவற்றையும் வேடிக்கை மட்டும் பார்க்கப் போகிறோமா ?
தமிழர்களாக நாம் முதலில் செய்ய வேண்டியது பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயப்பாடமாக ஆக்குவது. தாய் மொழியின் பெயரிலேயே மாநிலத்தின் பெயரை வைத்திருக்கிறோம். ஆனால் இங்கு பள்ளிகளில் கூட தமிழ் படிப்பது கட்டாயமில்லை. நமக்கு மொழியுணர்வு வந்துவிட்டாலே போதும். நம் உரிமைகள் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். பெரியார் பிறந்த மண் இது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தமிழகம் , பெரியாரை மறந்து விட்டது. இந்தியா , காந்தியை மறந்து விட்டது.
நாம் வாழும் சூழலுக்கு ஏற்ற உணவு , உடை , இருப்பிடம் , உழவு , வாழ்வு, பண்டிகைகள்  என ஒவ்வொன்றிலும் தமிழர்களின் மரபு என்று ஒன்று இருக்கிறது. அதை அறிய நம் வரலாற்றை நாம் வாசிக்க வேண்டும். காலத்துக்கேற்ற மாற்றத்துடன் ஒவ்வொரு விசயத்திலும் நம் மரபைக் கடைபிடிப்பது தான் நமக்கு உண்மையான பெருமை.
நமது மரபை மீட்டெடுக்க உறுதியேற்போம் !

மேலும் படிக்க :

தொடுதிரை வாழ்வும் சமூக ஊடகங்களும் !

புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் !

புகழேந்தி - மக்களின் மருத்துவர் !
..................................................................................................................................................................


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms