Saturday, April 4, 2026

என் உடல் என் மூலதனம் - போப்பு !

'உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்ற திருமூலரின் வழி வந்தவர்கள்தான் நாம். நாம் எல்லோருமே நமது உடல் குறித்த கவனம் இல்லாமல் வாழவே உலகவணிகமயமாக்கல் நம்மை பழக்கப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் , நமக்கே தெரியாமல் இயற்கையோடு இயைந்த வாழ்விலிருந்து விலகிக்கொண்டே இருக்கிறோம். உதாரணமாக இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பல நவீன கருவிகளை நாம் பயன்படுத்துகிறோம். அந்தக் கருவிகளை பயன்படுத்துவதால் நேரமும் மிச்சம், பணமும் மிச்சம் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் யதார்த்தத்தில் நேரமும் மிச்சமாகவில்லை, பணமும் மிச்சமாகவில்லை. 


வாழ்க்கை குறித்து நாம் வகுத்து வைத்திருக்கும் விசயங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலகட்டத்தில் வாழ்கிறோம். இப்படியான சூழலில் நமது உடல் குறித்தான அக்கறை நமக்கு கண்டிப்பாக தேவை என வலியுறுத்துகிறது, போப்பு எழுதிய இப்புத்தகம். நாம் நமது உடலை மதிப்பதில்லை , நமது உடல் சொல்வதைக் கேட்பதில்லை என்று பேச ஆரம்பித்து எவ்வாறு உடலுடன் நெருங்குவது என்பதையும் இப்புத்தகம் விளக்குகிறது.


குளித்தல் என்பது உடலில் சேர்ந்துள்ள வெளி அழுக்குகளை நீக்குவதற்கான செயல்பாடு மட்டுமல்ல, உடலில் தோன்றியுள்ள அதிகப்படியான வெப்பத்தை நீக்குவதும்தான் என்கிறார், போப்பு. ஆரோக்கியமான விதவிதமான குளியல் முறைகள் பற்றி இப்புத்தகத்திலும் விளக்குகிறார். அனைவரும் காலை அல்லது மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம் எனவும், அந்த நடை பயிற்சியை உங்கள் உடலுடன் பேசுவதற்கான செயல்பாடாக மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் போப்பு கூறுகிறார்.


உடலில் கழிவுகள் தேங்குவதால்தான் பல நோய்கள் தோன்றுகின்றன, என்கிறார்‌, போப்பு. இரவுத் தூக்கம் என்பது கழிவுநீக்கச் செயல்பாடு. தினமும் இரவில் நமது உடல் உறுப்புகள் மராமத்து வேலைகளில் ஈடுபடுகின்றன. நமது உடலில் ஏற்படும் சின்னச்சின்ன குறைபாடுகளே நமது உடலே இரவுத் தூக்கத்தின் மூலம் சரி செய்து விடுகிறது, என்று விளக்குகிறார். இரவுத் தூக்கம் தடைபடும்போது கழிவுநீக்கச் செயல்பாடும் தடைபடுகிறது.


நவீன வாழ்க்கை என்று சொல்லிக்கொள்ளும் தற்போதைய வாழ்க்கை முறையில் நமது தூங்கும் நேரம் மிகுந்த பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. மின்சாரம் வராத காலகட்டம் வரை 'முன் தூங்கி முன் எழுவது'-தான் நமது வாழ்க்கை முறையாக இருந்தது. இன்று வரை நமது உடலும் அதற்கே பழக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் இப்போது ' பின் தூங்கி பின் எழுகிறோம்'. அதானால் உருவாகும் சிக்கல்களையும் எதிர்கொள்கிறோம். இப்போதும் முன் எழுபவர்கள் சுறுசுறுப்பாக இருக்கின்றனர். பின் எழும் நாம் சோம்பேறிகளாகிவிட்டோம். 


இரவு 9 மணி முதல் காலை 5 வரை உறக்கத்திற்கான நேரம் என்றாலும் நாம் இரவு 10 மணிக்காவது தூங்க ஆரம்பித்து காலை 6 மணிக்குள் எழுவது அவசியமாகிறது. எப்படி இருந்தாலும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது கட்டாயம். அந்த நேரத்திலும் நாம் விழித்திருப்பதன் மூலம் நமது உடலில் கழிவுகள் நீங்குவதற்கு பதிலாக, சேர்ந்து நோயாக மாறுகிறது, என்கிறார்,போப்பு. நமது ஆரோக்கியத்திற்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.


'பசித்துப் புசி', ' அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' இந்த இரண்டு விசயங்களையும் நாம் கடைபிடிப்பதேயில்லை. இன்றைய இயந்திர வாழ்வில் பொறுமையாக சாப்பிடுவதற்கான நேரத்தைக்கூட நாம் உருவாக்கிக்கொள்ளவில்லை. வேறு வேலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நாம் உண்ணும் உணவிற்கும், உண்ணும் நேரத்திற்கும் கொடுப்பதில்லை. பசித்த பிறகே உணவு உண்ணும் வழக்கம் முன்பு பரவலாக இருந்தது. இப்போது இப்பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. மிகச்சிலரே பசித்த பிறகு உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். 


எல்லோருக்குமான உணவை உறுதி செய்ய முடியாத சூழலே நிலவுகிறது. அது ஒரு பெரும் அரசியல், ஏகாதிபத்திய அரசியல். எது எளிதில் செரிமானமாகும் உணவு, எது எளிதில் செரிமானமாகாத உணவு என்றெல்லாம் நாம் பிரித்துப் பார்ப்பதில்லை. நமது பணிகளுக்கு மத்தியில் கிடைக்கும் உணவை சாப்பிட பழகிவிட்டோம். அதே போல பசித்தாலோ பசிக்காவிட்டாலோ குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிடும் பழக்கத்தையும் உருவாக்கிக் கொண்டோம். அவ்வளவு எளிதில் இதிலிருந்து விடுபடமாட்டோம் என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக பசித்தவுடன் சாப்பிட பழக வேண்டும்.


எந்த உணவு சாப்பிடுவது ? இதுவும் பெரிய அரசியல். சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான வீடியோக்கள் இருக்கின்றன. எந்த மாறுதலுக்கும் உட்படாத நேரடியாக சாப்பிடக்கூடிய இயற்கை உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிறார், போப்பு. பழங்களை எந்த அளவிற்கு அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டுமோ அந்த அளவிற்கு எடுக்கலாம், என்கிறார்.‌ உணவின் ஊடாக சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு நேர உணவாக, குறிப்பாக இரவு நேர உணவாக பழங்களை உண்ணலாம் என்று பரிந்துரைக்கிறார். மொத்தத்தில் இயற்கையோடு இணைந்த உணவே நம் உடலுக்கு ஏற்றது. ஆனால் இப்போது நாம் உண்பதோ இயற்கையிலிருந்து விலகிய பதப்படுத்தப்பட்ட உணவுகளைத்தான். நாம் குடிக்கும் தண்ணீர் கூட மாறுதல் அடைந்த பிறகே பயன்படுத்துகிறோம். மாற்று வழிகள் நமக்கு தெரிய வருவதில்லை.


உணவு சார்ந்த விசயங்களில் மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் சவாலான காரியமாகவே இருக்கிறது. ஆரோக்கமற்றது என்று தெரிந்தும் உண்கிறோம். ஆரோக்கியமுள்ளது என்று அறிந்தும் உண்ண மறுக்கிறோம். நாம் வாழும் பகுதிகளில் விளைந்த உணவுப்பொருட்களை ஏற்றுக்கொள்ளும் அளவிலேயே நமது உடல் இருக்கிறது. ஆனால் நாம் இவற்றை ஒதுக்கிவிட்டு 'சத்தானது' என வணிக நிறுவனங்கள் விளம்பரப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அந்த உணவு சத்தானதாக இருந்தாலும் ஏதோ ஒரு நாட்டில் விளைந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை ஏற்றுக்கொள்ளும் அளவில் நமது உடல் இல்லை. 


நாம் வெப்ப மண்டலப்பகுதியில் வாழ்கிறோம் என்பதை மறந்துவிட்டு வேகவைத்த , நீர்த்த உணவுகளை தவிர்த்துவிட்டு எண்ணையில் பொறித்த உணவுகளை அதிகம் உண்டு செரிமானமாகாமல் தவித்துக்கொண்டு இருக்கிறோம். 


" இயற்கை சார்ந்து வாழ்வோம்.

  வாழ்வில் நிறைவு காண்போம்.

  வாழ்வை முழுமை செய்வோம்."


என்று இந்த ' என் உடல் என் மூலதனம் ' புத்தகத்தை நிறைவு செய்கிறார்,போப்பு . 


'காயமே இது மெய்யடா' , 'உணவுக்கு முதல் வணக்கம் ', ' என் உடல் என் மூலதனம் ' என போப்பு அவர்கள் எழுதிய உடல்நலம் சார்ந்த மூன்று புத்தகங்களை வாசித்த பிறகும் அவர் கூறியதில் மிகவும் சிலவற்றை மட்டுமே கடைபிடிக்க முடிந்திருக்கிறது. இரவு 10 மணியிலிருந்து 10.30க்குள்ளாக தூங்கப்பழகியாச்சு. ஆனால் காலையில் 6 மணிக்குதான் எழ முடிகிறது. 5 மணியிலிருந்து 5.30க்குள்ளாக எழுந்திருக்கப் பழக வேண்டும். அவர் சொன்ன குளியல் முறைகளில் சில பயன்பாட்டில் உள்ளன. உணவு சார்ந்த விசயங்களில் சிறிய மாற்றத்தைக்கூட உருவாக்க முடியவில்லை. ஆனால் முயற்சி தொடர்கிறது. எது எப்படியோ நாம் நல்லதொரு வாழ்வை வாழ நமது உடலையும், மனதையும் முறையாக பேண வேண்டும்.

மேலும் படிக்க :

உணவுக்கு முதல் வணக்கம் - போப்பு !

காயமே இது மேய்யடா - போப்பு !

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms